ராகுல் வாங்கிய முத்தம்! கதம்பசோறு பகுதி 25

ராகுல் வாங்கிய முத்தம்!


   நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கி விட்டன. சூறாவளிப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அப்படி பிரச்சாரம் செய்ய சென்ற சமயத்தில் தான் வகையாக சிக்கினார் ராகுல் காந்தி. ஒரு பெண் தீடிரென பின்னாலிருந்து வந்து முகத்தில் முத்தமிட்டுவிட அதற்குள் இன்னொரு பெண்ணும் முத்தமிட வெட்கத்தில் நெகிழ்ந்து விட்டால் போதும் என்று கிளம்பினார். இந்த செய்தி கசிந்ததும் உடனே ஒரு பெண் தீவைக்கப்பட்டு இறந்ததும் அவர் ராகுலுக்கு முத்தமிட்ட பெண், அதனால் அவர் கணவர் எரித்துவிட்டார் என்று ஊடகங்கள் கொளுத்திப்போட்டன. அப்புறம் அப்படி இல்லை என்று தகவல்கள் வந்தன. சினிமா நட்சத்திரங்களும், அரசியல்வாதிகளும் இன்னும் மக்களுக்கு கவர்ச்சிப்பொருளாகவும் ஏதோ அதிசயமாகவும் இருக்கிறார்கள் என்றுதான் இந்த நிகழ்வை காணும்பொது தோன்றுகிறது. இப்படியே போனால் நாடு உருப்பட்டாமாதிரிதான்!

சஹாரா சுபர்தோ ராய்!

  20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை சுவாகா செய்த சுபர்தோ ராய் ஒரு வழியாய் நீதிமன்றத்தில் சரணடைந்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது வழக்கறிஞர் ஒருவரால் மையாபிஷேகம் நடந்தேறி இறுதியில் திகாரில் கம்பி எண்ணுகிறார்.சஹாரா குழுமங்கள் இந்தியாவில் செய்யாத தொழிலே இல்லை எனலாம். இந்திய அரசியல்வாதிகள் அனைவரிடமும் அவருக்கு பழக்கம் உண்டு. இந்த மோசடியில் நிறைய சந்தேகங்கள் இருக்கின்றன.  செபியில் இருந்த நேர்மையான ஒரு அதிகாரியால் இந்த முறைகேடு வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆனால் இதில் அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கும் பட்சத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்குமா? என்று தெரியவில்லை! இந்த இருபதாயிரம் கோடி முதலீட்டாளர்களும் போலி என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அப்படியானால் உண்மையான முதலீட்டாளர்கள் யார்? கறுப்பு பணம் விளையாடியதா என்பதெல்லாம் கிளற கிளற தோன்றும் புதிய பூதங்களாகும். அந்த பூதங்களை கைது செய்து உண்மை அறிந்தால் அதிர்ச்சிகள் பல காத்திருக்கும்.

ஆஸ்கர்களை அள்ளிய கிராவிட்டி!

  இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் போட்டியில் ஏழு விருதுகளை பெற்று வென்று சாதித்துள்ளது கிராவிட்டி. சிறந்த திரைப்படமாக 12 இயர்ஸ் எ ஸ்லேவ் என்ற படமும் சிறந்த நடிகராக மேத்யூ மெக்கனாகே, சிறந்த நடிகையாக கேட் பிளான்செட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த இயக்குனர் விருது கிராவிட்டி படத்தை இயக்கிய அல்போன்ஸோ குவாரோனுக்கு கிடைத்துள்ளது. அதிகபட்சமாக கிராவிட்டி படம் ஏழு விருதுகளை அள்ளிச்சென்றது. சிறந்த இயக்குனர், சிறந்த இசை, ஒளிப்பதிவு, , சிறந்த ஒலித்தொகுப்பு சிறந்த ஒலிக்கலவை, சிறந்த கிராபிக்ஸ்,சிறந்த எடிட்டிங்க் என ஏழு விருதுகள் பெற்றது கிராவிட்டி.


குடும்ப அட்டை இல்லாமேல வருமான சான்றிதழ்!

