வந்தனா! வயது 18!

வந்தனா! வயது 18!



நகரமும் இல்லாது கிராமமும் இல்லாத ஒரு ரெண்டும்கெட்டான் ஊர் அது. அங்குதான் நமது நாயகி வசித்துவந்தாள். பிறந்தது முதலே தான் அழகு என்ற எண்ணம் அவளுக்கு அதிகம். அழகு இதைத்தான் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். அழகியல் மிகுந்தவன் தமிழன். எழுத்திலும் கலையிலும், சிற்பத்திலும் அழகை வடிக்கிறான் ரசிக்கிறான். அப்படித்தான் அந்த கிராமமே வந்தனாவை ரசிக்கத்துவங்கியபோது தான் அவளுக்கு கொஞ்சம் கர்வம் வந்திருக்க வேண்டும்.
    வந்தனாவிற்கு வயது ஒன்றும் அதிகம் இல்லை! இன்றைய சினிமா கதாநாயகிகளின் வயதுதான் என்று சொல்லிவிடலாம். சென்ற வருடம்தான் மேனிலையைத்தாண்டி கல்லூரி பருவத்தில் கால் வைத்திருந்தாள்.
   அவள் கல்லூரிக்கு கிளம்பி தெருவில் நடந்தாலானால் தெருவே அவள் மீது பார்வையைத்திருப்பும். கலர் ஒன்றும் சிவப்பு இல்லை என்றாலும் கருப்பு என்ற சொல்ல முடியாத மாநிறம். அழகான களையான முகம், வரிசையான பல்வரிசை, காற்றில் மிதக்கும் சுருள் கூந்தல், கவர்ந்திழுக்கும் கண்கள், என்று வர்ணித்துக் கொண்டே போகலாம். இந்த அழகுதான் அவளுக்கு எமனாக வந்து விடப்போகிறது என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஏன் அவளே கூட எதிர்பார்த்திருக்க மாட்டாள்.
   கல்லூரிக்கு செல்லும்வரை எத்தனையோ பேர் அவளை சுற்றிவந்து பேச முற்பட்டு ரோஸ் கொடுத்து,கடிதம் கொடுக்கப்பார்த்து கசந்து போனார்கள். ஒருவரையும் இவள் ஏறெடுத்து பார்த்தாள் இல்லை.  அத்தனை நல்லவளாக வலம் வந்த வந்தனா கல்லூரிக்குள் நுழைந்ததுமே கெட்டுப்போனாள்.
   அதெல்லாம் அந்த வயதுக்குறியது என்கிறீர்களா? அதுவும் சகஜம்தான்! ஆனால்.. சரி இப்போது கதைக்குள் நுழைவோம்!
    கோயம்பேட்டில் இருந்து மதுரை செல்லும் அந்த பேருந்து இன்னும் சற்று நேரத்தில் கிளம்ப தயாராக இருந்தபோது வந்தனா அவசர அவசரமாக வந்து அதில் ஏறினாள். கையில் ஒரு புத்தகப்பை! கலவர முகமாக தெரிந்தாள். பஸ்ஸிற்குள் யாராவது தெரிந்த முகம் தென்படுகிறதா? என்று பார்த்துவிட்டு இல்லை என்றதும் பெருமூச்சு விட்டாள். அவளது ஜன்னலோர இருக்கை பக்கத்து இருக்கை காலியாக இருந்தது. பஸ் புறப்பட்டது. பெருங்களத்தூரை அடைந்தபோது அவன் ஏறினான். வந்தனாவைப் பார்த்து கை ஆட்டினான். இவள் முகத்தில் புன்னகை படர்ந்தது. ஹாய்! என்றாள்.
   அவன் அவளருகே வந்து அமர்ந்தான்.
ஸ்… அப்பா! இப்பத்தான் நிம்மதியா இருக்கு!
 ஏன்? நான் வரமாட்டேன்னு பயந்துட்டியா?
அதில்லை! எங்க தெரிஞ்சவங்க கண்ணுல மாட்டிறப்போறோமோன்னு ஒரு பயம்!
எல்லாம் பக்காவா ப்ளான் போட்டு கிளம்பி வந்திருக்கே! அப்புறம் என்ன பயம்?
சொல்லமாட்டே பின்ன? நீ என்னோட இடத்திலே இருந்தா என் கஷ்டம் தெரிஞ்சிருக்கும்!
ஓக்கே! ஓக்கே! ஜஸ்ட் ரிலாக்ஸ்! என்றவன் அவள் கையை அழுத்தி விட்டான்.
     மதுரை போனதும் நாம என்ன பண்ணறது? உங்கம்மா கிட்டே விசயத்தை சொல்லிட்டியா?
 என் வீட்டுல என் பேச்சுக்கு மறுபேச்சு கிடையாது! ஆமா நான் சொன்னபடி எல்லாத்தையும் எடுத்துக்கிட்டுதானே வந்தே?
   ஆமாம்! இதை வீட்டுல இருக்கறவங்களுக்கு தெரியாம எடுத்து வர்றதுக்கு ரொம்ப கஷ்டமா ஆயிருச்சு! எல்லாம் பையில பத்திரமா வச்சிருக்கேன்!
  நான் இதை கேட்டிருக்க மாட்டேன்! ஆனா இப்ப நான் இருக்கிற சூழ்நிலையில தொழில் ஆரம்பிக்கணும்னா தேவைப்படுது! அதான் கேட்கவேண்டியதா போச்சு!
   ச்சு! இதென்ன! நானே உனக்கு சொந்தமாகும்போது என் நகையும் பணமும் உன்னுதுதானே! நம்ம நல்லா இருக்கத்தானே கேக்கறே! நான் தரமாட்டேன்னு சொல்வேனா?
  இல்லே! என்ன இருந்தாலும் நான் ஆம்பிளை சுயமா சம்பாதிக்கணும்! சொந்த கால்ல நிக்கணும்! பொண்டாட்டி தயவில் இப்படி நகை வாங்கி தொழில் நடத்த முதல் செய்யறது தப்போன்னு தோணுது!
   அதெல்லாம் ஒரு தப்பும் இல்லே! நீ மனசுல எதையும் போட்டு குழப்பிக்காதே! மொதல்ல ஊருக்கு போறோம்! நீ தொழில் ஆரம்பிக்கிறே! நாம ஜெயிச்சு காட்டுறோம் என்றாள்.
   விடிகாலை வேளையில் மதுரையில் அவர்கள் இறங்கியபோது பஸ் நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அருண் வந்தனாவை அழைத்துக் கொண்டு பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தான். ஒரு ஆட்டோவை பிடித்து அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.

