நொண்டிக்குதிரை! பாப்பாமலர்!

நொண்டிக்குதிரை!  பாப்பாமலர்!


மகாதேவபுரம் என்ற சிற்றூரில் வஜ்ரவேலு என்பவர் வசித்துவந்தார்.அவருக்கு பிறரை ஏமாற்றி பிழைப்பதே வேலை. தினமும் யாராவது ஒருவர் அவரிடம் ஏமாறுவதற்கு என்றே வந்து சேருவார்கள். அவரது பொழுதும் கழிந்துகொண்டிருந்தது.
   ஒருநாள் குதிரை வியாபாரி ஒருவன் மகாதேவபுரத்திற்கு வந்தான். சில நல்லகுதிரைகளுடன் வந்த அவனை சந்தித்தார் வஜ்ரவேலு. வஜ்ரவேலுவின் குணம் அறியாத வியாபாரியும் தன்னுடைய குதிரைகளை வாங்க யாரோ செல்வந்தர் வந்திருப்பதாக எண்ணி அவரை தடபுடலாக வரவேற்றான். வஜ்ரவேலும் நல்ல ஆடைகளை அணிந்து ஒரு பெரும் பணக்காரர் போன்ற தோற்றத்துடன் தான் அங்கு சென்றார்.
    குதிரைக் கட்டிலில் இருந்த குதிரைகளை ஒவ்வொன்றாக பார்த்து அதன் குணாதிசயங்களை கேட்டுவந்த வஜ்ரவேலுவிடம் வியாபாரி, ஐயா! தங்களுக்கு எத்தனை குதிரைகள் வேண்டும். எந்த தேசத்து குதிரைகள் வேண்டும் என்று கேட்டார்.
     என்னப்பா! உன் குதிரைகள் ஏதும் எனக்கு பிரயோசனப்படாது போலிருக்கிறதே? என்றார் வஜ்ரவேலு. ஏன் ஐயா! இவை அனைத்தும் நல்ல தரமான உயர்ந்த குதிரைகள்! விலை வேண்டுமானாலும் குறைத்துக் கொள்ளலாம். என்றார் வியாபாரி.
    இல்லை! இந்த குதிரைகள் வேண்டாம். உன்னிடம் ஏதேனும் நொண்டிக்குதிரைகள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன் என்று இழுத்தார் வஜ்ரவேலு. நொண்டிக்குதிரையா? அது எதற்கு? யார் வாங்குவார்கள்? என்றார் வியாபாரி. உமக்கெதற்கு அதைப்பற்றி கவலை? நொண்டிக்குதிரை இருக்கிறதா என்பதே என் கேள்வி? இருக்கிறதா இல்லையா? என்றார் கோபமாக வஜ்ரவேலு.
   நொண்டிக்குதிரைகளை நான் விற்பது இல்லை ஐயா! அது தொழில் தர்மம் கிடையாது.
   அப்புறம் நீ என்ன பெரிய வியாபாரி! கேட்கும் குதிரையை நீ தரவேண்டாமா?
  ஆனால்… நொண்டிக்குதிரையை யார் வாங்குவார்கள்?
நான் வாங்குவேன்! உம்மிடம் இருக்கிறதா? என்றார் வஜ்ரவேலு.
    கப்பலில் இருந்து இறக்கும் போது ஒரு குதிரை அடிபட்டுவிட்டது. அதை தனியாக வைத்துள்ளோம். பொதுவாக அவற்றை விற்பது இல்லை. நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அதை குறைந்தவிலைக்கு தருகிறேன்.

சரி வா பார்ப்போம்! இருவரும் நொண்டிக்குதிரையை போய் பார்த்தனர். இது இதைத்தான் நான் கேட்டது. இது என்ன விலை! வழக்கமாக 3000 பொன் பெறும் அரேபிய குதிரை இது. கால் ஒடிந்துவிட்டதால் நீங்கள் 1000 பொன் தாருங்கள் போதும்.
   சரி இந்தா பிடி! குதிரையை கொடு.

