நியாயம்!

 நியாயம்!


காலைப்பொழுது சுறுசுறுப்பாக வாகனங்கள் சாலையில் இயங்கிக்கொண்டிருக்க பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப தாய்மார்களும் அலுவலகத்திற்கு கிளம்பும் அவசரத்தில் கணவர்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர். அந்த அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் தலையில் கூடையோடு வந்து நின்றாள் காமாட்சி.
    கூடை முழுவதும் காய்கறிகளும் கீரைகளும் பச்சை பசேல் என்று அன்று பறித்தார் போல கண்ணைப்பறித்தது. சற்றே பெரிய மூங்கில் கூடையில் காய்கறிகளை பதமாக அடுக்கி தலையில் ஒரு முண்டாசு கட்டி அதன் மீது கூடையை சுமந்து கொண்டு காலில் ஓர் வார் அறுந்த செருப்பை பின் போட்டு மாட்டிக்கொண்டு நடந்தே அந்த குடியிருப்புக்களில் வியாபாரம் செய்யும் காமாட்சிக்கு வயது எப்படியும் அறுபதைக் கடந்திருக்கும். நெற்றியில் நாலணா சைசுக்கு குங்குமம். மஞ்சள் அவள் வீட்டில்தான் விளைவது போல செழுமையாக பூசியிருப்பாள். வாயில் வெத்தலைப்பாக்கோடு அவள் அம்மா காய்கறிம்மா! கீரை, முள்ளங்கி, கத்திரிக்கா, தக்காளி… என்று குரல் கொடுத்தபடி வருவாள். உள்ளே எங்காவது இருந்தால் கூட அவள் குரல் அழைத்துவந்துவிடும். அப்படிப்பட்ட ஓர் கணீர் குரல் அது.
    ‘ என்ன காமாட்சி! இன்னிக்கு சீக்கீரமே வந்துட்டே போல!’ என்று மூன்றாவது தளத்தில் வசிக்கும் சுபத்ரா மாமி சிரித்துக்கொண்டே கேட்க, "ஆமாம்மா! இன்னிக்கு வெள்ளனையே கிளம்பிட்டேன்! தினமும் வியாபாரம் முடிச்சு ஊடு போய் சேர பொழுதாயிருது! அதுக்கப்புறம் எப்ப கஞ்சி காச்சி ஊத்திக்கிறது! அதான் கொஞ்சம் சீக்கிரமா கிளம்பி வந்திட்டேன்! என்றவள், சரிசரி அய்யரூட்டூம்மா! இந்தா ஒரு கை பிடி கூடையை இறங்கிவச்சிடறேன்! கழுத்தெல்லாம் ஒரே பாதையா இருக்கு" என்றாள்.
    சுபத்ரா மாமி கூடையை இறக்கி வைத்ததும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து காய்கறிகளை பார்வையிட்டனர். காயெல்லாம் நல்லாத்தான் இருக்கு! ஆனா நீ யானை விலை குதிரை விலை! இல்லே சொல்லுவே! என்றார் ஆடிட்டர் பத்மனாபன்.
   "இன்னாசாரே! இப்படி சொல்றீங்க! அதெல்லாமா இந்த கூடையிலே சுமந்து கொண்டுவந்து விக்க முடியும்! இது தோட்டத்துல விளைஞ்ச காய்கறி சார்! கடையில ஐஸ்பெட்டியில வச்சு நாலு நாள் கழிச்சி விக்கிறது இல்லை! இன்னிக்கு பறிச்சு இன்னிக்கே கொண்டாறது!  உடம்புக்கு ஆரோக்கியம் தரும்! பூச்சி மருந்து அடிக்காதது! இந்தா சார் முள்ளங்கி! கால்கிலோ அஞ்சுரூபாதான்! எடுத்துக்கோ சார்! " என்றாள்.
    "என்னது! மார்கெட்டிலேயே 15 ரூபாதான் கிலோ! நீ இன்னா இந்தவிலை சொல்றே!" என்று  தக்காளி ஒன்றை எடுத்து கடித்தாள் அம்புஜம் மாமி.
    "மாமி! நீங்க இந்த மாதிரி மார்க்கெட் போயி தக்காளியை எடுக்க முடியுமா? எல்லாம் நாட்டுத் தக்காளி. சாறு எவ்வளவு வருது பாருங்க! இங்கிருந்து நீங்க மார்க்கெட் போயி திரும்ப ஆட்டோ எல்லாம் வேணும் இல்லே! நான் சல்லிசா கொண்டாந்து கொடுத்தா இப்படி பேரம் பேசறீங்களே!"
   "நல்லா பேசக்கத்துக்கிட்ட நீ! நாங்கள்லாம் வாங்கலைன்னா உனக்கு வியாபாரம் ஆயிடுமா? ஏதோ வயசானவளாச்சே! வியாபாரம் செஞ்சிக்கிடட்டும் என்று நான் பர்மிசன் கொடுத்து இருக்கேன் எனக்கே ஒரு ரெண்டு ரூபா குறைச்சு தரமாட்டேங்கிறீயே!" என்றார் செக்ரெட்டரி பட்டாபி.
    இப்படித்தான் தினமும் அவளிடம் பேரம் பேசி குறைத்து கேட்பார்கள் அந்த அடுக்குமாடி வாசிகள். ஆனால் காமாட்சி பைசா குறைக்க மாட்டாள். நகரத்தினை விட்டு தள்ளி இருந்தஅந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தள்ளி அவளது கிராமம் இருந்தது. அங்கு தோட்டத்தில் விளையும் காய்கறிகளை அதிகாலையில் எழுந்து பறித்து கூடையில் பதமாக அடுக்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோவில் அதை ஏற்றி இந்த  நகர் வரை அதில் பயணித்து பின் நடையாய் குடியிருப்புக்களை சுற்றி வந்து விற்பதற்குள் அவள் உடல் தளர்ந்து விடும். ஆனால் அவளது கடுமையான அசாத்தியமான உழைப்பை போற்ற வேண்டும். ஒரே மகனும் ஏதோ விபத்தில் இறந்துவிட நோயாளிக் கணவனை இவள் சம்பாதித்துதான்  காப்பாற்றுகிறாள்.
    அதிகாலையில் எழும் அவள் வியாபாரம் பார்த்துவிட்டு மதியம் ஊர் திரும்பி சாப்பிட்டு பின் வயல்களுக்கு சென்று பராமரித்து பின் இரவு உணவு முடித்து சாப்பிட்டு படுக்க எப்படியும் பத்து மணியைத் தாண்டிவிடும். மீண்டும் அதிகாலை நாலுமணிக்கெல்லாம் எழுந்துவிடுவாள். அப்போதுதான் குளித்து முடித்து காய்கறிகளை பறித்து எடுத்து கிளம்ப முடியும்.
ஆனால் எது எதற்கோ தண்ட செலவு செய்யும் இந்த அடுக்குமாடி வாசிகள் இவளைக் கண்டால் பேரம் பேசுவர். பேரம் பேசுவது வியாபாரத்தின் ஒரு கலைதான். அதை பேசவேண்டிய இடத்தில் பேசினால் சரி. இது போன்ற சிறு வியாபாரிகளிடம் பேசி ஒரு ரூபாய் சேமிப்பதில் என்ன வந்துவிடப்போகிறதோ!
    சுபத்ரா மாமியைத் தவிர யாரும் அங்கு காய்கறி வாங்க மாட்டார்கள். அது காமாட்சிக்கும் தெரியும். இருந்தாலும் விடாமல் விடாமுயற்சியாக அவள் வந்து கொண்டுதான் இருந்தாள். அவள் வரும்போது சூழ்ந்து கொள்ளும் கூட்டம் ஆனால் வியாபாரம் மட்டும் கிடையாது.

