அடங்கிப் போன ஜெ,வின் பிரதமர் ஆசை! கதம்ப சோறு பகுதி 29

கதம்ப சோறு! பகுதி 29

பிரச்சாரத்தில் அசத்தும் பிரேமலதா விஜயகாந்த்:

     தேமுதிக விற்கு நல்ல தலைவர் இருக்கிறாரோ இல்லையோ அதிமுக போல் ஒரு தைரியமான தலைவி இருக்கிறார் என்று தோன்றுகிறது. குடும்ப அரசியல், மனைவியை களம் இறக்கிவிட்டார் என்றெல்லாம் விஜயகாந்தை குறை சொல்பவர்கள் இருக்கட்டும். இன்று எந்தக் கட்சியில்தான் குடும்ப ஆதிக்கம் இல்லை? எல்லாக் கட்சியிலும் வாரிசுகள் களம் இறக்கப்படுகின்றன. கேப்டன் பிரச்சாரத்தின் போது ஹெலிகாப்டர் சவுண்டு கேட்டால் கூட தடுமாறி எங்கே விட்டேன்! என்று கேட்கிறார். ஆனால் பிரேமலதாவோ பிரச்சாரத்தில் அசத்துகிறார். அவர் அடுக்கும் குற்றச்சாட்டுகள் அதிமுக மீதுதான் லோக்சபா தேர்தலில் மாநிலத்தின் ஆட்சியை குறையை முன்னிலை படுத்த வேண்டாம் என்றாலும் அவர் சொல்லும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆரவாரம் எழுகிறது. ஓர் ஆளுமை தெரிகிறது. இவர்தான் பின்னாலிருந்து கட்சியை இயக்கிக் கொண்டிருப்பவர் என்பதும் புரிகிறது.

அடங்கிப் போனது ஜெ வின் பிரதமர் ஆசை!

       நாற்பதும் நமதே! அம்மாதான் அடுத்த பிரதமர் என ரத்தத்தின் ரத்தங்கள் தீர்மானம் இயற்றி பிரச்சாரத்தை பலப்படுத்தினார்கள். பி.ஜே.பியுடன் சேர்ந்தால் சிறுபான்மை ஓட்டுக்கள் கிடைக்காது பிரதமர் பதவியும் கிடைக்காது என்று அந்த கூட்டணியை தவிர்த்து மூன்றாவது அணி அமைக்க முடிவு செய்து அங்கும் பிரதமருக்கு சிலர் முயல தனி அணியாக களம் இறங்கினார் அம்மா. முதலில் நான் தான் பிரதமர் என்பது போல பேசியவர் இப்போது எனக்கு வாக்களியுங்கள் அதிமுகவிற்கு வாக்களியுங்கள் எங்கள் ஆதரவில்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்று பேசி வருகிறார். மோடியை இதுவரை கடுமையாக விமரிசிக்க வில்லை! காங்கிரஸை மட்டுமே கடுமையாக சாடுகிறார். உளவுத்துறையும் முன்பு 35 சீட் கிடைக்கும் என்று சொன்னவர்கள் இப்போது 20லிருந்து 26வரை என்று சொல்லிவிட்டதாம். கடும் மின்வெட்டு அம்மாவின் பிரதமர் கனவை வெட்டிவிட்டது என்று சொல்லவேண்டும்.இந்த 20-26 யைவாது தக்க வைத்துக் கொள்ளவேண்டும். அதற்கு மின்சாரம் வெட்டுவது குறைய வேண்டும். ஆனால் அனல்மின் நிலைய பழுதுகளும் கூடங்குள உற்பத்தி நிறுத்தமும் தொடர்வதால் அத்துடன் வெயிலும் கடுமையாக கொளுத்துவதால் இப்போதைக்கு மின்வெட்டில் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பு இல்லை! அம்மாவின் பிரதமர் கனவும் அதில் அடங்கிப் போய்விட்டது.

கந்தசாமி!

