உபகாரி!

உபகாரி!

“ஐயோ! என் குழந்தைக்கு ஒடம்பு நெருப்பா சுடுதே!” கையில ஒத்த பைசா இல்லையே! நான் என்ன செய்வேன்! என்ற குரல் சத்தமாக ஒலித்தது. மகாவின் காதிலும் இந்த அழுகுரல் விழுந்தது.
    மகா, அந்தக்குரலைக் கேட்டு வாசலில் வந்து எட்டிப்பார்த்தாள். அவள் வீட்டிற்கு எதிர்த்தாற்போல ஒரு பில்டிங்க் கட்டுமானம் நடந்து கொண்டிருந்தது. அங்கு வேலை செய்யும் குடும்பம் ஒன்று அங்கு டெண்ட் அடித்து தங்கியிருந்தது அங்கிருந்துதான் அந்த குரல் கேட்டது.
    மகா பெரிய பரோபகாரி! யார் வீட்டில் எது நடந்தால் என்ன என்றெல்லாம் சும்மா இருக்க மாட்டாள். வலிய சென்று இழுத்துப்போட்டு உதவுவாள். சில சமயம் நல்ல பேர் எடுத்தாலும் பல சமயம் கெட்ட பெயர்தான் பரிசாக கிடைக்கும். இன்றைக்கு உதவி செய்பவர்கள் எல்லாம் இளிச்ச வாயர்களாகத்தானே கருதுகிறார்கள். இயல்பிலேயே இரக்க சுபாவம் கொண்ட மனது மகாவிற்கு. மீண்டும் அந்த டெண்டில் இருந்து அழுகுரல் பலமாக கேட்க அங்கே சென்று பார்க்க முடிவு செய்தாள்.
    அவள் கணவன் குமார் வேறு ஆபிஸில் இருந்து வரும் நேரம். இந்த நேரத்தில் வீட்டை பூட்டிச் சென்றால் கத்துவான். இவள் போல அவனுக்கு இரக்க குணமே கிடையாது. யார் எப்படிப் போனால் என்ன? நம் வேலையைப் பார் என்பான். பிச்சைக்காரனுக்கு எட்டணா காசு போடவே யோசிப்பவன். காசு என்ன செடியிலா காய்க்கிறது பறித்து எடுத்துக்கொள்ள? ஒவ்வொரு பைசாவும் உழைத்தால்தான் கிடைக்கிறது அதை எதற்கு வெட்டியாக அடுத்தவனுக்கு கொடுப்பது? என்று கேட்பான்.
   அப்படி மகாவிற்கு நேர் எதிர் கொண்ட குமார் வருவதற்குள் அந்த வீட்டில் என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ள முடிவு செய்தாள் மகா. நடையை விரைவாக போட்டு அந்த டெண்டை அடைந்தாள். டெண்ட் என்று சொல்ல முடியாது. ஒரு கிழிந்த தார்பாயை விரித்து கட்டியிருந்தார்கள். ஒரு மண்ணெண்ணை ஸ்டவ் நாலைந்து பாத்திரங்கள் துணி மூட்டைகள் எல்லாம் அந்த நாலு அடி டெண்டில் அடங்கி கிடந்தது.
     ஒரு ஐந்து வயது குழந்தை முணகியபடியே கண் திறக்காமல்படுத்துக்கிடந்தது. அதற்குத்தான் காய்ச்சல் போலும். புதிதாக யாரோ வந்து நின்றவுடன் அழுது கொண்டிருந்த அந்த பெண் நிமிர்ந்தாள். “ நான் மகா! எதிர்த்த வீட்டுல குடியிருக்கேன்! என்ன ஆச்சு?” என்றாள்
   “ அம்மா! பையனுக்கு காய்ச்சல்மா! கண்ணை திறக்கமாட்டேங்கிறான்! நெருப்பா கொதிக்குது! கையில காசு பைசா இல்லை! மேஸ்திரியும் தர மாட்டேங்கிறார். இவரும் ஊருல இல்லை! கொழந்தைக்கு அனலா கொதிக்குது ஜுரம்! பக்கத்துல டாக்டர்கிட்ட காட்டனும்! யாரும் உதவமாட்டேங்கிறாங்க! என்று அழுகையினூடே அவள் சொல்ல இரக்க குணம் கொண்ட மகா அந்த பையனின் நெஞ்சில் கை வைத்து பார்த்தாள். ஜுரம் கடுமையாகத்தான் இருந்தது.
     “ அழாத! அழாதேம்மா! நான் உதவுறேன்!” என்று சொன்னவள் வெடுக்கென தன் கையில் போட்டிருந்த அரைபவுன் மோதிரத்தை கழட்டி அந்த பெண்ணிடம் தந்தாள்.
   “ அம்மா! வேண்டாம்மா! நகையெல்லாம் வேணாம்மா! ஒரு ஐம்பது நூறோ கொடுங்க! பக்கத்து தெரு டாக்டர்கிட்டே காட்டினா சரியா போயிரும்!”
    பயப்படாதே! நகை முக்கியம் இல்லை! புள்ளையோட உசுருதான் முக்கியம்! இப்ப என் கையிலும் பைசா இல்லை! இத வச்சி ஒரு ஆயிரமோ ஐநூறோ வாங்கி பையனை ஆஸ்பத்திரியிலே காட்டு! உன் வீட்டுக்காரர் வந்ததும் மீட்டுக் கொடுத்துடு!
     இல்லே! இல்லேம்மா! என் ஊட்டுக்காரு…
   எனக்கு டைம் ஆகுது! என் வீட்டுக்காரர் வர்ற நேரம்! அப்புறம் பாக்கலாம்! கிளம்பிவிட்டாள் மகா.
   வீட்டிற்கு சென்று பணம் எடுத்து வந்து கொடுத்திருக்கலாம்தான்! ஆனால் அவன் கணவன் வந்த பின் திரும்பவும் செல்ல முடியாது. எதற்கு ஏன்? என்று ஆயிரம் கேள்விகள் கேட்பான். ஏற்கனவே அவனது வருமானத்தை வீணாக செலவழிக்கிறாள் என்று சொல்லிவருகிறான். இது மாதிரி தெரிந்தால் கொடுக்க விடமாட்டான். அதனால் நகையை கழட்டிக் கொடுத்துவிட்டாள். இவள் வீட்டிற்கு வரவும் குமார் வருவதற்கும் சரியாக இருந்தது.
   “ என்னடி! எங்க போய் சுத்திட்டு வர்ற?”
  ”ஒண்ணுமில்லேங்க! அங்க ஏதோ சத்தம் கேட்டது! அதான் என்னன்னு போய் பார்த்துட்டு வந்தேன்!”
   “ ஆமா!  உனக்கு இதே வேலையாப் போச்சு! சரிசரி போய் காபி கொண்டா!”
   காபி எடுத்துவரும் போது கவனித்துவிட்டான். “ ஏய் மகா! கையில மோதிரம் எங்கே?”
   “ விரலிலே ஒரே அரிப்பா இருந்துச்சுங்க! கழட்டி பீரோவில வைச்சிருக்கேன்!”
    ‘எங்க தொலைச்சுட்டியோன்னு பார்த்தேன்!”