   வருமானச்சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை பெற இனி குடும்ப அட்டை அவசியம் இல்லை. சென்னையில் தொடங்கப்பட்டுள்ள இ- சேவை மையங்களில் ஒரு முறை தங்கள் சான்றிதழ்களை சமர்ப்பித்துவிட்டு ஒரு பிரத்யேக எண்ணை பெற்ற பிறகு அதையே பயன்படுத்தி சான்றிதழ்களைப் பெறலாம். சென்னையில் 14  இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் இன்னும் சில தினங்களில் மின்சாரக்கட்டணம், தண்ணீர்வரி, சொத்துவரி, உள்ளிட்டவைகளையும் செலுத்தலாம்.
 இந்த மையங்களில் விண்ணப்பதாரர் தனது குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அசல் சான்றுகளை ஒரு முறை தரவேண்டும். அவை ஸ்கேன் செய்யப்பட்டு கணிணியில் சேமிக்கப்படும். பின் கணிணியில் பெயர் பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்கள் அலுவலரால் பதிவு செய்யப்படும் பின் பதிமூன்று இலக்க கேன்(can) எண் வழங்கப்படும். இந்த எண்ணை கொண்டு சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்கலாம். விரைவில் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் இந்த மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அதன் பின் கேன் எண் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் வருமான, சாதி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இதுகுறித்த விபரம் அரசு அலுவலகர்களுக்கே தெரியவில்லையாம். சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், மாம்பலம், கிண்டி, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி தாலுகா அலுவலகங்களிலும் அடையார், பேசின்பிரிட்ஜ் மண்டல அலுவலகங்களிலும் சைதாப்பேட்டை, அசோக் நகர் சென்னை குடிநீர் அலுவலகங்களிலும் ஆறு நகர்ப்புற கூட்டுறவு சங்களிலும் இந்த இ- சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.

சாக்லெட் உடலுக்கு நல்லது!


சாக்லெட்டுக்களை அதிகம் சாப்பிடக்கூடாது. உடல் பருமனாகிவிடும் பல் சொத்தையாகும் என்று சொல்லுவோம்.  ஆனால் ஓர் ஆய்வு சாக்லெட் சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்று தெரிவிக்கிறது.
  நெதர்லாந்தில்  உள்ள உணவு மற்றும் நுண்ணூட்ட கழகம் மற்றும் வாகெனிங்கன் பல்கலைக்கழக ஆய்வுக்குழுவினர் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். டார்க் சாக்லெட்டுக்களை தொடர்ந்து சாப்பிடுவது தமனிகளை நெகிழ்வுத்தன்மையை தக்க வைக்க உதவுகிறது. மேலும் ரத்த வெள்ளை அணுக்கள் ரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாக குறைக்கிறது. தமனிகள் விரைப்பு, வெள்ளை அணுக்கள் ஒட்டுவது இதயத்தமனி வீக்கத்திற்கு காரணமாக அமைவது. சாக்லெட் சாப்பிடுவதால் இது தடுக்கப்பட்டு இதயம் ஆரோக்கியமாகிறது. என்று கண்டுபிடித்துள்ளனர்.

நாட்டின் முதல் தபால்துறை ஏ.டி.எம்.


   நாட்டின் முதல் தபால் துறை ஏ.டி.எம் மையம்  சென்னை தி.நகர் தலைமை அஞ்சலகத்தில் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தால் துவக்கி வைக்கப் பட்டது. இது ஒரு புதிய முயற்சி என்று குறிப்பிட்ட அமைச்சர் தபால்கள் குறைவதாலும் வேறு வழிகளில் ஈடுபட தபால்துறை சிறப்புப் பெற்று வருவதாக கூறினார். தபால் துறையில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த ஏ.டி.எம் மையம் பயனுள்ளதாக இருக்கும். ஆறு மாதத்திற்கு சோதனை முறையில் இந்த ஏ.டி.எம் செயல்படும். பின் எந்த வங்கி கணக்கிலும் பயன்படுத்தி பணம் எடுக்கலாம். முதல் கட்டமாக பதினோறு பேருக்கு ஏ.டி.எம் கார்டு வழங்கப்பட்டது.  சென்னையில் கிரீம்ஸ் சாலை, மயிலாப்பூர், அண்ணாசாலை அஞ்சலகங்களில் விரைவில் ஏ.டி.எம் வசதி செய்யப்பட உள்ளது.

ஆங்கிலேயரின் கொடுமை அம்பலமானது!

