புத்திசாலி மருமகள்! பாப்பாமலர்!

புத்திசாலி மருமகள்!


அன்னதானபுரம் என்ற ஊரில் உழவன் ஒருவன் வசித்துவந்தான். அவன் தன்னுடைய ஒரே மகனுக்கு நல்ல அறிவுள்ள மருகளைத்தேடினான். இறுதியில் மலர்க்கொடி என்ற பெண்ணை மணமுடித்து வைத்தான். மலர்க்கொடியும் கணவனையும் மாமனாரையும் மனம் கோணாது கவனித்துக் கொண்டாள்.
    சில மாதங்கள் சென்றதும் உழவனின் மகன் வேலை தேடி வெளியூர் சென்றான். போகும்போது அவன் நான் வர பதினைந்து நாட்கள் ஆகும். அதுவரை மாமனாரை நன்கு கவனித்துக் கொள் என்று கூறிச்சென்றான். கணவன் வெளியூர் சென்ற மறுநாள் அவள் தண்ணீர் எடுக்க இடுப்பில் குடத்துடன் புறப்பட்டாள். அதிகாலை நேரம் அது. ஊருக்கு ஒதுக்குப்புறமான ஓரிடத்தில் கேணி ஒன்று இருந்தது. அதிலிருந்து நீர் எடுத்து வரவேண்டும்.
    அதிகாலையில் கிணற்றில் நீர் சேந்தி குடத்தில் நிரப்பி கிளம்பும் சமயம் அங்கு நான்கு வழிப்போக்கர்கள் வந்தார்கள். யாரும் இந்த அதிகாலையில் வரமாட்டார்கள் என்று கந்தலாடையுடன் வந்த அவள் என்ன செய்வது என்று யோசித்தாள். அதே சமயம் வழிப்போக்கர்களில் ஒருவன் , அம்மா கொஞ்சம் தண்ணீர் தாருங்கள்! என்று கேட்டான்.
கிழிந்த ஆடையுடன் அவர்கள் முன் செல்வது தகாது என்று உணர்ந்த மலர்க்கொடி அவர்களை எப்படி தட்டிக்கழிப்பது? என்று யோசித்தாள். ஐயா! நீங்கள் யார்? என்று அங்கிருந்தபடியே கேட்டாள்.
   ”ஒவ்வொரு ஊராக செல்லும் பயணி நான்” என்று பதில் சொன்னான் தண்ணீர் கேட்டவன். ‘ஐயா! எனக்கு இரண்டே பயணிகளைத்தான் தெரியும் அவர்களில் நீங்கள் யார் என்று சொன்னால் தண்ணீர் தருகிறேன். இல்லாவிட்டால் தரமுடியாது என்றாள் மலர்க்கொடி.

   அதற்கு பதில் தெரியாது விழித்தான் தண்ணீர் கேட்டவன். இரண்டாமவன் அம்மா! நானொரு ஏழை! எனக்கு தண்ணீர் தாருங்கள் என்று கேட்டான். மலர்க்கொடி மீண்டும் எனக்கு இரண்டு ஏழைகளைத்தெரியும் அவர்களில் நீங்கள் யார்? சொன்னால் தண்ணீர் தருகிறேன் என்றாள். அவனும் பதில் தெரியாமல் விழித்தான்.

   மூன்றாவது நபர், அம்மா! நான்  இவர்கள் பின்னால் வந்தவன்! எனக்கு தண்ணீர் தர முடியுமா? என்றான். இரண்டே வகையான  பின்னால் வந்தவர்கள்தான் இருக்கிறார்கள் அவர்களில் நீங்கள் எந்த வகை என்று சொன்னால் தண்ணீர் தருகிறேன் என்றாள் மலர்க்கொடி. அவனாலும் பதில் சொல்ல முடியவில்லை.

