மோடியின் திடீர் மனைவியும்! முலாயம் சிங்கின் லூஸ் டாக்கும்! கதம்ப சோறு! பகுதி 31

கதம்ப சோறு! பகுதி 31

மோடியின் மனைவி சர்ச்சை!


    பா.ஜ.க வினரால் பிரதமர் வேட்பாளராய் அறிவிக்கப்பட்ட மோடி மீது மக்களிடையே ஒரு நல்ல இமேஜ் இருந்தது. குஜராத் கலவரம் அவருக்கு ஒரு அழுக்கு என்றாலும் நல்ல நிர்வாகி என்ற பெயர் குஜராத்தை முன்னுக்கு கொண்டு வந்த முதல்வர் என்ற இமேஜ் இருந்தது. பா.ஜ.கவிற்கும் இன்றைக்கு மோடியை விட்டால் நல்ல பிரபலமான பிரதமர் வேட்பாளர்கள் இல்லை என்றே சொல்லலாம். அத்வானிக்கு இன்னும் அந்த ஆசை இருந்தாலும் அவரது பேச்சைக் கேட்க இப்போது அந்த கட்சியில் யாரும் இல்லை. சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரும் மோடியை ஆதரிக்க வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார் மோடி. இந்த நிலையில் அவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது முதல் முறையாக மனைவி என்ற இடத்தில் யசோதா பென் என்று குறிப்பிட சர்ச்சை பற்றிக்கொண்டது. இத்தனை நாள் திருமணமாகதவர் என்று சொன்னவர் இப்போது மனைவியை அறிவித்திருப்பது எப்படி? மனைவியை காப்பாற்றாதவர் நாட்டை எப்படி காப்பாற்றப் போகிறார்? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இந்தியா போன்ற நாடுகளில் தலைவர்களின் தனிப்பட்ட ஒழுக்கம் மக்களிடையே பெரிதும் விரும்பப்படுகிறது. ஊழல்வாதிகளைக் கூட தேர்ந்தெடுப்பார்களே ஒழிய ஒழுக்கம் கெட்டவர்களை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மிக குறைவு. இதையும் மீறி சில விதிவிலக்குகளும் உண்டு.மோடி திடீரென மனைவி என்று ஒருவரை அறிவித்திருப்பது அவர் மீதான இமேஜைக் கொஞ்சம் குறைத்துதான் உள்ளது. அதையும் மீறி அவர் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

முலாயம் சிங்கின் லூஸ் டாக்!

  சமாஜ்வாதியின் தலைவரான முலாயம் தான் ஒரு லூசு என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார். மும்பையில் ஒரு பலாத்கார வழக்கில் நீதிமன்றம் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கியது. இதை விமரிசித்த அவர் பாலியல் பலாத்கார வழக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். சிறுவர்கள் விளையாட்டாக இதைக் கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னதை பல மகளிர் அமைப்புக்களும் கட்சிகளும் கடுமையாக கண்டித்தன. இதை தொடர்ந்து பல்டி அடித்த முலாயம் எங்களை விட பெண்களை மதிப்பவர்கள் நாட்டில் யாருமில்லை என்றார். பாலியல் பலாத்காரத்திற்கு என்று புதிய சட்டம் தேவையில்லை என்றுதான் சொன்னேன். இச்சட்டத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். அது தவிர்க்கபடவேண்டும் என்று சொன்னார். குற்றங்களுக்கு போதுமான தண்டனை இல்லாததால்தான் குற்றங்கள் பெருகிவருகின்றன. முலாயமின் இது போன்ற பேச்சுக்கள் குற்றவாளிகளை உருவாக்குவதாக அமைந்து விட்டது. உ.பி யின் முதலமைச்சராக இருந்த அனுபவம் மிக்க அரசியல்வாதியாக நடந்து கொள்ள வில்லை இவர். இவரையெல்லாம் நம்பி ஆட்சியைக் கொடுத்த அந்த மக்களை என்னவென்று சொல்லுவது?

ஆழ்துளை கிணறுகளால் தொடரும் விபத்துக்கள்!