    சென்ற ஞாயிறன்று திடீரென டீவி பக்கம் ஒதுங்கினேன். வடிவேலுவை சக்கபிழி பிழிந்து கொண்டிருந்தார் மன்சூர். கலகலவென சிரித்து மாளவில்லை! கந்தசாமி படம் சன் டீவியில் போட்டிருந்தார்கள். சுவாரஸ்யமாக பார்க்க ஆரம்பித்தேன். அன்னியன், இந்தியன் வகை கதை என்றாலும் சுவாரஸ்யமாக கொண்டு சென்றது இயக்குனரின் திறமை. விக்ரமிற்கு இப்போது சிறுநீரக கோளாறு, உடல்நிலை சரியில்லை என்ற வதந்திகள் பரவுகிறது. அதே போல அவர் சமீபத்தில் நடித்த படத்தில் அவ்வளவு யங்காக தெரியவில்லை! விக்ரம் பிரபலமாகும் போதே முப்பதை கடந்து விட்டிருந்தாலும் அந்த முதிர்ப்பு முகத்தில் தெரியாது. இந்த படத்திலும் ஸ்மார்ட்டாக யங்காக அசத்தினார். அவருடைய சில வசன உச்சரிப்புக்கள் எனக்கு பிடிக்கவில்லை மற்றபடி நன்றாக நடித்து இருந்தார். தமிழகத்தின் அடையாளம் என்று சொல்லிக்கொண்டு ஒரு வில்லன். அவரைப் பார்த்தால் காமெடிதான் வந்தது. அதுவும் அவர் மீனாகுமாரி பாடலில் ஆடும்போது செம சிரிப்புத்தான். இந்த படம் பார்த்தமையால் இந்தியா ஆஸ்திரேலியா டி 20 பார்க்கவில்லை! பார்க்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். மறந்துவிட்டேன். திடீரென இடையில் சாணலை மாற்றினால் யுவராஜ் 60 ரன்கள் எடுத்திருக்க இந்தியா 159 ரன்கள் குவித்திருந்தது. இறுதியில் அதை எட்ட முடியாமல் ஆஸ்திரேலியா தோற்றுப்போனதை இடை இடையே பார்த்தேன். ஆஸ்திரேலியா இப்பொதுதான் மீண்டு வந்து மீண்டும் தோற்றுப்போனது வருத்தமே!

நந்திபுரத்து நாயகி!

   புத்தகச் சந்தையில் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகி நாவலை வாங்கினேன். நான் வாங்க நினைத்தது உதயதாரா என்ற நாவலைத்தான். பதிவர் வெங்கட நாகராஜ் தனது தளத்தில் உதயதாரா நாவல் பற்றி எழுதி இருந்தார். பொன்னியின் செல்வனை தொடர்ந்து ஆதித்த கரிகாலனை யார் கொன்றார்கள் என்று சொல்லுகிறது என்று எழுதியிருந்தார். அந்த நாவலை வாங்க தேடிய போது இது கண்ணில் பட்டது. எடுத்து அப்படியே புரட்டிய போது பொன்னியின் செல்வனின் தொடர்ச்சி என்று முன்னுரையில் போட்டிருந்தார்கள். சரி இதையே வாங்கி விடுவோம் என்று விலையை பார்க்க நானூற்று ஐம்பது ரூபாய். ஆகா! இவ்வளவு செலவழிக்க வேண்டுமா? என்று ஒரு தயக்கம்! உடன் வந்த அப்பாவோ பராவாயில்லை! படிக்கணும் நினைச்சே இல்லை வாங்கிக்க என்றார். பணம் போதவில்லை என்றால் நான் தரேன் என்றும் சொன்னார். பணம் இருக்குப்பா! ஆனா விலை அதிகமா இருக்குன்னு தோணுது என்றேன். அப்புறம் இருமனதாய் இருந்து கடைசியில் வாங்கி வந்து ஒரு மாதம் ஆகியும் தொடாமல் இருந்தேன். பின் ஒரு சுபயோக சுபநாளில் படிக்க ஆரம்பித்தேன். கல்கியின் எழுத்து நடைக்கு விக்கிரமனின் எழுத்து நடையும் ஓரளவிற்கு ஒத்துதான் வருகிறது. ஆனால் முதலில் இருந்த சுவாரஸ்யம் பின் குறைந்து போகிறது. தேவையில்லாமல் இன்பவல்லி என்று ஒரு கேரக்டரை வேறு புகுத்தி இருக்கிறார். முதல் இரு பாகங்கள் நீண்டு வர கடைசி பாகம் சில நூறு பக்கங்களில் முடித்துவிடுகிறார். இந்த நாவலும் ராஜராஜன் முடிசூடுவதோடு முடிந்து போகிறது. ஆதித்த கரிகாலனை கொன்றதாக ஆசிரியர் சொல்லும் நபரை ஏற்க நம்மால் முடியவில்லை! அதே போல் வீரபாண்டியனின் மகன் சேர உதவியை நாடுவதும் எழுதி அதை சுருக்கமாக முடித்துவிட்டார். நிறைய வர்ணனைகள் சலிப்பை ஏற்படுத்துகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் ஆறுபாகங்கள் எனில் அதை குறைந்த பட்சம் ஒரு வாரத்தில் படித்துவிடுவேன். ஆனால் இந்த 1200 பக்கங்கள் கொண்ட புத்தகம் படிக்கவே பத்து நாள் ஆகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை இந்த நாவல் திருப்தி கரமாக அமையவில்லை! விக்கிரமன் பெரிய எழுத்தாளராய் இருந்தாலும் பொன்னியின் செல்வன் வாசகரை திருப்தி படுத்திய அளவிற்கு இது திருப்தி படுத்தவில்லை என்றே தோன்றுகிறது.