பொழுது விடிந்தது. இங்கே பரபரப்பு தொற்றிக் கொண்டது. வந்தனாவை காணோம்! நேற்று கல்லூரிக்கு சென்றவள் இன்னும் திரும்பவில்லை! ஊர் முழுவதும் பற்றிக் கொண்டது.
  அப்பவே சொன்னேன்! காலம் கெட்டுக்கிடக்கு! கல்யாணமான பொண்ணை எதுக்கு படிக்க காலேசு அனுப்பனும்னு! எம்மவன் கேட்டானா? படிப்புத்தான் பொண்ணுக்கு பாதுகாப்புன்னு சொன்னானே! இப்ப தவிச்சுப் போய் நிக்கானேன்னு என்று ஒர் அம்மா ஒப்பாரி வைக்க ஆரம்பித்துவிட்டது.
    கணேஷ் தலை கவிழ்ந்து அமர்ந்து இருந்தான். அவனுக்கு நடந்ததெல்லாம் ஒரு கனவாக இருந்தது. இந்த ஆறுமாதகால திருமண வாழ்க்கை இத்தோடு முடிந்துபோகும் என்று அவன் கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை!
   வந்தனா அவள் மனைவி என்றபோது அவனுக்குப் பெருமையாக இருந்தது. ஊரே விரும்பிய ஓர் அழகுப்பெண் தன் மனைவியானது குறித்து பெரிதும் மகிழ்ந்தான். அவளுக்கு எந்த குறையும் வைக்க கூடாது என்று நினைத்தான். திருமணத்திற்குப் பின் படிக்க வைக்க வேண்டாம் என்று அவன் தாய் முதற்கொண்டு எல்லோரும் தடுத்தபோதும் வந்தனாவை கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்தான். வீக் எண்டுகளில் வெளியே அழைத்துச்சென்றான். விருந்து பார்ட்டி கும்மாளம் என்று கழிந்த வாழ்க்கையில் திடீர் புயல் எங்கு எப்படி தோன்றியது. அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை!
   ஏம் மாப்ளே! போலீஸுக்கு சொல்லிட்டியளா!
அங்கேயும் என் மானம் போவனுமா மச்சான்!
இல்லே அவளை கண்டுபிடிக்க வேண்டாமா மாப்ளே!
என்னத்தை கண்டுபிடிச்சு என்ன ஆகப்போவுது! அதான் திட்டம் போட்டு கிளம்பிட்டாளே! என் கூட வாழ விரும்பலைன்னு அன்னிக்கே சொல்லியிருந்தா நான் ஒதுங்கியிருப்பேனே! ஆறுமாசம் ஒரு அட்டகாசமான வாழ்க்கையை கொடுத்துட்டு இப்ப ஏமாத்திட்டு போயிட்டாளே!
    இருக்காது மாப்ளே! அவ போயிருக்கமாட்டா! எங்கனா ப்ரெண்ட்ஸ் வீட்டுக்குத்தான் போயிருப்பா!
  நானும் அப்படித்தான் நினைச்சேன்! அவ செல்லுக்கு கூப்பிட்டா ஸ்விட்ச் ஆப்னு வருது! அவ ப்ரெண்ட் எல்லார் வீட்டுக்கும் போன் பண்ணி கேட்டுட்டேன்! அப்புறம்தான் தெரிஞ்சுது அவ திட்டம் போட்டு போயிருக்கான்னு!
   வீட்டுல ஒரு குண்டுமணி நகை கூட இல்லை! எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா! பீரோவில நான் வைச்சிருந்த ஐம்பதாயிரம் பணமும் காணலை! இதெல்லாம் எடுத்திட்டு அவ டாட்டா காண்பிச்சிட்டா! உடைந்து அழத்தொடங்கினான் கணேஷ்.