   இப்பொதெல்லாம் ஆழ்துளை கிணறுகளில் தவறிவிழுந்த செய்திகள் அதிகமாக செய்தித்தாள்களில் வருகின்றன. ஒருமாதம் முன்பு ஒரு சிறுமி பலியான சோகம் முடிவதற்குள் தமிழ்புத்தாண்டு அன்று ஒரு மூன்று வயது சிறுவன் திருநெல்வேலியில் ஆழ்துளை கிணற்றில் விழ ரோபோ உதவியுடன் மீட்புக் குழுவினர் மீட்டனர். சிறுவன் நலமாக தப்பிப்பிழைத்தது கடவுள் செயல். இது முடிவதற்குள்ளாகவே திருவண்ணாமலையில் ஒரு மூன்றுவயது குழந்தை ஆழ்துளை கிணற்றில் நேற்று விழுந்துவிட்டது. இந்த குழந்தையை மீட்கப் போராடி வருகின்றனர். ஆழ்துளை கிணறுகளை விவசாயிகள் தோண்டுகின்றனர். பயன்பாடு அற்ற நிலையில் அதை தூர்த்துவிடுவதோ அல்லது மூடி போட்டு மூடிவிடுவதால் இத்தகைய விபத்துக்களை தவிர்க்கலாம் என்ற அடிப்படை அறிவு கூடவா நம் விவசாயிகளிடம் இல்லை.  அல்லது வயலில் இருக்கும் இந்த கிணற்றிற்கு விளையாட பிள்ளைகள் செல்ல எப்படி அனுமதிக்கின்றனர் என்பதும் புரியவில்லை! அரசும் இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. அந்த அந்த ஒன்றியத்தில் ஆழ்துளை கிணறு தோண்ட அனுமதி அளித்து இருப்பார்கள். அப்படி அனுமதி அளிக்கும் போது அதில் நீர் வருகிறதா? வரவில்லை எனில் என்ன செய்தார்கள் என்று ஒன்றிய அலுவலர்கள் விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? பெற்றோர்களும் விவசாயிகளும் விழிப்பாக இருக்க வேண்டாமா? இனியாவது இந்த ஆழ்துளை கிணறு மரணங்கள் தொடராமல் இருக்க இறைவனை வேண்டுவோம்.

இளமை எழுதும் கவிதை நீ!

    சக வலைப்பதிவர் குடந்தை ஆர்.வி. சரவணன் தனது வலைப்பதிவில் தொடராக எழுதி பின்னர் புத்தகமாக வெளியிட்ட நூல் இது. புத்தக வெளியீட்டிற்கும் முகநூல் மூலம் அழைப்புவிடுத்தார். வேலை நிமித்தம் செல்ல முடியவில்லை. புத்தகச்சந்தைக்கு சென்ற சமயம் டிஸ்கவரி புக் பேலஸில் கேட்டு வாங்கிய இந்த புத்தகத்தை படிக்க  எனக்கு மொத்தத்தில் இரண்டரை மணி நேரமே செலவானது. மொத்தம் 192 பக்கங்கள். சுவையான காதல் கதை. கதையின் கரு நம் தமிழ் சினிமா கதைகளை போன்று மோதல்,பின் காதல் என்பதுதான். ஆனாலும் விறுவிறுப்பாக அடுத்து என்ன என்று படிக்கத் தூண்டியதில்தான் ஆசிரியரின் வெற்றி தென்படுகிறது. ஒவ்வொரு அத்தியாயத்தின் முதலிலும் ஒரு குட்டிக்கவிதை. கவிதைவரிகளில் ரசனை வழிகிறது. சுவையான ஒரு தமிழ் சினிமா பார்ப்பதை போன்று உரையாடல்கள். எடுத்த புத்தகத்தை மூட மனம் விரும்பவில்லை! ஏழுமணிக்கு எடுத்த புத்தகததை ஒரே மூச்சில் படித்து முடித்துதான் வைத்தேன். என்ன ஒரு குறை எழுத்துரு மிகச்சிறியதாக இருப்பதுதான். இரவில் படிக்கையில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் வயதானவர்களுக்கு. மற்றபடி அனைவரும் விரும்பிப் படிக்க கூடிய சுவையான ஒரு குடும்ப நாவல். பதிவுலகில் வலம் வரும் சிறந்த நண்பரான இவரது நாவல் சிறப்பாக வலம் வர வாழ்த்துக்கள்.

மாயா பஜார்!

     சென்ற ஞாயிறன்று மதியம் கே டிவியில் மாயாபஜார் படம் போட்டார்கள். சின்னவயதில் மட்டுமின்றி அவ்வப்போது டிவியில் போடும் போது தவறாமல் பார்க்க தூண்டும் ஒரு படம் இது. அபிமன்யுவாக ஜெமினியும் கடோத்கஜனாக ரங்காராவும் கலக்கியிருப்பார்கள். அதிலும் ரங்காராவ் கடோத்கஜனாக ஓர் அசத்தல் நடிப்பை வெளியிட்ட படம். பொதுவாகவே அன்றைய தமிழ் சினிமாக்களில் ரங்காராவ் ஓர் அசட்டு அப்பாவாக எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் தோன்றுவார். அதையும் மீறி அவர் சிறப்பான நடிப்பை வெளியிட்ட படங்களில் இதுவும் ஒன்று. கல்யாண சமையல் சாதம் என்ற பாடல் இன்றைக்கும் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. தொழில் நுட்பம் வளராத அந்த காலத்திலேயே தந்திரக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும். மாயாபஜார் என்னுடைய எவர்கிரின் மூவிக்களில் ஒன்று. என் துரதிருஷ்டம் இரண்டரை மணிக்கு மின்சார வாரியத்தினர் வெட்டிவிட அன்றைக்கு முழுமையான படத்தை பார்க்க முடியவில்லை!