சமையல் டிப்ஸ்!

  போனவாரம் தேங்காய்ப் பால் ரசம் பற்றி சொன்னேன். இன்னைக்கு என்ன சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மதிய சாப்பாடு சாப்பிட அமர்ந்த போது அம்மா வேப்பம் பூ ரசம் சமைத்திருந்தார்கள். இதையே பகிர்வாக்கிடலாம்னு முடிவு செஞ்சி அம்மாக் கிட்டே கேட்டேன். அவங்களும் சொல்ல மனசில பதிச்சதை இப்ப எழுத்திலே பதிக்கிறேன்! இதை தைரியமா நீங்க செஞ்சு சாப்பிடலாம்! வேப்பம்பூ ரசம் எங்க வீட்டு பேவரிட்!

வேப்பம்பூ ரசம்:
உலர்ந்த வேப்பம் பூ இரண்டு டீஸ்பூன்.
காய்ந்த மிளகாய் ( தாளிப்பதற்கு)
மிளகு, சீரகம் ( பொடித்தது)
சிறிதளவு எண்ணெய்
புளி சிறிதளவு.
உப்பு தேவையான அளவு.
முதலில் புளியை நீரில் கரைத்து உப்பு தேவையான அளவு போட்டுஅடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும். நன்கு கொதி வந்தவுடன்  பொடித்து வைத்த மிளகு சீரகப் பொடியை அதில் போட்டு ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.

இப்போது வாணலியில் வேப்பம் பூ மிளகாய் கடுகு, எண்ணெயுடன் தாளித்து ரசத்தில் ஊற்றவும்.
சுவையான வேப்பம் பூ ரசம் ரெடி.

குறிப்பு) இந்த மாதத்தில் வேப்பம் பூ பூக்க துவங்கும், சித்திரை வைகாசியில் நிறைய பூத்துக் கொட்டும். கொட்டும்போது பொறுக்கி தூசு நீக்கி நிழலில் உணர்த்தி எடுத்துவைத்துக் கொண்டால் ஆண்டு முழுவதும் பயன்படும்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


கத்தரிக்காய் வெண்டைக்காய், கோவைக்காய் பொரியல் செய்து முடித்தவுடன் கடைசியில் கொஞ்சம் கடலைமாவை தூவி கலந்துவிட்டால் டேஸ்டியாக இருக்கும்.