அம்மா! நான் சொல்லலை இவதான் வந்தனா!  நான் கல்யாணம் கட்டிக்க கூட்டிட்டு வந்திருக்கிற பொண்ணு! அருண் அங்கு தன் வீட்டில் வந்தனாவை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தான்.
  அது ஒன்றும் பெரிய அடுக்குமாடி வீடல்ல! மதுரை பக்கத்தில் இருந்த ஒர் குக்கிராமத்தில் இருந்த குடிசைவீட்டில் அவர்கள் இருந்தனர். குறுக்கே சாக்கடை கழிவு ஓடிக்கொண்டிருந்தது.
   அருணின் அம்மா வந்தனாவை மேலும் கீழும் பார்த்தாள். உக்காரு தாயி! என்று சேர் கொண்டுவந்து போட்டாள். வந்தனாவிற்கு அந்த இடமே புதிதாக இருந்தது. ஏதோ கனவில் மிதந்தாள். திடீரென கணேஷ் நியாபகத்திற்கு வந்தான். அவள் முகம் சோகமானது.
   அருண் அதை கவனித்துவிட்டான். என்ன வந்தனா? ஊர் நியாபகமா? என்றான்.
   ச்! என்றாள்.
அதையெல்லாம் மறந்துடு வந்தனா! என்றவன் அவள் கன்னத்தில் திடீரென முத்தமிட்டான். நாளைக்கே நாம கோயில்ல கல்யாணம் பண்ணிக்கிறோம்! அப்புறம் ஒரு வாரம் பெங்களூர் ஹனிமூன்! என் ஜாய்! உன் பழைய நினைவை எல்லாம் கழுவிடு! புது வாழ்க்கை புத்தம் புதிய என் ஜாயபிள் லைஃப்! உனக்கென நீயே தேர்ந்தெடுத்த வாழ்க்கை! ஜாலியா இரு! நான் இப்ப கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்! என்றவன் கண்ணடித்தபடி செல்லத்துக்கு என்ன வாங்கிட்டு வரட்டும் என்றான்.
  வந்தனா எதைக்கேட்பது என்று யோசிப்பதற்குள் வாழ்க்கையை இனிப்பா துவக்குவோம்! உனக்கு பிடிச்ச டெய்ரிமில்க் சாக்லேட்டோட வரேன்! என்றவன் திரும்பவும் அவளருகில் வந்தான்.
  என்ன போயிட்டு வான்னு சொல்ல மாட்டியா? என்றான்.
   ம்..
என்ன ம்..
சரி போயிட்டு வாங்க!
ஒரு ஹஸ்பெண்டை இப்படித்தான் வழி அனுப்புவியா? உனக்கு விவரமே தெரியலை! இப்ப பார்! என்று அவளை இழுத்து அணைத்து நெற்றியில் முத்தமிட்டான் பின் கண்ணடித்தபடி, எப்படி? பதிலுக்கு நீ எதுவும் தரலேன்னா எப்படி? என்றான்.
    வந்தனாவிற்கு கூசியது! அருண்.. உங்க அம்மா அப்பா எல்லோரும் இருக்காங்க! ஏன் இப்படி நடந்துக்கிறே என்றாள்.
   அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க! லெட்ஸ் கமான்! என்றவன் அவளை அருகில் இழுத்து அணைத்து, உனக்கு நிறைய சொல்லித்தர வேண்டியுள்ளது என்றான்.
  அப்புறம் நிறைய நடந்து விட்டது. மறுநாள் கல்யாணம் ஒரு அம்மன் கோயிலில் பெயருக்கு நடந்தது. அருணின் அம்மா அப்பா கூட அதற்கு வரவில்லை! யாரோ ரெண்டு ப்ரெண்ட்ஸ் மட்டும் வந்தனர். அடுத்த நாளே பெங்களூர் கூட்டிச் சென்றான். மொத்த நகையையும் எடுத்துக்க என்றான்.
   எதற்கு என்று கேட்டால் இங்கு பாதுகாப்பு இல்லை! உன் கூடவே இருக்கட்டும்! அதுதான் சேஃப் என்றான்.
  பெங்களூரில் ஒரு வாரம் இனிதே கழிந்தது. அன்று இரவு நீண்ட நேரம் களியாட்டம் முடிவில் அசதியில் உறங்கிப்போனாள் வந்தனா.
   மறுநாள் விழித்த போது அருகில் அருண் இல்லை! அருண் அருண் என்று அழைத்த போது பதில் இல்லை! அவளது ஹேண்ட் பேக்கில் இருந்த நகை பணம் அனைத்தும் காணவில்லை! கட்டியிருந்த உடை தவிர வேறு எதுவும் இல்லை! சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது. அவளால் நம்பவே முடியவில்லை! அருண் இப்படி ஏமாற்றுவான் என்று.