நான்காவது நபர் அம்மா! நான் ஒரு முட்டாள் எனக்காவது குடிக்க தண்ணீர் தாருங்கள்! என்றான். மலர்க்கொடி வழக்கம் போல இரண்டே வகையான முட்டாள்கள்தான் உள்ளனர் அவர்களில் நீங்கள் எந்த வகை என்று சொல்லுங்கள் தண்ணீர் தருகிறேன்! என்றாள். அவனாலும் பதில் சொல்ல முடியவில்லை. அவர்களை பார்த்த மலர்க்கொடி!, ஐயா! நீங்கள் என் வீட்டிற்கு வாருங்கள் தண்ணீர் தருகிறேன் என்று சொல்லிவிட்டு நடந்தாள்.
   நான்கு வழிப்போக்கர்களும் அவளை தொடர்ந்து வந்தனர். வீட்டிற்கு வந்ததும் நல்ல ஆடை அணிந்து கொண்ட அவள் வெளியே வந்து அவர்கள் நான்கு பேருக்கும் தண்ணீர் கொடுத்தாள். அவர்களும் குடித்துவிட்டு புறப்பட்டனர். வீட்டில் இருந்த மாமனார் இதையெல்லாம் பார்த்து கோபப்பட்டார். புருசன் வீட்டில் இல்லாத இந்த நேரத்தில் வெளி நபர்களை அழைத்து வந்துள்ளாளே! இவளுக்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு? இதை அரசனிடம் சொல்லி நீதி கேட்போம் என்று முடிவு செய்த அவர் அரசனிடம் சென்று முறையிட்டார்.
   அரசனும் மருமகளை அரச சபைக்கு அழைத்து விசாரித்தார். உன் கணவன் இல்லாத நேரத்தில் நான்கு பேரை நீ வீட்டிற்கு அழைத்து வந்தாயா? உன் மாமனார் குற்றம் சாட்டுகிறார். உன் தவறான செய்கைக்கு தகுந்த விளக்கம் சொல்ல வேண்டும். என்று கேட்டான்.
   சபையில் எல்லோர் முன்னாலும் அவமானம் ஏற்பட்டுவிட்டதே! என்று தலை கவிழ்ந்த அவள் மனதை தேற்றிக்கொண்டு, அவையோரை பார்த்து அரசே! என் மீது எந்த தவறும் இல்லை! அதிகாலையில் தண்ணீர் கொண்டுவர கிணற்றுக்கு சென்றேன். அதிகாலை வேளை என்பதால் யாரும் இருக்க மாட்டார்கள் என்று கிழிந்த ஆடையுடன் சென்றிருந்தேன். அந்த சமயம் வழிப்போக்கர்கள் நால்வர்வந்து தண்ணீர் கேட்டனர். கிழிந்த ஆடையுடன் அவர்களுக்கு தண்ணீர் தருவது தகாது என்று நினைத்தேன். அதனால் அவர்கள் நான்கு பேருக்கு புதிர்களை போட்டேன். அவர்களால் விடுவிக்க முடியவில்லை! வீட்டிற்கு வந்தால் தண்ணீர் தருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அவர்களும் வந்தார்கள். வீட்டில் வேறு ஆடை உடுத்திக்கொண்டு அவர்களுக்கு தண்ணீர் கொடுத்தேன். இதுதான் நடந்தது என்று விளக்கமாக சொன்னாள் மலர்க்கொடி.
   அவள் மீது எந்த தவறும் இல்லை என்பதை அறிந்தான் அரசன். அதெல்லாம் சரி பெண்ணே! நீ போட்ட புதிர்கள் என்ன? என்று ஆவலுடன் கேட்டான். மலர்க்கொடியும் நான்கு பேரிடம் தான் போட்ட புதிர்களை சொன்னாள். அரசன் வியந்து உன் அறிவுக்கூர்மையை பாராட்டுகிறேன்! உன் புதிர்களுக்கான விடையை கூற முடியுமா? இங்கு எவருக்குமே அதற்கான விடைகள் தெரியவில்லை! என்றான் மன்னன்.