சில சமயம் கைக்குழந்தைகள் வயிற்றுவலி என்று அழும். அப்போது கறுப்பு வெற்றிலையை விளக்கெண்ணெய் தடவி லேசாக சூடுபடுத்தி குழந்தையின் தொப்புள் மீது போடவும். சில மணி நேரத்தில் குழந்தை சிரிக்கும்.

இஞ்சியை சிறுதுண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து இரண்டு நாட்கள் கழித்து அதிகாலையில் ஒரு துண்டுவீதம் சாப்பிட்டு வந்தால் பித்தம் குணமாகும்.

வீட்டின் கதவு ஜன்னல்களில் படிந்துள்ள அழுக்கை நீக்க சிறு துளி மண்ணெண்ணையை துணியில் விட்டு அழுக்கு படிந்த இடங்களில் தடவி ஊறவிட்டு  பின்பு வேறு துணியில் துடைக்க கதவு ஜன்னல்கள் பளிச்சிடும். பூச்சிகள் அண்டாது.

காலையில் வெறும் வயிற்றில் இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஊளைச்சதை குறையும்.


பாக்யா வார இதழில் பதிவாகும் என் எழுத்துக்கள்!


  ஓரிரு மாதங்கள் முன்பு நண்பர் எஸ்.எஸ் பூங்கதிர் முகநூல் சாட்டில் வந்து பாக்யா மக்கள் மனசு பகுதிக்கு கருத்து கேட்டார். அது பாக்யாவில் வெளிவந்தது. அதை இன்பாக்ஸில் அனுப்பி இருந்தார். அப்புறம் என் வலைப்பூ குறித்து சொல்லியிருந்தேன். கதை, கவிதை எதுவேண்டுமானாலும் பாக்யாவிற்கு அனுப்புங்கள் சார்! நன்றாக இருந்தால் வெளியிடுவார்கள் என்று ஊக்கப்படுத்தினார். சில ஹைக்கூ கவிதைகளும் சில ஜோக்ஸ்களும் அனுப்பினேன். மக்கள் மனசிற்கும் வாரா வாரம் கருத்து பதிந்தேன். முதலில் ஒரு ஹைக்கூ பிரசுரம் ஆனது, பின்னர் ஜோக்குகள், அதை முன்பே பதிவில் சொல்லியிருந்தேன். அதற்கடுத்த வாரமும் இரண்டு ஜோக்குகள் வந்தன. போனவாரம் என்னுடைய சிறுகதை ஒன்று பிரசுரம் ஆனது. இதை வலைப்பூவில் முதலில் எழுதினேன். யாரும் பெரிதாக படிக்கவில்லை! மீள்பதிவு செய்த போது ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த கதை! அதை பாக்யாவில் வெளியிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி! இந்த வாரம் எதாவது வந்ததா என்று தெரியவில்லை! தொடர்ந்து படைப்புக்கள் அனுப்பி வருகிறேன். என்னுடைய சிறுவயது கனவுகளில் ஒன்று இப்படி வார இதழ்களில் எழுத வேண்டும் என்பது. அது நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்ன ஒன்று பாக்யா இதழ் பொன்னேரியில் சரிவர கிடைப்பது இல்லை! நான் சென்று வாங்குவதற்குள் தீர்ந்து போகிறது. அதனால் அலைந்து திரிந்து வேறு யார் மூலமாவது வாங்க வேண்டியுள்ளது. அப்படி வாங்கி புரட்டும் போது நம் பெயர் அதில் இருந்தால் மகிழ்ச்சிக்கு அளவு ஏது? கதையை படிக்க எனது தளலிங்க்: உறுத்தல்

அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா?