கிச்சன் கார்னர்!
  வெண்ணெய் பிட்டு. இதை சின்ன வயதில் எங்கள் அம்மா அடிக்கடி செய்து தருவார். நாங்களும் விரும்பி உண்போம். செய்முறையை இப்போது கேட்டு வெளியிடுகிறேன்.


தேவையான பொருட்கள்:
  புழுங்கல் அரிசி 1 கப், வெல்லம் ½ கப், தேங்காய்த் துருவல், கடலைப்பருப்பு தலா ¼ கப், ஏலக்காய்ப்பொடி 1 டீஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, நெய் 4 டீஸ்பூன்.

செய்முறை:  புழுங்கல் அரிசியை ஊறவைத்து நன்கு மைய கெட்டியாக அரைத்துக்கொள்ளவேண்டும். கடலைப்பருப்பை வேகவைத்துக் கொள்ளவேண்டும். வெல்லத்தை பொடித்து அதை சிறிதளவு தண்ணீரில் கெட்டியாக கரைத்து கொதிக்க விடவும். தேங்காய் துருவலுடன் ஏலக்காய்பொடி உப்பு கலந்து வைத்துக் கொள்ளவும். ஒரு வாய் அகன்ற வாணலியில் ஒரு கப் நீரை விட்டு கொதித்து வந்ததும் புழுங்கல் அரிசி மாவை சேர்த்து நன்கு கிளறிவிடவும். மாவு வெந்ததும் நெய் 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு விட்டு கிளறவும். பின்னர் தேங்காய் துருவலுடன் வெல்ல நீரை சேர்த்துக் கொட்டி கெட்டியாக  கிளறவும். பின்னர் நெய் தடவிய தட்டில் பரவலாக கொட்டவும். பின்னர் கத்தியால் துண்டுகள் போட்டு பறிமாறவும்.

மூலிகை மருத்துவ டிப்ஸ்:


கோதுமையை பொடி செய்து அதில் சிறிதளவு  தேன் கலந்து அளவாய் உண்டு வர பாதவலி, பாதத்தில் உண்டாகும் வீக்கம் போன்றவை மறையும்.

செருப்புக்கடி புண் மறைய தேங்காய் கொட்டாங்குச்சியை அடுப்பில் சுட்டு பொடியாக்கி விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து செருப்புக்கடித்த இடங்களில் தடவி வர புண் மறையும்.

வெயில் காலத்தில் வரக்கூடியது அம்மைநோய். ஒரு சட்டியில் இரண்டு குவளை நீர் ஊற்றி அதில் நாயுருவி வேர் அல்லது இலைகளுடன் நான்கு மிளகைப் பொடி செய்து போட்டு சட்டியை நன்கு காய்ச்சவேண்டும். பின் இந்த நீரை வடிகட்டி அந்த நீரில் பனங்கற்கண்டு சிறிது சேர்த்து கால,மாலை, இரவு என மூன்று வேளைகளில் தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் அம்மை நோய் வராது. வந்தாலும் விரைவில் அதன் வேகம் தணிந்து விடும்.

சிறு குழந்தைகளை அதிகம் பாதிக்கும் சொறி, சிரங்கு ஆகியவைகளுக்கு கற்பூரம்,மிளகு, சந்தனம் ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒன்றாய் சேர்த்து அரைத்து உடம்பில் பூசி வர இந்த புண்கள் அகலும்.

குப்பை மேனி என்னும் பூனை வணங்கி செடியின் இலைச்சாற்றை அரைத்து உடம்பில் தேய்த்துவந்தால் சொறி சிரங்கு கட்டுப்படும்.

உபகாரம்- அபகாரம்!


