வெட்டி சிந்தனைகள்!

வெட்டி சிந்தனைகள்!


சும்மா இருக்கும் மனம் சாத்தானின் உலைக்களம் என்று சொல்வார்கள். நாம் வேலை எதுவும் இன்றி இருக்கும் போது மனம் சும்மா இருப்பதில்லை! எதை எதையோ யோசித்துக் கொண்டு இருக்கிறது. அதில் சிலதை பின்னர் செயல் படுத்துகிறோம். பலதை மறந்து விடுகிறோம்.  
    
  மழைக்காலமோ அல்லது வெயில் காலமோ அல்லது ஒரு மத்தியான வெயில் அடிக்கும் பொழுதோ இல்லை இரவு நேரமோ எதுவோ இருக்கலாம். அப்போது நாம் வீட்டில் இருக்கலாம் அல்லது எங்காவது பயணித்துக் கொண்டு இருக்கலாம். டீவியில் ஏதாவது மொக்கை சீரியல் பார்த்துக் கொண்டு இருக்கலாம். இல்லை இதே போல ஏதாவது டைப்பிக் கொண்டு நெட்டில் எதையாவது படித்துக் கொண்டு இருக்கலாம். அப்போது தீடிரென நமது மூளை சொல்லும் இதே போன்று அன்று இருந்ததே என்று தோன்றும். எனக்கு அதே மாதிரி பலநாட்கள் தோன்றியிருக்கிறது. ஏதாவது ஊருக்கு சென்று திரும்புகையில் பார்க்கும் ஒரு காட்சி முன் எப்போதோ இதே போல் பார்த்ததாக தோன்றும். மாலை வெயில் இறங்கி மரங்களில் பறவைகள் வந்து சத்தமிடும் பொழுது நாம் சின்ன வயதில் ரசித்த காட்சிகள் நினைவுக்கு வரும். மழை விடாது பெய்து தொல்லை கொடுக்கும்போதும் இதே போன்று அன்று மழை பெய்ததே! என்று தோன்றும். ஒரு பகல் வேளையில் வீடுதிரும்பிக் கொண்டிருக்கும் சமயம் காலைவெயில் முதுகை உரித்துக் கொண்டிருக்க பத்து வருடங்களுக்கு முன் இதே போன்று வந்து கொண்டிருந்தோமே என்று தோன்றும். இப்படி பலமுறை எனக்கு தோன்றியிருக்கிறது. உங்களில் யாருக்காவது தோன்றியிருக்கிறதா?
வாழ்க்கை ஒரு வட்டம் என்பார்கள்! குழந்தை பருவம் ஆரம்பித்து முதுமைப்பருவத்தில் முடிக்கும் போது அது உண்மையாக இருந்தாலும் இழந்த காலத்தை மீண்டும் அடைய முடியுமா? என்றால் முடியாதுதான். அந்தகாலம் போனது போனதுதான். சின்ன வயதிற்கு மீண்டும் திரும்ப முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். என்று இப்போது தோன்றுகிறது. சின்ன வயதிலோ வாத்தியார் அடிப்பாரே சீக்கீரம் பெரியவன் ஆகிவிட வேண்டும் என்று தோன்றும். சிறுவயதில் நிகழும் சில நிகழ்வுகள் பசுமையாக பதிந்து விடுகின்றன. இவை நமக்கு திரும்பக் கிடைப்பது இல்லை! நினைத்து மகிழ்கிறோம் அவ்வளவுதான். இதுவரை நாம் இழந்த பால்ய பருவத்தை நமது பிள்ளைகள் மூலமோ இல்லை பேரன்கள் மூலமோ அவர்கள் செய்யும் குறும்புகளை கண்டு மகிழ்ந்து குழந்தை ஆகிறோம். ஆனால் குழந்தை பருவம் போனது போனதுதான். குழந்தையாக பிறந்து கிழவனாக இறக்கும் வரையில் இழந்த காலங்கள் பசுமையானதுதான்!

  சாலை விபத்துகள் அதிகரித்து விட்டன. அன்றாடம் விபத்து இல்லா செய்திகளை காண்பதே அரிதாகிவிட்டது. விபத்துக்கள் ஏன் நடக்கின்றன. நமது பொறுப்பில்லாத தனத்தால்தான் என்பது எனதுகருத்து. நாமே நமக்கு குழி தோண்டிக் கொள்கிறோம். முந்திச்செல்வதில் அவசரம். குறுக்கு வழி தவறான வழியில் வாகனம் ஓட்டுவது. செல்போன் பேசிக்கொண்டு ஓட்டுவது கண்மூடித்தனமாக  வேகமாக ஓட்டுவது தவிர்க்க வேண்டும். நாம் ஒழுங்காக போனால் கூட எதிரில் வருபவன் ஒழுங்காக வர வேண்டும் இல்லையா? எங்கள் பகுதியில் மேம்பாலம் கட்டுவதால் தினமும் வாகன நெரிசல் மற்றும் விபத்துக்கள் என அதிகரித்து வருகிறது. வாகனத்தில் செல்லவே இப்போதெல்லாம் அச்சமாக இருக்கிறது.