   அன்று விடுமுறை தினம், சேதுவும் வந்தனாவும் தங்களின் இரண்டுவயது பெண்குழந்தை பிரியாவுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டு இருந்தார்கள். இருவருமே வேலைக்குப் போவதால் விடுமுறை தினத்தை மட்டுமே ப்ரியாவிற்கு ஒதுக்கி இருந்தார்கள். “ப்ரியா குட்டி நீ அம்மா பிள்ளையா? அப்பா பிள்ளையா? குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டபடி கேட்டாள் வந்தனா.
  “நீ அப்பா பிள்ளைதானே?” என்று சேதுவும் குழந்தையின் கன்னத்தை நிமிண்டியபடி கேட்டான்.
  இல்லையென்பதைப் போல தலையை ஆட்டினாள் குழந்தை. வந்தனாவின் முகத்தில் மகிழ்ச்சி “அப்ப நீ அம்மா பிள்ளைதானே?” அதற்கும் இல்லையென்று தலையை ஆட்டினாள் ப்ரியா.
   “அப்போ நீ யார் பிள்ளை?” வந்தனாவும் சேதுவும் சேர்ந்தே கேட்டார்கள்.
  ப்ரியா தன் வாயைத் திறந்து மழலையில் சொன்னாள்.
“ராணி பிள்ளை”
சேதுவும்வந்தனாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்,
ராணி ப்ரியாவுக்கு ஆயா.
                 -வாஷி செல்வன்.
(குமுதம் பழைய இதழ் ஒன்றில் படித்தது.)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. தகவல் களஞ்சியம் அருமை
    பிரேமலதா அவர்கள் டெல்லியில் பேசாத பேச்சா ?
    எப்போதும் பேச்சுக்கும் ஓட்டுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை
    தங்கள் சிறுகதை மிக மிக அருமை
    சுவாரஸ்யமான அருமையான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. டிப்ஸ் அருமை.

    நானும் விக்ரமனின் ஒரு நாவலை வாங்கி படித்திருக்கிறேன் (பெயர் நியாபகமில்லை), தாங்கள் சொல்வது போல், எனக்கும் ஏனோ அவருடைய எழுத்துக்கள் சுவாரஸ்யமாக இல்லை என்றே தோன்றியது.

    பொன்னேரியில் ஏதாவது ஒரு கடையில், பாக்கியாவை எடுத்து வைத்திருக்கச் சொல்லி, பிறகு சென்று வாங்கிக்கொள்ளுங்களேன்.
    மேலும் தங்களுடைய படைப்புகள் வார இதழ்களில் வெளி வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பொன்னியின் செல்வன் படித்த பிறகு எந்த சரித்திரக்கதையுமே சுவாரஸ்யமாக இருப்பதாக எனக்குத் தோன்றியது இல்லை. விக்கிரமனின் எழுத்து கொஞ்சம் வளவள தான்!
    வேப்பம்பூ ரசம் குறிப்பு, புகைப்படம் அருமை.
    விக்ரம் உடல்நிலை தேறி மறுபடியும் நல்ல நல்ல பாத்திரங்களில் நடிக்கவேண்டும். மிகச் சிறந்த நடிகர் அவர்.

    ReplyDelete
  4. ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் ,கேப்டனுக்கு இது ரொம்ப பொருந்தும் !

    ReplyDelete
  5. டிப்ஸ்களுக்கு நன்றி...

    பாக்யாவில் வந்தது மிகவும் மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கதம்ப சோறு அருமை...!

    நான் படித்த வரையில் பொன்னியின் செல்வன் அளவிற்கு மற்ற சரித்திர நாவல்கள் என்னைக் கவரவில்லை.

    ReplyDelete
  7. அம்மாவின் கனவு பலிக்காதா!? ப்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்

    பொன்னியின் செல்வனுக்கு தொடர்ச்சியான நாவல் இருக்கா!? வாங்கிட வேண்டியதுதான்.

    ReplyDelete
  8. பாக்யாவில் உங்கள் எழுத்து... மிக்க மகிழ்ச்சி நண்பரே......

    வேப்பம்பூ ரசம் - எனக்கும் பிடிக்கும்.....

    என் தளம் பற்றி குறிப்பிட்டமைக்கு நன்றி. பதிவில் சொன்னது போல அந்த கதையின் பெயர் உதயதாரா அல்ல! சங்கதாரா.....

    இணைப்பு இங்கே - http://venkatnagaraj.blogspot.com/2013/11/blog-post_5.html

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!