   "உங்களாலேதான் மாமி அவ துள்ளறா! நீங்களும் வாங்கலைன்னா! அவ கட்டாயம் குறைச்சு கொடுப்பா!  நீங்க அவ சொன்ன ரேட்டை கொடுத்து வாங்கி வாங்கி அவளை ஏத்தி விட்டுட்டேள்" அம்புஜம் சொல்ல
  "ஆமாம் ஆமாம்! வியாபாரம்னா பேரம் இருக்கணும்! உங்களுக்கென்ன ஆத்துக்காரர் கவர்மெண்ட்ல பெரிய ஆபீசர்! பணமழை கொட்டறது போல! ஆனா நாங்களும் வாங்கணும் இல்லையா! " செகரெட்டரி பட்டாபி தன் பங்கிற்கு குற்றம் சொல்ல சுபத்ராவுக்கு கோபமாய் வந்தது.
   "மாமா!  போதும் நிறுத்துங்க! பாவம்! வயசான காலத்துல ஆதரவில்லாம போய்,பிச்சை எடுக்காம, தன் கால்ல நிந்து சுயமா சம்பாதிக்க நினைக்கிற பொண்ணு இந்த காமாட்சி! பெண் விடுதலை! சுயமுன்னேற்றம்னு என்ன என்னவோ பேசறோம்! ஆனா இப்படி ஒரு வயதான பொண்ணு தன் கால்ல நின்னா அதுக்கு நாம உறுதுணையா  இருக்க வேண்டாமா? வாஸ்தவம்தான்! அவ விலை கூடுதலாத்தான் விக்கிறா! ஆனா ஏமாத்தறாளா? எடையை குறைச்சு கொடுக்கிறாளா? அவ போடுற எடையில கூடுதலாத்தான் காய்கறி விழும். நான் கொடுக்கிற ரெண்டு ரூபாயில நான் ஒண்ணும் ஏழையாகிட போறது இல்லை! அவளும் பணக்காரியா மாறிடப் போறது இல்லை! ஆனா அவ வயித்தினை மானத்தோட கழுவிக்க அது உதவுது இல்லை! அதுக்கு ஏதோ ஒரு சின்ன உதவி! நீங்களும் செய்யணும்னு நான் கட்டாயப்படுத்தலை! என்னால முடியுது செய்யறேன்! அதை குறைசொல்லாம இருக்கலாம் இல்லையா!"
  படபடவென்று சுபத்ரா பேசி முடிக்க அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து அனைவரும் பதில் பேசாமல் கலைந்தனர்.