நொண்டிக்குதிரையை விரும்பி வாங்கிச்செல்லும் வஜ்ரவேலுவை வியப்புடன் பார்த்தான் வியாபாரி. ஆனால் வஜ்ரவேலுவின் திட்டம் வேறுமாதிரி இருந்தது. மறுநாள் காலை பொழுதுவிடிந்த போது அங்கே வஜ்ரவேலு நின்றிருந்தார்.
    என்ன ஐயா! இன்று வேறு ஏதேனும் குதிரை வாங்க வந்திருக்கிறீர்களா?
  யாருக்கு வேணும் உன் குதிரை? பொய் பேசி நொண்டிக்குதிரைகளை விற்கும் உன்னிடம் போய் யாராவது குதிரை வாங்குவார்களா?
   என்ன ஐயா! அபாண்டமாக பேசுகிறீர்கள்? நீங்கள்தானே நொண்டிக்குதிரையை விரும்பி வாங்கி சென்றீர்கள்.
  அடேய்! என்னமாய் புளுகுகிறாய்? யாராவது நொண்டிக்குதிரையை விரும்பி வாங்குவார்களா? இந்தா உன் நொண்டிக்குதிரையை எடுத்துக் கொண்டு இதன் விலை 3000 பொன்னை திருப்பித்தா!
    என்னது 3000 பொன்னா? 1000 பொன்னுக்குதானே விற்றேன்!
யாரை ஏமாற்றப்பார்க்கிறாய்? மரியாதையாக நான் கொடுத்த 3000 பொன்னை திருப்பித் தருகிறாயா? இல்லை நீதிமன்றம் செல்லலாமா?
   இதற்குள் அங்கு பெரும் கூட்டம் கூடிவிட்டது. வஜ்ரவேலுவை பற்றி அறிந்த பலரும் வியாபாரியின் நிலை குறித்து கவலைப்பட்டனர். வியாபாரி நீதிமன்றம் செல்ல ஒப்புக்கொண்டான்.
   நீதிபதி முன் இருவரும் வந்து நின்றனர். என்ன வழக்கு? என்றார் நீதிபதி. நீதிபதி ஐயா! இவனிடம் அரேபிய குதிரை ஒன்றை 3000 பொன் கொடுத்து வாங்கினேன். அந்த குதிரை நொண்டிக்குதிரையாக இருக்கிறது. குதிரையை எடுத்துக் கொண்டு பணத்தை திருப்பித் தரச் சொன்னால் மறுக்கிறான். நல்ல குதிரை என்று பொய் சொல்லி ஏமாற்றியதோடு இல்லாமல் இப்போது என் பணத்தை தரவும் மறுக்கிறான். நீங்கள்தான் நல்ல தீர்ப்பு தரவேண்டும் என்றான் வஜ்ரவேலு.


  ஐயா! இவர்தான் விரும்பி வந்து நொண்டிக்குதிரை வேண்டும் என்று கேட்டார். நானும் எவ்வளவோ மறுத்தும் நொண்டிக்குதிரைதான் வேண்டும் என்று அடம்பிடித்து கேட்டார் அதனால் 1000 பொன் வாங்கிக்கொண்டு குதிரையைவிற்றேன். ஆனால் இவர் இன்று இப்படி மாற்றிக்கூறுவதோடு 3000 பொன் பணமும் கேட்கிறார்.

நீதிபதிக்கு வஜ்ரவேலுவைப் பற்றி நன்றாக தெரியும். வியாபாரி ஏமாந்துவிட்டார் என்று அறிந்துகொண்ட அவர் வஜ்ரவேலுவுக்கு நல்ல பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.

  ஆக 1000 பொன்னுக்கு நீ நொண்டிக்குதிரை விற்றதாக ஒப்புக் கொள்கிறாயா? என்று இழுத்தார் நீதிபதி
   வியாபாரியும் ஆம் ஐயா! இவர் விரும்பியதால் விற்றேன் என்றார்.