அப்பாடா! ஒரு வழியாக இன்று சமாளித்தாகிவிட்டது. அது அவன் முதல் கல்யாண நாளில் ஆசையாக வாங்கி தந்த கிப்ட்! தொலைந்து போனால் ஓவென்று கடித்து குதறிவிடுவான். எப்படியும் இரண்டு நாளில் திருப்பி வாங்கிவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். அடுத்த நாள் அவளது அம்மா வீட்டில் திடீரென்று அழைக்கவே கிளம்பிச் சென்றவள் மோதிரத்தை மறந்தே போனாள்.
   இரண்டுநாள் கழித்து வந்தவள் எதிரே டெண்ட் காணாமல் போயிருந்ததை பார்த்து அதிர்ந்தாள். நெஞ்சு ‘பக்’ கென்று இருந்தது. போச்சு! எல்லாம் போச்சு! அவருக்கு என்ன பதில் சொல்வது? சரி போய் விசாரிப்போம் என்று குமார் அலுவலகம் சென்றதும் அந்த கட்டிடம் கட்டும் பணியாளர்களை விசாரித்தாள்.
  “ ஏம்மா! இங்க டெண்ட் போட்டு ஒரு பொண்ணு இருந்துச்சே! ஒரு அஞ்சு வயசு பையன் கூட உடம்பு சரியில்லாம…”
     “ஆமா! அதுங்க காலி பண்ணி போயிருச்சுங்களே! மேஸ்திரி கொடுக்கிற சம்பளம் பத்தலைன்னு வேற எங்கயோ வேலை பார்த்துட்டாங்களாம்!”
   “ எங்க போயிருக்காங்க தெரியுமா?”
    “எதுக்கும்மா கேக்குற?”
  மகா தயங்கி தயங்கி விவரம் சொன்னாள். அதைக்கேட்ட அங்கிருந்த அந்த மூத்த பெண்மணி, “ விவரம் தெரிஞ்ச காலத்துல இப்படி கூட இருப்பியா? அரைபவுன் மோதிரத்தை கழட்டி கொடுத்திருக்கியே! இப்ப எங்கன்னு போய் தேடுவ?” என்றாள்.
     “ உங்களுக்கு தெரியாதா?”
  “அவ புதுசும்மா! இப்பத்தான் ஒரு வாரம் முன்னாடி விழுப்புரம் பக்கத்தில இருந்து வந்தா!”
      “அவ பேரு!”
 “சர்தான்! பேரு கோடத்தெரியாமத்தான் மோதிரத்தை கழட்டிக்கொடுத்தியா நல்ல பொம்பளம்மா நீ!”
    “இல்லே! பையன் ரொம்ப முடியாம படுத்துக் கிடந்தான்! அவ கதறி அழவும்…”
    “மனசு இரங்கிட்டியாக்கும்!”
மகாவால் ஒன்றும் பேச முடியவில்லை! சரிம்மா! நாங்க விசாரிக்கிறோம்! நாளைக்கு வந்துபாரு என்று முடித்துக் கொண்டார் அந்த மேஸ்திரி.
    குமாருக்கும் விசயம் தெரிந்து விட்டது. அப்பன் குதிருக்குள் இல்லை என்று எத்தனைநாள் மறைக்க முடியும்.
  “ எவ்வளவு தைரியம் இருந்தா நான் கிப்டா கொடுத்த மோதிரத்தை கழட்டிக் கொடுத்திருப்ப!”
    “இல்லைங்க! சட்டுன்னு தோணுத்து! அந்த பையன பாக்க பரிதாபமா இருந்தது. வீட்டுக்கு வந்து பணம் எடுத்துட்டு போக அவகாசம் இல்லை! நீங்க வந்துருவீங்கன்னு…”
      “ஓகோ! உன் உபகாரத்தை நான் கெடுத்துடுவேன்னு! மோதிரத்தை கழட்டிக் கொடுத்திட்டே!”
   மகாவால் பதில் பேச முடியவில்லை!