   திங்களன்று வழக்கம் போல பூஜைக்கு சென்று திரும்பிக்கொண்டு இருந்தேன். நத்தம் சாலையின் மேடு பள்ளங்களில் குதித்து பயணித்துக்கொண்டு இருந்தது என் ஸ்பிளண்டர். தாங்கல் எனும் கிராமத்திற்கு வந்தபோது சாலையில் ஒரு குள்ள மனிதன் கை போட்டார். நான் இப்போதெல்லாம் யாரையும் பின்னால் ஏற்றுவது இல்லை! சாலை மோசமாக இருப்பதால் எதற்கு வம்பு என்று கை போட்டால் கூட கவனிக்காது சென்றுவிடுவேன். இவரது உயரம் வண்டியை நிறுத்த சொன்னது. அவரை தாண்டிச் சென்று நின்றது வண்டி. அவர் ஓடி வரும்போது கவனித்தேன். கால்களும் சற்று பாதிக்கப்பட்டு இருந்தன. எங்கே போகனும் என்றேன். நத்தம் என்றார். யார் வீட்டிற்கு என்றேன். இல்ல சார்! வியாபாரத்துக்கு வந்தேன். நத்தம் பெரிய ஊரா? என்று என்னை திருப்பிக் கேள்வி கேட்டார்.

      எனக்கு ஆச்சர்யம்! இந்த மனிதர் என்ன வியாபாரம் செய்கிறார்? அதை அவரிடமே கேட்டேன். சார்! கிரைண்டருக்கு பொலுவா போடறேன் சார்! என்றார். அவர் மீது ஒரு மரியாதை வந்தது. சுமார் மூன்றடி உயரமே இருந்தாலும் உயர்ந்து நின்றார் அவர். பெரும்பாலும் இது போன்றோர் பிச்சை எடுத்து சம்பாதிப்பர். ஆனால் தன்னம்பிக்கையோடு ஒரு தொழிலை கற்று பிழைக்கும் இவரை பாராட்ட வேண்டும் அல்லவா? வண்டியில் ஏற்றிக் கொண்டு நத்தத்தில் இறக்கி விட்டேன்! கிரைண்டருக்கு பொலுவா போடறது என்று அவர் வியாபாரத்தை கவனிக்க நான் என் வேலையை கவனிக்க வீடு வந்தேன்!


பதிவர் சந்திப்பும் என் ராசியும்!
    சென்ற பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. இந்த வருடம் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று இருந்தேன். மூன்று திருமணங்கள் மச்சான் குழந்தைக்கு மொட்டை போடும் நிகழ்ச்சி என்று இப்பொழுது தடங்கல்கள் வந்து நிற்கிறது. அதனால் பதிவர் சந்திப்பிற்கு நான் வருவது சஸ்பென்ஸாகி விட்டது. வரும்! ஆனா வராது! என்ற என்னத்த கன்னையா போல என் நிலைமை ஆகிவிட்டது. பார்ப்போம்!

கணிணி பழுது அடைந்து போனதால் சிபியு மட்டும் புதுசாகவும் மானிட்டர் எல்.சி.டியில் செகண்ட் ஹாண்டாகவும் வாங்கியாயிற்று. பழைய கணிணியில் சேகரித்த டேட்டாக்களை பேக் அப் எடுக்க சொல்லியிருக்கிறேன். புதுசு இப்போது காலி பெருங்காய டப்பியாக இருக்கிறது. தமிழ் எழுத விண்டோஸ் எக்ஸ்பீயில் கீமேன் 6.00 பயன் படுத்தினேன். இப்போது விண்டோஸ் 7 னில் அது பயன் படவில்லை!  கீ மேன் இ கலப்பை 3.1 எதோ கொஞ்சம் உதவுகிறது. உங்களுக்கு தெரிந்த மென்பொருள் ஏதாவது இருந்தால் சொல்லுங்களேன் அன்பர்களே!

 பதிவு முன்பெல்லாம் தினமும் எழுதி கொண்டு இருந்தேன். இப்போது குறைத்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். முன்பு ஒரு முறை இந்த அறிவிப்பு வெளியிட்டு செயல்படுத்த வில்லை! இப்போது செயல்படுத்த முடிவு செய்துள்ளேன். வாரம் ஓரிரண்டு பதிவுகள் போதும் என்று நினைக்கிறேன். ரேங்க் பேஜ் வியு என்ற மாயைகளில் இருந்து விடுபட நினைக்கிறேன்.  பார்க்கலாம்.
 ஜிலு ஜிலு குளு குளு

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவுகுறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து பிழைகளை குறைகளை திருத்த வாய்ப்பு அளியுங்கள்! மிக்க நன்றி!


Comments

  1. வெட்டிச் சிந்தனைகள்னு தலைப்பிட்டு வித்தியாச நிகழ்வுகளைத் தொகுத்துள்ளீர்கள்...எனக்கும் நீங்கள் கூறியது போல் சில நிகழ்வுகள் முன்னமேயே நடந்தது போலவே தோன்றும் இது குறித்துப் படித்துள்ளேன் நினைவிற்கு வரவில்லை...குட்டி மனிதருக்கு ஒரு சல்யூட்...

    ReplyDelete
  2. வெட்டிச் சிந்தனைகள் அருமை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!