வஜ்ரவேலு, பாருங்கள் ஐயா! அவன் புளுகுவதை! யாராவது நொண்டிக்குதிரையை விரும்புவார்களா? என்றார்.
  உண்மைதான்! வியாபாரியே நீ நொண்டிக்குதிரையை ஏமாற்றி விற்றிருக்கிறாய்? அதனால் இழப்பீடு தரவேண்டியது அவசியம்! அதே சமயம் நீரும் வியாபாரியின் குதிரையை அவரிடம் திருப்பிவிடவேண்டும்.
  நான் ஒத்துக் கொள்கிறேன்! குதிரையை பணம் வந்தவுடன் ஒப்படைத்துவிடுகிறேன். நான் வியாபாரியை இங்கே நிறுத்திவைக்கிறேன். நீ போய் குதிரையை ஓட்டிவா!
   வஜ்ரவேலு சென்றதும் நீதிபதி வியாபாரியின் காதில் ஏதோ சொன்னார். அதைக்கேட்டதும் வியாபாரியின் முகம் ஒளிர்ந்தது.
    சிறிது நேரத்தில் நொண்டிக்குதிரையுடன் வந்த வஜ்ரவேலு இதோ குதிரை! என் பணத்தை வாங்கித் தாருங்கள் நீதிபதி அவர்களே என்றான்.
   வியாபாரி குதிரையின் அருகே சென்றான். சுற்றிப் பார்த்தான். பின்னர் நீதிபதியிடம், ஐயா! இவர் ஏமாற்றுகிறார் இது என் குதிரை இல்லை! என் குதிரைக்கு வலது காலில் தான் காயம்! இது இடது காலில் காயப்பட்ட குதிரை! இதை கொடுத்து ஏமாற்றப் பார்க்கிறார் என்றார்.
    அதற்குள் அவசரப்பட்ட வஜ்ரவேலு, அடேய்! புளுகாதே! நான் நேற்று வாங்கும் போது இடது காலில்தானே காயம் இருந்தது. இப்போது வலது கால் என்று புளுகுகிறாயே! என்றார்.
     என்ன சொன்னீர்கள்?
   வஜ்ரவேலு நாக்கை கடித்துக் கொண்டார். ஒன்றுமில்லை நீதிபதி அவர்களே!
   ஒன்றுமில்லையா? அப்போது வழக்கு ஏதும் இல்லையா?
 வஜ்ரவேலு ஏதோ இடது கால் என்றீர்களே இழுத்தார் நீதிபதி.

நான் வாங்கிய குதிரைக்கு இடதுகாலில்தான் காயம் இருந்தது. இவன் வலதுகாலில் காயம் என்று பொய் சொல்கிறான்.
  அப்போது காயமுள்ள குதிரையைத்தான் வாங்கியிருக்கிறீர்கள்? அப்புறம் எதற்கு ஏமாற்றிவிட்டார் என்று வழக்கு தொடுக்கிறீர்கள். நீதிமன்றத்தை அவமதித்ததோடு காலவிரயத்தையும் ஏற்படுத்தி விட்டீர்கள். வியாபாரியின் மீது பொய் வழக்கும் தொடர்ந்துள்ளீர்கள். உங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதிக்கிறது. வியாபாரியிடம் குதிரையை திருப்பி தந்துவிட வேண்டும். நீதிமன்றத்திற்கு 1000 பொன் அபராதம் செலுத்தவேண்டும். வியாபாரியை அவமானப்படுத்தியதால் அவருக்கு 1000 பொன் இழப்பீடு தரவேண்டும். இவை அனைத்தும் உடனே செலுத்த வேண்டும். இல்லையேல் இரண்டுவருடங்கள் சிறையில் இருக்க வேண்டும். எப்படி உங்கள் வசதி என்றார் நீதிபதி.
     தன் வாயாலேயே தான் கெட்டதை உணர்ந்த வஜ்ரவேலு தலைகவிழ்ந்தார். மன்னிக்க வேண்டும் நீதிபதி அவர்களே! என்றார் குரல் கம்ம.
  காலம் தவறிய மன்னிப்பு! பிறரை ஏமாற்றி பிழைக்கும் உனக்கு மன்னிப்பு வழங்க முடியாது. அபராதம் செலுத்து இல்லையேல் சிறை நிச்சயம் என்றார் நீதிபதி.
   வேறுவழியின்றி அபராதம் செலுத்திவிட்டு தலை குனிந்தபடி வீடு சென்றார் வஜ்ரவேலு.
  நீதிபதியின் நல்ல தீர்ப்பால் மகிழ்ந்தார் வியாபாரி.

எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



Comments

  1. //எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.//
    உண்மை தான்.

    ReplyDelete
  2. நல்ல கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  3. நல்ல கருத்தைச் சொல்லும் கதை.