 “எனக்கு நல்ல மதிப்பு இருக்கு இந்த வீட்டுல! என்ன கர்மம்டா சாமி! ஒரு ஐம்பதோ நூறோ தானம் பண்ணுவாங்க! இவ என்னடான்னா அரைபவுன் மோதிரத்தை தாரை வாக்கிறா! பெரிய கர்ண பரம்பரைன்னு நினைப்பு! இன்னிக்கு என்ன விலை தெரியுமா?”
    “ நாளைக்கு விசாரிச்சு சொல்றேன்னு சொல்லியிருக்காங்க!”
   “ஆமாம்! இதை நம்பு! அவங்க விசாரிச்சு சொல்லி நீ அட்ரசை கண்டுபிடிச்சு வாங்கிட போறே? அதுங்க நாடோடி கும்பல்! கிடைச்சவரைக்கும் லாபன்னு கிளம்பிட்டுருக்கும்!”
    அவன் சொன்னது உண்மைதான்! அவள் இருக்குமிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை! என்று சொல்லிவிட்டார்கள் அந்த கட்டிடத்தில் வேலை செய்பவர்கள்.
 பத்து நாளாக குமார் அவளிடம் முகம் கொடுத்து பேசாதது வேதனையாக இருந்தது. எந்த வேலையும் ஓடவில்லை! அன்று மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வரலாம்! என்று கிளம்பினாள். மார்க்கெட்டினுள் நுழையும் போது எதிரே அவள்! அந்த மோதிரத்தை வாங்கியவள். உடன் அவள் கணவன் போல! கையில் அந்த குழந்தையுடன்.
   மகா சிநேகமாக புன்னகைக்க, அவள் தெரியாதது போல விலகினாள். என்னம்மா! என்னம்மா! கொஞ்சம் நில்லு! இவள் குரல் கொடுக்க அவள் காதில் வாங்காதது போல கூட்டத்தில் மறைந்து விட்டாள்.
    யாரோ செவிட்டில் அறைந்தார்ப்போல இருந்தது மகாவிற்கு. அட என்னமாய் ஏமாற்றிவிட்டாள். என் முகத்தில் ஏமாளி என்று எழுதி ஒட்டியிருக்கிறதோ? அழுகை முட்டிக்கொண்டு வந்தது. காய்கறி கூட வாங்காது வீட்டிற்கு சென்று படுக்கையில் விழுந்து அழுதாள்.
    யாரோ தொடுவது போல இருக்க எழுந்தாள். குமார்தான் நின்றிருந்தான். என்னங்க வந்திட்டீங்களா? என்று அவன் மார்பில் புதைந்து அழுதபடி நடந்ததை கூறினாள்.
   “ சரி! விடும்மா! இதுக்கு போய் ஏன் அழறே!”
   மகா கணவனை ஆச்சர்யமாக பார்த்தாள். “ அவ என்னை ஏமாத்திட்டாங்க!” என்றாள் விம்மியபடி!
   “ ஏன்! நீ ஏமாந்துட்டதா எடுத்துக்கேயேன்!” சரி! ஒரு நல்ல காரியத்துக்கு நீ பணம் கொடுத்ததா நினைச்சுக்க! போனது திரும்பவராது! விட்டுத்தள்ளு!”
   “ உங்களுக்கு எம் மேல கோவம் இல்லையா!”
  “ இப்படி ஏமாளியா இருக்கிறியேன்னுதான் கோவம்!” எல்லாருக்கு உதவி செஞ்சி கெட்ட பேரு வாங்கிட்டு வர்றியேன்னுதான் கஷ்டம்!”
    “ யாராவது கஷ்டபட்டா சகிச்சுக்க முடியலைங்க!”
     “சரி அது உன் குணம்!”   “ஆனா இனிமே கவனமா நடந்துக்க!”