  பஞ்சாபில் பிரிட்டிஷ் ஆட்சியின் போது கிணற்றில் தள்ளி படுகொலை செய்யப்பட்ட இந்திய வீரர்கள் நூறு பேரின் எலும்புகள் மீட்கப்பட்டுள்ளன.
   ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1857ல் நாடுமுழுவதும் கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த கிளர்ச்சியில் ஈடுபட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டனர். அந்த ஆண்டில் அமிர்தசரஸ் பகுதியை நிர்வாகம் செய்த ஆங்கிலேய அதிகாரிகள் இந்திய வீரர்களை கொடூரமாக கொன்றனர். கிளர்ச்சியில் ஈடுபட்டதாக 150 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கை கால்கள் கட்டப்பட்டு ஆற்றில் வீசப்பட்டனர்.283 வீரர்கள் கைகளை கட்டி அமிர்த சரஸ் அருகேயுள்ள அஜ்னாலா நகருக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்த பாழுங்கிணற்றில் தள்ளி பத்து அடி உயரத்திற்கு மண்ணைப்போட்டு மூடிக் கொன்றனர். இந்த தகவல் அப்பகுதி வரலாற்று ஆசிரியர் சுரிந்தர் கோச்சார் என்பவர் கண்டறிந்தார். அப்பகுதியில் இருந்த சீக்கிய குழுவின் ஆதரவுடன் அந்த கிணறை கண்டுபிடித்தனர். அதை தோண்டியபோது 100 பேரின் மண்டை ஓடுகள் தாடை எலும்புகள் ஆயுதங்கள், நாணயங்கள், ஆபரணங்கள் ஆகியவை கிடைத்தன. செய்தி அறிந்த மக்கள் கிணற்றை சுற்றி நின்று ஆங்கிலேயரின் கொடுமையை நினைத்து மூதாதையர்கள் நினைவாக கண்ணீர் செலுத்தினர்.
நதியை சீரமைத்த மக்கள்!

    வேதாரண்யம்- தலைஞாயிறு பகுதியில் மணக்குடியில் தொடங்கி பலகிராமங்கள் வழியாக சென்று நாலு வேதபதி கிராமத்தின் 55 கண் பாலம் வழியாக கடலில் கலக்கிறது அரிச்சந்திரா நதி. இந்த நதியின் நீரைக் கொண்டுதான் இருபதுசுற்றுவட்டார மக்களின் விவசாயம் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு பகுதிகளுக்கு இதுதான் வடிகால். இதை நம்பி பலநூறு ஏக்கரில் இறால் பண்ணைகள் இயங்கிவருகின்றன. இப்படி பல்வேறு வகையில் பயனளிக்கும் இந்த நதியின் முகத்துவாரம் அடைபட்டு தூர்ந்து போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆற்றையே மறைக்கும் அளவிற்கு சுண்ணாம்பு பாறைகள் வளர்ந்துள்ளன. இதை தூர்வார வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் நடத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து மக்களே ஒன்றுகூடி களத்தில் இறங்கினர். விவசாயிகள் இறால்பண்ணை உரிமையாளர்கள் உள்நாட்டு மீனவர்கள் என மூன்று தரப்பினர் பத்துலட்சம் நிதி திரட்டினர். இதைக்கொண்டு முகத்துவாரம் 300 மீட்டர் தூரம் வரை தூர்வாரி சீரமைத்துள்ளனர். இதற்கு மேல் தூர்வார அவர்களிடம் நிதி வசதி இல்லை. அரசு தூர் வாரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இப்படி தூர் வாரி சீரமைத்தால் சுமார் 5000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இறால்வளர்ப்போருக்கும் உதவியாக இருக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

டிப்ஸ்! டிப்ஸ்! டிப்ஸ்!


ரசம் வைக்கும் போது துளசி, வெற்றிலை, தூதுவளை இவற்றில் ஏதாவது ஒன்றை தட்டிப் போட்டு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜலதோஷம் போகும்.

குருமா செய்யும் போது உப்போ காரமோ அதிகம் ஆகிவிட்டால் ஒரு கைப்பிடி அவலை மிக்சியில் பொடித்து போட்டால் அட்ஜஸ்ட் ஆகிவிடும்.

நாப்தலின் உருண்டைகளை பொடி செய்து தரையை துடைக்கப் பயன்படுத்தும் நீரில் கலந்து துடைத்தால் எறும்பு பூச்சிகள் வராது.