டிஸ்கி} இனி செவ்வாய் கிழமைகளில் சிறுகதைகள் எழுதலாம் என்று நினைக்கிறேன்! உங்கள் திருத்தங்களை கூறி வளருங்கள்! குறிப்பாக பாலகணேஷ் அவர்களின் திருத்தங்களை எதிர்பார்க்கிறேன்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. // மஞ்சள் அவள் வீட்டில்தான் விளைவது போல செழுமையாக பூசியிருப்பாள். // இந்த வரியை வெகுவாய் ரசித்தேன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது நீங்கள் எழுதியது தானா என்பதை கீழே சென்று ஒருமுறை உறுதிபடுத்திக் கொண்டேன் என்றால் பாருங்கள் :-)

    ReplyDelete
    Replies
    1. நான்... நான்.. நானேதான் எழுதினேன் மன்னா! இதிலென்ன சந்தேகம்!... ஹாஹாஹா! சீனு! உங்களவுக்கு இல்லேன்னாலும் ஓரளவு எழுதுவோம்ல! நன்றி நண்பா!

      Delete
  2. சுரேஷ்...! என் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருப்பதன் மூலம் நீங்கள் எனக்களித்திருக்கும் மதிப்பிற்கு மனம் நெகிழ்ந்த நன்றி! ஆனா... அதிலயே ஆபத்தும் இருக்கு. என்னன்னா... இப்படி ஒரு சர்க்கிளுக்குள்ள வந்துட்டிங்கன்னா,நீங்க மாத்திக்கறதுக்காக வேண்டி குத்தம் குறை சொல்றதுல தயக்கமிருக்காது எனக்கு. அதான் ஆபத்து! சரி... இந்தச் சிறுகதையைப் பொறுத்தமட்டில் எடுத்துக் கொண்ட கருவும், சொன்ன விதமும் வெகு அழகு! மேலே சீனு குறிப்பிட்டிருக்கும் விஷயத்தை நானுமே மிக ரசித்தேன். இவையெல்லாம் உங்களுக்கான பாராட்டுகள்!
    (தொடரும்)