    கணவன் சற்று ஆறுதலாய் நடந்துகொண்டது அவளுக்கு நிம்மதியைத் தந்தது. ஒரு வாரம் ஓடிப்போனது. அன்று கணவனை ஆபிசிற்கு அனுப்பிவிட்டு  டீவி சீரியலில் மும்முரமாய் இருந்த போது காலிங் பெல் அடித்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.
   எதிரே அவள், மோதிரத்தை ஏமாற்றியவள்! குழந்தையுடன் நின்றிருந்தாள்.
   மகாவிற்கு கோபம் பொத்துக் கொண்டுவந்தது! “ வாடியம்மா! வா! இப்ப என்ன வேணும் என்றாள் எரிச்சலாக.
    அக்கா!
    ‘ என்னடி அக்கா! நொக்கான்னு உறவு கொண்டாடிக்கிட்டு! அன்னிக்கு கடைத்தெருவுல கூப்பிட கூப்பிட திரும்பிக்கூட பார்க்காம.போனே!”
    அவள் சட்டென்று மகாவின் காலில் விழுந்தாள். அக்கா! என்னை மன்னிருச்சுக்கா! நான் செஞ்சது தப்புத்தான்!  அன்னிக்கு மறுநாள் மோதிரத்தோட உங்க வீட்டுக்கு வந்தேன். வீடு பூட்டியிருந்தது. சரின்னு எடுத்திட்டு போயிட்டேன். எங்க வீட்டுக்காரன் ஒரு குடிகாரப்பய! அதுங் கண்ணில பட்டா வித்து குடிச்சுரும்.அதனால திரும்பவும் அடகு கடையிலேயே வைச்சிட்டேன். இத்தனை நாளா இதை மீட்க முடியலை! எல்லா பணத்தையுமே குடிச்சு அழிச்சுருச்சு! அதுக்குத்தெரியாம பணம் சேத்து நான் ஒளிச்சு வைக்க பட்டப்பாடு இருக்கே! அதுவும் இல்லாம யாருகிட்டேயும் எதுவும் வாங்கினா தொலைச்சு போடும்! உங்க கிட்ட மோதிரம் வாங்கியிருக்கேன்னு தெரிஞ்சுதுன்னா கேள்வி கேட்டே கொன்னுபோடும்அன்னிக்கு எங்க ஊட்டுக்காரர் கூட இருந்ததாலே ஒங்களை பார்க்காதமாதிரி போயிட்டேன். என் புருசன் கண்ணுல மண்ணைத்தூவி இந்த மோதிரத்தை  மூட்டுஎடுத்துவர லேட்டாயிருச்சுக்கா! சமயத்துக்கு உதவின தெய்வம் நீ! உன்னைப்போய் பார்க்காத மாதிரி போனது தப்புதான்! என்னை மன்னிச்சிருக்கா! என்றாள் அந்த பெண் மோதிரத்தை நீட்டியபடி!
   என் கண்ணால் நம்ப முடியவில்லை! நல்ல காரியத்திற்கு உதவினால் நல்லதே நடக்கும் என்று அவளுக்கு உரைத்தது.
“ எழுந்திரும்மா! பையன் நல்லா ஆயிட்டானா!” நான் தான் அவசரப்பட்டு தப்பா நினைச்சிட்டேன்! என் தப்புத்தான்! நீ ஏன் காலிலே விழுறே!”  என்று அவளை தூக்கியவள். உள்ளே சென்று சில பழங்களை எடுத்துவந்து உன் பையனுக்கு கொடு என்று கொடுத்து அனுப்பினாள்.
   அன்று இரவு, கணவனிடம் மோதிரம் திரும்ப வந்த கதையை சொன்னபோது, ஊருல உன்னைத்தவிர இன்னொரு ஏமாளியும் இருக்கா போல! என்றான் நக்கலாக.
    “என்னைப் போல நல்லவங்களும் இருக்காங்கன்னு ஏன் எடுத்துக்க கூடாது?” என்றாள் மகா!
   “எப்படியோ நான் உழைச்சு உனக்கு போட்ட மோதிரம் கிடைச்சிருச்சு! அதுல எனக்கு மகிழ்ச்சிதான்!” என்றான் குமார் அவளை அணைத்தபடி!
     