   ஓவென்று அழலாம் போலிருந்தது. ஆனால் அழுது என்ன பிரயோசனம்? என்ன செய்யலாம் என்று யோசித்தாள். ஒன்றும் தோன்றவில்லை! வெயிட்டர் வந்து மேம்! எப்ப ரூம் காலி பண்ணுவீங்க! கிளியர் பண்ணனும் என்றான்.
      ஒன்றும் பேசாமல் வெளியே வந்தாள். நடந்தாள் நடந்தாள் நடந்து கொண்டே இருந்தாள். திடீரென ஒரு போலீஸ் ஸ்டேஷனை கண்டதும் அதனுள் நுழைந்தாள்.
    கன்னட பாஷை புரியாவிட்டாலும் அரைகுறை ஆங்கிலத்தில் தான் ஏமாற்றப்பட்டதை சொன்னாள். மதுரை என்றாள். அங்கிருந்த ஒரு பெண் கான்ஸ்டபிள் பரிதாபப்பட்டு மதுரைக்கு இவளை அனுப்பி வைத்தாள்.
   மதுரையில் அருண் காண்பித்த வீடு வெறிச்சோடியிருந்தது. அங்கு விசாரித்த போது அப்படி யாரும் கிடையாது என்றார்கள்.  மீண்டும் காவல் நிலையத்திற்கு போனாள்.
   பெங்களூரைப் போல இங்கு மரியாதை கிடைக்கவில்லை! வித்தியாசமாக பேசினார்கள். திணவு எடுத்துப் போய் ஓடியாந்தியா? என்றார்கள். என்னவெல்லாமோ கேட்டார்கள்.அதை எழுத்தில் எழுத முடியாது. பின்னர் அவளது கணேஷ் நம்பரை தந்தாள். அருகில் உள்ள போலிஸ் ஸ்டேசன் சொன்னாள்.
    ஒரிரு நாள் விசாரணைக்குப் பின் வந்தனாவை ஏமாற்றியது பணத்திற்காக ஏமாற்றும் ஒரு கும்பல் எனத் தெரிந்தது.  கணேஷிடம் போன் செய்து விவரம் கூறினார்கள். கணேஷ் ஊர் போலீஸ் நிலையத்தில் வந்தனாவை அழைத்து வந்திருந்தனர்.
    வாடிய தாமரையாய் நிற்கும் வந்தனாவைப் பார்த்தான் கணேஷ். அவன் கண்களில் கண்ணீர் வடிந்தது. அவனை பார்த்து வந்தனா தலை குனிந்து கொண்டாள்.
   என்ன சொல்றீங்க மிஸ்டர் கணேஷ்!
இந்த மாதிரி பாதிக்கப்பட்ட பெண்களை நீங்க என்ன செய்வீங்க?
ஏதாவது விடுதியிலே சேர்த்துவிடுவோம்!
அதையே செஞ்சிடுங்க! வேணும்னா நான் மாசா மாசம் ஏதாவது பண உதவி பண்ணிடறேன்!
   என்னம்மா சொல்றே?
வந்தனா அவன் கால்களில் விழுந்தாள். என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போக மாட்டீங்களா?
   எது நம்ம வீடு வந்தனா? நீ என்னைக்கு நம்ம வீடுங்கறதை மறந்து வெளியே போனியோ அன்னிக்கே அது செத்துருச்சு! உனக்கு என்னை பிடிக்கலைன்னா முதல்லேயே சொல்லியிருக்கலாம். கல்யாணம் ஆன பின்னாடி சொல்லியிருந்தா கூட அதற்கு ஒரு முடிவு பண்ணியிருப்பேன். நம்ம குடும்பம்,மரியாதை, எல்லாம் மறந்து ஆசை ஒன்னையே பிரதானமா நினைச்சி வெளியே போயிட்டே!  இந்த அடி எங்களை வலுவா தாக்கிடுச்சு! இப்ப அதிலே  இருந்து மீண்டு வர கொஞ்ச நாள் ஆகும். நான் உனக்கு வேலியா இருந்தேன். அதை நீ எப்ப தாண்டினியோ அப்பவே உனக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சு! திரும்பவும் வேலிக்குள்ள அடைச்சு வைக்கிறதுல நியாயம் இல்லே!  நீ உன் விருப்பம் போல வாழ்க்கையை அமைச்சுக்க! அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்! குட்பை என்றான்.
    நல்ல வாழ்க்கையை இழந்துவிட்டோமே என்று கண்ணீருடன் நின்றாள் வந்தனா.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




