கிழிந்த ரூபாயை மாற்றுவது எப்படி?

கிழிந்த ரூபாயை மாற்றுவது எப்படி?

இராம. சீனிவாசன்

பயன்படுத்த முடியாத பழைய ரூபாய் தாள்கள் மூன்று வகைப்படும். ஒன்று, ஒரு ரூபாய் தாள் இரண்டு அல்லது மூன்று பகுதிகளாக கிழிந்து ஒன்றாக ஒட்டப்பட்டிருப்பது . எழுதியதால் கறை படிந்திருப்பது. மூன்று, கிழிந்ததாலோ, எரிந்ததாலோ ரூபாய் தாளின் ஒரு பகுதி காணாமல் போவது.
Reserve Bank of India (Note Refund) Rules, 2009 என்பதற்கு இணங்கி எல்லா வங்கிகளும் பொது மக்களிடம் (தங்களின் வாடிக்கையாளர்கள் இல்லை என்றாலும்) அவர்கள் கொடுக்கும் பழைய ரூபாய் தாளுக்கு இணையான புதிய அல்லது பயன்படுத்தக்கூடிய ரூபாய் தாளை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு ரூபாயிலிருந்து இருபது ரூபாய் வரை, ரூபாய் தாள் கிழிந்திருந்தால், அவற்றில் பெரிய பகுதி குறைந்தபட்சம் தாளின் ஐம்பது சதவிகிதம் இருக்க வேண்டும். அதாவது, கிழிக்கப்பட்ட ஒரு பகுதியாவது தாளின் ஐம்பது சதவிகிதத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பணத்தாளின் மதிப்புக்கு சமமான மற்றொரு ரூபாய் தாள் கொடுக்கப்படும்.
ஐம்பது முதல் ஆயிரம் ரூபாய் தாள்கள் கிழிந்திருந்தால் அதில் 65 சதவிகிதம் இருக்கும்பட்சத்தில் அதற்கு இணையான ரூபாய் தாள் கொடுக்கப்படும். அப்பகுதி 40 முதல் 65 சதவிகிதம் இருந்தால் அந்த ரூபாய் மதிப்பில் 50 சதவிகிதம் உள்ள ரூபாய் தாள் கொடுக்கப்படும்.
அழுக்கடைந்த ரூபாய் தாள்களின் எழுத்துகள் மறையாமலும், அவை நல்ல ரூபாய் தாள்கள் என உறுதி செய்யப்படும் பட்சத்தில், அந்த ரூபாய் தாளுக்கு இணையான அல்லது 50 சதவிகித பணம் கொடுக்கப்படும்.
மேலே குறிப்பிட்டுள்ள வரையறைக்கு மாறாக வேறு எப்படி இருந்தாலும் அந்த ரூபாய் தாள்களுக்கு இணையான மாற்று ரூபாய் தாள்கள் கொடுக்கப்படமாட்டாது.

காகிதம் காப்போம்!     ஆதி வள்ளியப்பன்.