    ReplyDelete
  3. குறையாக அல்ல... இன்னும் சிறப்புற விரும்பி, நான் உங்களுக்குக் குறிப்பிட விரும்பும் விஷயம் (இக்கதையைப் பொறுத்தமட்டில்) என்னவெனில்... உரைநடையை கலோக்கியலாக எழுதினால் முழுமையாக அப்படி இருக்க வேண்டும். செந்தமிழில் எழுதினால் முழுமையாக செந்தமிழில் இருக்க வேண்டும். இரண்டும் கலக்கக் கூடாது தம்பி.

    உதா : "இன்னாசாரே! இப்படி சொல்றீங்க! அதெல்லாமா இந்த கூடையிலே சுமந்து கொண்டுவந்து விக்க முடியும்" அப்படின்னு எழுதியிருக்கீங்க. இதில் ‘சுமந்து கொண்டு" என்பது வழக்குத் தமிழ் அல்ல... "சுமந்துகிட்டு" என்று வரணும். "தினமும் வியாபாரம் முடிச்சு" & என்பது "தெனம் யாவாரம் முடிச்சு" என்று வந்தால் வழங்குதமிழ். ஆக... உரைநடையில் இன்னும் கவனம் செலுத்தினீர்களெனில் பாராட்டு மாலைகள் இன்னும் குவியும். என் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. என் அழைப்பினை ஏற்று என்னுடைய கதையில் திருத்தங்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சார். சீனுவின் கதைகளிலும் ஆவியின் கதைகளிலும் நீங்கள் சொல்லும் திருத்தங்கள் ஆலோசனைகளை பின்னூட்டத்தில் படித்து கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கிறேன்! மேலும் நீங்கள் பதிப்பகத்துறையில் இருப்பதாலும் நிறைய எழுத்தாளர்களின் படைப்புக்களை வாசித்து சிறப்பான விமர்சனங்களை தந்திருக்கிறீர்கள். உங்கள் படைப்புக்களும் என்னை கவர்ந்திருக்கின்றன. பொத்தாம் பொதுவாக ஒரு படைப்பை பாராட்டாமல் அதில் உள்ள நிறை குறைகளை சிறப்பாக அலசுகிறீர்கள். இதனால் உங்கள் கைபட்டு திருத்தங்கள் பெற்றால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. அதனால்தான் அழைத்தேன். குறைகளை பிழைகளை தாராளமாக தயங்காமல் சொல்லி திருத்துங்கள்! மனம் வருத்தப்பட மாட்டேன். இதில் என்ன ஆபத்து என்பது மட்டும் புரியவில்லை! நீங்கள் சொன்ன திருத்தங்களை பதியவைத்துக் கொண்டேன்! அடுத்த படைப்பில் திருத்திக்கொள்கிறேன்! மிக்க நன்றி!

      Delete
  4. நியாயத்தை உணர்ந்து மாறினால் சரி...

    வாத்தியார் சொல்வதை கவனத்தில் கொண்டு, இது போல் தொடரவும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. நல்ல கதை சகோ..

    ReplyDelete
  6. கதைக் கரு அருமை! சொன்ன விதமும் அழகு! பாலகணேஷ் சார் சொல்லுவது சரியே!

    மிக மிக நல்ல கதை நண்பரே! தொடருங்கள்! இங்கு நிறைய புலமை மிக்க நக்கீரர்கள் இருக்கின்றார்கள்! கண்டிப்பாக தங்கள் எழுத்து வளரும்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. கதை நல்லாயிருக்கு... ஆனா இது போன்றதொரு அனைவர்க்கும் அறிமுகமான கருவைப் பயன்படுத்தும் போது சிறுகதை இன்னமும் சுருக்கமாக (crisp) புரிதலைக் கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  8. நல்ல கதை. பாராட்டுகள்.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!