செல்போன்களில் நாம் உபயோகிக்காத ஆப்ஷன்களை ஆப் செய்து வைப்பதின் மூலம் பேட்டரியின் சக்தியை சேமிக்கலாம்.

உருளைக்கிழங்கு வேக வைத்த நீரை குளிரச்செய்து அந்த தண்ணீரில் தலைமுடியை சுத்தம் செய்து வந்தால் முடி நன்கு வளருவதோடு பளபளப்பாகவும் மாறும்.

ஃபிரிட்ஜின் கதவுகளை துடைக்கும்போது அதில் ஒரு சொட்டு நீலத்தை தண்ணீரில் கரைத்து துடைக்க கதவுகள் பளிச்சிடும்.


கிள்ளியது யார்?


ஒரு கணவனும் மனைவியும் துணிக்கடையின் லிப்டில் மாடிக்குச்சென்றார்கள். ஒரு அழகிய பெண்ணும் லிப்டில் வந்தாள். கணவன் அழகிய பெண்ணை ஒட்டியவாறு நிற்க திடீரென அந்த பெண் அவனை அறைந்தாள்.
  கணவன் அதிர்ச்சிஅடைந்தான். “ஏன் இப்ப என்னை அறைஞ்சே? என்று கேட்டான். அதற்கு அவள் “ எதுக்கு என் இடுப்பை இப்ப கிள்ளினே? என்றாள்.
  கணவனுக்கோ ஒன்றும் புரியவில்லை! மனைவிக்கு முன் இப்படி நடந்து விட்டதே! என்று அவமானம். அத்தோடு பயங்கர குழப்பம். நாம் கிள்ளாமலேயே அடிவாங்கி விட்டோம்! கிள்ளியது யாராக இருக்கும். லிப்ட் நின்றதும் அனைவரும் வெளியேற அவன் தயங்கி நின்றான்.
  அப்போது அவனது மனைவி அவன் காதில் சொன்னாள்.  ‘அதையே நினைச்சு பீல் பண்ணாதீங்க! உங்க ஜொள்ளைப் பார்த்து எரிச்சல்ல நான் தான் அவளைக் கிள்ளினேன்!

(படிச்சதில் பிடிச்சது)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. கதம்ப சோறு ரசிக்கும்படி இருக்கின்றது!..
    இருந்தாலும் - லிப்டில் அடி வாங்கிய கணவன்- பாவம்!..

    ReplyDelete
  2. இந்த இ-சேவை மையம் அனைத்து இடங்களிலும் விரைவில் வர வேண்டும்... டிப்ஸ்களுக்கு நன்றி...

    கணவனை வீட்டில் சென்று அடிப்பார்களோ...? ஹிஹி...

    இன்றைய பதிவில் சில குறிப்புகள் உங்களுக்கு உதவக் கூடும்... முக்கியமாக :

    4. வாசகர்களை நம் தளத்திற்கு வந்து வாசிக்க வைக்க...!

    6. .in என்பதை .com-யாக மாற்றி எல்லா நாட்டவரையும் வாசிக்க வைக்க...!

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisdom-3.html

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி டி.டி! உங்கள் தளம் சென்று என் தளத்திலும் சில மாறுதல்கள் செய்து கொண்டேன்! மிக பயனுள்ள பதிவு! நன்றி!

      Delete
  3. ராகுலுக்கு முத்தமிட்ட பெண் எரித்துகொல்லபட்டாராம் ....

    ReplyDelete
    Replies
    1. இல்லை ராஜா, அந்த பெண் வேறு யாரோ! என்று தகவல்கள் அறிந்தேன்!

      Delete
  4. அனைத்தும் அருமை
    பஞ்சாபில் எலும்புக்கூடுகள், இலங்கையை நினைவு படுத்துகின்றன.

    ReplyDelete
  5. சமீபத்தில் தான் ரத்தம் ஒரே நிறம் படித்தேன்.. சிப்பாய் கலகம் குறித்த நாவல் அது.. அதனுடன் கொடுத்திருக்கும் தகவலை தொடர்புபடுத்த முடிகிறது

    ReplyDelete
  6. சில புதிய செய்திகள். பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி

    லிப்ட் ஜோக் அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!