ஒரு நாளில் எவ்வளவு வீணடிக்கிறோம் என்பதை உணராமலேயே நாம் கழிவாக மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு விஷயம்: காகிதம்.
நீங்கள் இப்போது படித்துக்கொண்டிருக்கும் இந்த நாளிதழ், குறிப்பு எழுதப் பயன்படுத்தும் சிறு நோட்டு, உங்கள் மகனோ, மகளோ பள்ளிக்கு எடுத்துச் செல்லும் நோட்டுப் புத்தகம், அலுவலகத்தில் நாம் பயன்படுத்தும் கோப்புகள்... இவை அனைத்துமே காகிதத்தை அடிப்படையாகக் கொண்டவை.
உலகெங்கும் காகிதப் பயன்பாடு ஆண்டுதோறும் 20 % அதிகரித்துவருகிறது. அலுவலகப் பணியாளர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக தினசரி 50 ஷீட்களை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. காகிதப் பயன்பாடு இப்படி கண்மண் தெரியாமல் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம், கணினிகளும் நகலெடுக்கும் கருவிகளும் அதிகரித்திருப்பதுதான்.
இதில் விஷயம் என்னவென்றால், நாம் பயன்படுத்தும் காகிதத்தைவிட, நாம் உருவாக்கும் காகிதக் கழிவுதான் அதிகம். ஒவ்வொரு நாளும் நம் நாட்டில் கழிவாக மாறும் காகிதத்தின் அளவு 1,46,000 கிலோ.
மரங்களின் அழிவு
இந்த இடத்தில் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். ஆயிரம் கிலோ காகிதத்தை உருவாக்க வேண்டுமென்றால், 2 ஆயிரம் கிலோ மரங்கள் தேவை.
அதேநேரம் ஆயிரம் கிலோ காகிதப் பயன்பாட்டை குறைப்பதன் மூலம் மரங்கள் அழிவது குறையும் (17 முதிர்ந்த மரங்கள்), தண்ணீர் பயன்பாடு குறையும் (30,000 லிட்டர்), ஆற்றல் தேவை குறையும் (3 படுக்கையறை கொண்ட வீட்டுக்கு ஆண்டு முழுவதும் தேவைப்படும் மின்சாரம்), மாசுபாடு குறையும் (95 % காற்று மாசுபாடு), காகிதக் குப்பையும் குறையும்.
என்ன செய்யலாம்?
சரி, காகிதப் பயன்பாட்டை குறைப்பதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய முடியும்?
காகிதப் பயன்பாட்டைக் கூடிய மட்டும் குறைக்க வேண்டும். முடிந்தவரை மறுபடி பயன்படுத்துதல் அல்லது மறுசுழற்சி செய்ய முயற்சிக்க வேண்டும்.
ஒரு நாளைக்கு ஒரு ஷீட் காகிதத்தை நீங்கள் சேமித்தால், ஓர் ஆண்டுக்கு 40,000 மரங்களைக் காப்பாற்ற முடியும்.
ஒவ்வொரு தேவைக்கும் புதிய காகிதத்தை எடுக்காமல், அச்சடிக்கப்பட்ட காகிதத்தின் பின் பக்கத்தில் எழுதலாம்.
நமக்கு வரும் அஞ்சல் உறைகளில் பழைய முகவரிகளின் மேல் புதிய முகவரிகளை எழுதி ஒட்டியோ, அல்லது உறையை உட்புறமாகத் திருப்பியோ மீண்டும் பயன்படுத்தலாம்.
அலுவலகத்தில் தகவல்களை அனைவருக்கும் தெரிவிப்பதற்கு மின்னஞ்சலைப் பயன்படுத்தலாம். அல்லது தகவல் பலகையில் ஒரே ஒரு அச்சிடப்பட்ட அறிக்கையை மாட்டலாம்.
வங்கிக் கணக்கு அறிக்கைகள், மற்ற மாதாந்திர ரசீதுகளை மின்னஞ்சலில் அனுப்பச் சொல்லலாம்.
இப்போது இந்திய ரயில்வே அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டுகளைக் கேட்பதில்லை. நமது கைபேசிகளில் காட்டினாலே போதும் என்கிறது. எனவே, ரயில் டிக்கெட்டுகளை அச்சு எடுக்காதீர்கள்.
அதேபோல, வங்கி ஏ.டி.எம்.களிலும் அச்சு ரசீது தேவையா என்று ஏ.டி.எம். இயந்திரம் கேட்கிறது. அப்போது நாம் தேவையில்லை என்று சொல்லலாம். திரையிலேயே பார்த்துக்கொள்ளலாம்.
வீட்டில் கணினி அச்சு இயந்திரத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தேவையற்ற விஷயங்களுக்கு எல்லாம் அச்சு எடுப்பதைத் தவிர்க்கலாம்.


நன்றி: தமிழ் இந்து இணைய தளம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஆதி வள்ளியப்பன் அவர்களுக்கும் இராம. சீனிவாசன் அவர்களுக்கும் மிக்க நன்றி... பதிவாகிப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி

    ReplyDelete
  3. பயனுள்ள கட்டுரைகளைப்
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள தகவல் நன்றி !!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!