   அரசே! அவர்களை வீட்டுக்கு வரவழைப்பதற்காகவே! அந்த புதிர்களை சொன்னேன். சரியான விடை என்று நான் நினைப்பவற்றை கூறுகிறேன். பொருந்துகிறதா பாருங்கள்.
  முதலாவது புதிருக்கு விடை இரண்டு பயணிகளை தெரியும் என்றேன். அவை எப்பொழுதும் சுற்றிக்கொண்டிருக்கும் சூரியனும் சந்திரனும் ஆவார்கள்.
 இரண்டாவது புதிர் இரண்டு ஏழைகளை தெரியும் என்றேன் அல்லவா?  அந்த இரண்டு பேர் பசுமாடும் மருமகளும் ஆவார்கள்.
மூன்றாவதாக எல்லோர் பின்னாலும் செல்லும் இரண்டு பொருள்கள் தண்ணீரும் உணவும் ஆகும்.
நான்காவது புதிருக்கு விடை சொல்ல பயமாய் இருக்கிறது. அதைக்கேட்டால் பெருமை மிக்க உங்களுக்கும் மதிப்பிற்குரிய என் மாமனாரும் வருந்த நேரிடும் என்றாள்.
   இரண்டு முட்டாள்களைப் பற்றித்தானே சொல்லப்போகிறாய்? நாங்கள் ஏன் வருந்தப்போகிறோம்! தயங்காமல் சொல்! என்றான் அரசன்.
அரசே! நீங்கள் என்னை மன்னிப்பதாக உறுதி அளித்தால் சொல்கிறேன் என்றாள் மலர்க்கொடி.
  நீ அச்சப்பட வேண்டாம் தயங்காமல் சொல்! உனக்கு எந்த கஷ்டமும் ஏற்படாது. அந்த விடையை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்! என்றான் அரசன்.
  அரசே! இப்போதைய சூழலில் இரண்டு முட்டாள்கள்தான் உள்ளனர்.  எதையுமே ஆராயமால் மருமகள் மீது குற்றம் சாட்டி அரசவைக்கு வந்ததால் குடும்ப மானம் போகிறது என்பதைக் கூட அறியாத என் மாமனார் ஒரு முட்டாள்.
  குடும்பப்பெண்ணை பலர் அறிய விசாரிக்க கூடாது இதனால் அவள் அவமானம் அடையக்கூடும் என்று உணராமல் என்னை பலர் முன்னிலையில் விசாரித்த நீங்கள் ஒரு முட்டாள் என்றாள் மலர்க்கொடி.
   அவையே நிசப்தமானது.  தவறை உணர்ந்த அரசன் தலைகுனிந்தான். சபாஷ்! உன்னால் இன்று சபையில் ஒரு பெண்ணை எப்படி விசாரிக்க வேண்டும் என்று அறிந்து கொண்டேன். இனி என் வாழ்வில் இப்படி ஒரு தவறு நடக்காது. எனக்கு நல்வழி காட்டிய உனக்கு இதோ என் பரிசு முத்து மாலை என்று கழுத்தில் இருந்த மாலையை பரிசாக தந்தான்.
   மாமனாரும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
 மலர்க்கொடி மகிழ்வுடன் வீடு புறப்பட்டாள்.

(பேராசிரியர் சோதியின் சாமர்த்திய கதைகளில் இருந்து தழுவல்)


 தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. நல்ல சிந்திக்க வைக்கும் அறிவுக்கதை

    ReplyDelete
  2. அருமையான கதை. விடுகதைக்கும், பெண்களை எப்படி விசாரிக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கு.
    பகிர்ந்தததற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. சிறப்பான பாப்பா மலர் .பகிர்வுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
  4. நல்ல பபுத்திசாலி தனம் .... நன்றி பகிர்வுக்கு

    ReplyDelete
  5. பகிர்விற்கு நன்றி நண்பரே
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. சிறப்பான கதை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!