Comments

  1. இந்தக் கதையின் நாயகியைப் போல
    நல்ல வாழ்வினை யாரும் இழக்கக்கூடாது..

    இயல்பான நடையில் -
    இன்றைய சீரழிவினைப் படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்..

    ReplyDelete
  2. கதையாகவே இருக்கட்டும்...

    ReplyDelete
  3. டி டி அண்ணா சொன்னமாதிரி அது கதையாவே போகட்டும் சகோ!

    ReplyDelete
  4. கதையும் கனவுமாக மட்டுமே இருக்கட்டும்.

    ReplyDelete
  5. கதை நடை இயல்பாக சரளமாக இருந்தாலும், மனம் கொஞ்சம் கனத்து விட்டது! நிஜத்தில் நடப்பவைதான் என்றாலும், அதைக் கதையாகப் புனைந்து வாசிக்க நேரிடும் போது மனது ஏற்க மறுக்கிறது! என்ன செய்ய!!

    மனம் "சுபம்" என்ற வார்த்தையைத்தான் விரும்புகிறதோ!?

    படைப்பு அருமை!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. கதையாகவே இருக்கட்டும்....

    உண்மையாக இருந்துவிட்டால்..... அந்த பெண் மட்டும் குற்றவாளி அல்ல. அவளை ஏமாற்றிய அருண் போன்றவர்களும் தான்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!