  ராமு, சோமு இருவரும் நண்பர்கள் ஒரு நாள் ராமு சோமுவைக் காணவந்தான். இருவரும் பலவிஷயங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ‘மனிதன் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றான் சோமு.
  நீ சொல்வது உண்மைதான் இனிமேல் நான் அப்படித்தான் வாழ்ப்போகிறேன் என்றான் ராமு.
  உண்மையாகவா? சோமு கேட்டான்.
   “ஆமாம்”
  “அப்படியானால் உனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வந்தால் எனக்கு இருபத்தைந்தாயிரம் தருவாயா?”
   “நிச்சயமாக தருவேன்!”
   “உன்னிடம் பத்து வீடுகள் இருந்தால்?”
  “அதில் உனக்கு இரண்டு வீடுகள் தருவேன்!”
“உன்னிடம் இரண்டு பசுமாடுகள் இருந்தால் அதில் ஒன்று எனக்குத் தருவாயா?”
   “தரமாட்டேன்!” சட்டென்று சொன்னான் ராமு.
 “ அதிக மதிப்புள்ள பொருட்களை எல்லாம் தருவதாக சொன்ன நீ குறைந்த மதிப்புள்ள ஒரு பசுமாட்டை ஏன் தரமாட்டேன் என்கிறாய்?” சோமு கேட்டான்.
  “ இதுவரை என்னிடம் இல்லாத பொருட்களாக கேட்டு வந்தாய் நானும் தருவதாகச் சொன்னேன். கடைசியாக என்னிடம் இருக்கும் இரண்டு பசுமாடுகளில் ஒன்றைக் கேட்டால் உனக்கு எப்படித் தரமுடியும்? என்றான் ராமு.

(படிச்சதில் பிடிச்சது)

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. அரசியல், சமையல், புத்தக விமர்சனம் என்று எல்லாம் கலந்துகட்டி எழுதி அசத்தியிருக்கீங்க...

    ReplyDelete
  2. கலக்கல் கதம்பசோறு சுவைத்தேன் !

    ReplyDelete
  3. நல்ல கலவை...ஆழ்துளைக் கிணறுகள் குறித்த அலட்சியம் நிஜமாகவே வருத்தமளிக்கிறது... இந்த கோதுமை அரைத்தது அப்படின்னா கோதுமை மாவுதானே...

    ReplyDelete
  4. மாயா பஜார் தொலைக்காட்சியில் எத்தனை முறை போட்டாலும் ரசிக்கலாம்... பிடிச்சது மிகவும் பிடிச்சது... மற்றவைகளுக்கு நன்றி...

    ReplyDelete
  5. கதம்பம் நன்று கோதுமை மாவுதானா அல்லது அந்த மூலிகையின் பெயரா? நன்றி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல், அதில் விழுந்த குழந்தைகளைக் கண்டுபிடிக்க மெஷின் கண்டுபிடிக்கும் நிலைக்குப் போய் இருப்பது வேடிக்கை.

    ReplyDelete
  7. என் துரதிருஷ்டம் இரண்டரை மணிக்கு மின்சார வாரியத்தினர் வெட்டிவிட அன்றைக்கு முழுமையான படத்தை பார்க்க முடியவில்லை!

    http://www.youtube.com/watch?v=TumErCsl6nA

    ReplyDelete
  8. \\கல்யாண சமையல் சாதம் என்ற பாடல் இன்றைக்கும் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. தொழில் நுட்பம் வளராத அந்த காலத்திலேயே தந்திரக் காட்சிகள் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கும்.\\

    http://www.youtube.com/watch?v=TumErCsl6nA
    2:21:50 -ல் இந்தப் பாட்டு ஆரம்பிக்கிறது!!

    ReplyDelete
  9. \\மோடி திடீரென மனைவி என்று ஒருவரை அறிவித்திருப்பது அவர் மீதான இமேஜைக் கொஞ்சம் குறைத்துதான் உள்ளது. \\ நாட்டில அவனவன் மூணு பெண்டாட்டி 300 செட்டப்புன்னு சுத்திகிட்டு இருக்கான், ஒரு பெண்டாட்டிக்கே இவருக்கு இந்த நிலையா??!!!

    ReplyDelete
  10. நேற்று கூட குடந்தை சரவணன் என்னிடம் கேட்டார் - புத்தகம் படித்தீர்களா என்று. இன்னும் படிக்கவில்லை. படிக்கிறேன்....

    ReplyDelete
  11. பல்சுவைப் பதிவு. அருமை!

    ReplyDelete
  12. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  13. புத்தக விமர்சனம் அருமை. எப்பவும் போல் மூலிகை மருத்துவ டிப்ஸ் மிகவும் உபயோகமாக இருக்கிறது.

    ReplyDelete
  14. அனைத்து பகுதிகளும் அருமை நண்பரே....

    இருப்பதைக் கேட்டால் தர மாட்டேன் :)))))

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!