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


Comments

  1. // நீ ஏமாந்துட்டதா எடுத்துக்கேயேன்... // ஒரு பச்சாபத்தில் அவசர உதவி செய்தாலும் தவறு நமது தான் என்பதை கணவன் சொல்லிச் சமாளித்தாலும், "நல்ல காரியத்திற்கு உதவினால் நல்லதே நடக்கும்" என்று முடித்தது அருமை... பாராட்டுக்கள்...

    ReplyDelete
  2. நல்ல கதை. அருமையான முடிவு.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. இந்த சமூகம் ஏமாற்றுவதில் கில்லாடியாக இருந்தாலும், நேர்மறையான எண்ணத்துடன் அதாவது, நல்லதையும், நல்ல நேர்மையான மனதுடன் நினைத்துச் செய்தால் நல்லதே நடக்கும்! என்று நல்லதொரு முடிவைக் கொடுத்துள்ளீர்கள்!

    நல்ல கதை! நன்றாக எழுதி உள்ளீர்கள்!

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. அருமையான கதை
    அருமையான முடிவு
    வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  5. அருமையான கதை..அவசரப்பட்டு முடிவு செய்யும் சூழ்நிலை..காலம் அப்படி..என்ன செய்வது..

    நல்லதொரு முடிவு..நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்.

    ReplyDelete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

    வலைச்சர தள இணைப்பு : தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!

    ReplyDelete
  7. கதை நன்று.....

    ஏமாற்றுபவர்கள் மட்டுமல்ல, நல்லவர்களும் இருக்கிறார்கள்.....

    பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!