    ReplyDelete
  4. அன்பின் சுரேஷ் - 16.01.2014 மடல் அனுப்பி இருந்தேன் - இன்னும் பதில் வரவில்லை - உடன் மடல் அனுப்புக - 03.02.2014 முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க மடல் அனுப்பி இருந்தேன் - உடன் பதில் மடல் வரைக - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. அன்புத் தம்பீ,

    வலைச்சர ஆசிரியர் ஆக போகிறாய் வாழ்த்துக்கள். வேலைப்பணிகள் காரணமாக உன் தளத்திற்கு வெகு வெகு நாட்களாய் வர இயலவில்லை.
    சமத்தாய் பதிவுகள் இட்டுக் கொண்டிருக்கிறாய் என்று நினைத்துக் கொள்கிறேன். கட் காப்பி இல்லை என்று நம்புகிறேன்.

    என் தளத்தில் நீ இட்ட ஒற்றை எழுத்துப் பின்னூட்டம் கண்டேன். அதற்காகவே இந்த திடீர் விஜயம்.

    கொன்றைவானத்தம்பிரான்.

    ReplyDelete
  6. தம்பீ,
    எப்படி இருக்கிறாய்
    கொஞ்சம் நேரம் கிடைத்தது அங்குமிங்குமாக உன் தளத்தை பார்வையிட்டேன். பாரட்ட இன்னும் நேரமிருக்கிறது இருந்தாலும் திருப்தி
    .நான் கொட்டிய கொட்டு உன்னை இந்த அளவுக்கு மாற்றும் என்று நினைக்கவில்லை. சொந்தமாக நிறைய எழுதித் தள்ளியிருக்கிறாய்.
    அன்புத் தம்பீ பிறர் சொல்லி என் தளத்திற்கு ஆள் வருவதில்லை இருந்தாலும் கூட என்னை வலைச்சரத்தில் சேர்க்காமல் விட்டது ஏனோ.
    பேட்டரி தீருப் போகிறது மீதி நாளை....

    கொ.வா.த

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அண்ணா! நலமாய் இருக்கிறேன்! விசாரிப்புக்களுக்கு நன்றி! என் தளத்தை பார்வையிட்டமைக்கு நன்றி! பாராட்டு பெறும் அளவுக்கு வளரவில்லை என்று தெரியும். அதே சமயம் முன்பு போலமோசமாக இல்லை என்ற வரை எனக்கும் திருப்திதான். முன்னளவுக்கு பேஜ் வியு இல்லை என்ற போதும் சினிமா செய்திகளை 90 சதவீதம் காப்பி பேஸ்ட் பண்ணுவதை நிறுத்திவிட்டேன். இன்னும் சொல்லப்போனால் கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் என்னுடைய கணிணி பழுது அடைந்தபோது ஒரு வாரம் தாங்க வேண்டும் என்று ஒரு காப்பி- பேஸ்ட் கிசுகிசு போட்டேன்! அதோடு சரி! உங்களின் க்ளு படித்து ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். பதில் வந்தது யாரப்பா அது? என்று அதனால் உங்கள் தளம் எது என்ற குழப்பம் இருக்கிறது எனக்கு! வலைச்சரத்தில் சேர்க்காமல் போனதில் எந்த உள்நோக்கமும் இல்லை! ஞாயிறன்று காலையில் சில தளங்களை சேர்த்து பதிவிட்டுக்கொண்டிருந்த போது அவசர வேலை வரவே அப்படியே பதிவிட்டு விட்டேன்! மதியம் மீண்டும் ஒரு போஸ்ட் போடலாம் ஆறுமணிவரை வாய்ப்பு உள்ளதே என்று நினைத்து இரண்டரை மணி போல தளம் ஓப்பன் செய்தால் வலைச்சரம் என் டேஷ் போர்டில் இல்லை! இவன் நிறைய பேரை சொல்லிவிட்டான் இதோடு போதும் என்று முடிவு செய்து விட்டார்களோ என்னவோ? சீனா ஐயாவிற்கு போன் செய்யலாம் என்று நினைத்தபோது வேறு வேலைகள் வந்துவிட்டது. அதனால் அதோடு விட்டுவிட்டேன். சுமார் இருபது பேர் அறிமுகம் அதனால் தவறிவிட்டது. அடுத்த வாய்ப்பில் அவர்களை பகிருவேன்! மிக்க நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!