அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!

அறிவுள்ள வேலைக்காரன்! பாப்பா மலர்!


முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அறிவு மிகுந்த முனியன் என்பவன் அவனிடன் வேலைக்காரனாக இருந்தான். ஒருநாள் வேட்டைக்குச் சென்ற அரசன் களைப்புடன் அரண்மனைக்கு திரும்பிக் கொண்டு இருந்தான்.
   அரசன் வருவதை அறியாத முனியன் மற்ற வேலைக்காரர்களிடம்; என்னைப்போன்ற அறிவாளி இந்த நாட்டில் யாருமே இல்லை! ஏதோ என்நேரம் சரியில்லாததால் வேலைக்காரனாக இருக்கிறேன் வாய்ப்பு மட்டும் கிடைத்தால் நான் அமைச்சனாகி விடுவேன் என்று பெருமையாகப் பேசிக்கொண்டிருந்தான்.
    பகலில் பக்கம் பார்த்து பேசு! இரவில் அதைக்கூட பேசாதே என்பார்கள்! முனியன் அரசர் வருவதை கவனிக்காமல் பேசிய  இந்த பேச்சு அரசரின் காதில் விழுந்துவிட்டது. இவன் என்ன பெரிய புத்திசாலியா? இவனுக்கு ஒரு சோதனை வைப்போம் என்று கோபம் கொண்டான் அரசன். டேய்! முனியா! நீ என்ன அவ்வளவு பெரிய புத்திசாலியா? நீ அறிவாளியா இல்லையா என்பதை நான் கண்டுபிடிக்கிறேன். வீண் பெருமை பேசியதால் நீ உன் உயிரை இழக்கப் போகிறாய் என்றான்  மிகுந்த கோபத்துடன் அரசன்.
   இதைக்கேட்டு  கொஞ்சமும் பயப்படவில்லை முனியன், இனி நமக்கு நல்ல காலம்தான்! என்று நினைப்புடன் அரசே! என்ன சோதனை வைக்கப்போகிறீர்கள்? என்று பணிவுடன் கேட்டான்.
   “நீ கடலில் உள்ள அலைகளை எல்லாம் ஒரு வலையில் பிடித்துக் கொண்டு இங்கே வர வேண்டும் அப்படி முடியாவிட்டால் உன் உயிர் போகப்போவது உறுதி” என்று கோபத்துடன் சொன்னான் அரசன்.
    சிந்தனையில் ஆழ்ந்த முனியன், அரசே! நீங்கள் சொன்ன செயலை எளிதாக என்னால் செய்ய முடியும் அதற்கு நான் கேட்கும் பொருளை நீங்கள் எனக்கு தர வேண்டும் என்று கேட்டான்.
  யாராலும் செய்ய முடியாத இதை நீ செய்து விடுவாயா? அப்படி என்ன பொருட்கள் வேண்டும் கேள் உடனடியாக தருகிறேன்! என்றான் அரசன் இறுமாப்புடன்.
     அரசே! கடல் அலைகளை வலையில் பிடித்து இழுத்துவர கட்டளையிட்டு இருக்கிறீர்கள் அப்படி செய்ய எனக்கு கடல் மணலால் செய்யப்பட்ட வலை ஒன்று வேண்டும் எப்போது தருகிறீர்கள் என்று கேட்டான் முனியன்.
   இதை எதிர்பாராத அரசன்  அதற்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் விழித்தான். அரசே வலை கிடைத்ததும் சொல்லி அனுப்புங்கள் வருகிறேன் என்றான் முனியன்.
   அடேய்! முனியா வென்று விட்டதாக நினைக்காதே! நாளை நீ அரசவைக்கு வந்து சேர்! அங்கு உனக்குஇன்னொரு போட்டி காத்திருக்கிறது என்று அரசன் ஆத்திரத்துடன் கூறி சென்று விட்டான்.
   மறுநாள் அரசவையில் அரசன் அமர்ந்திருந்த போது முனியன் பணிவாக வந்து நின்றான். அரசன் அவனைப் பார்த்து, முனியா! நீ சமையலில் நிபுணனாமே! இதோ இந்த கோழியைக் கொண்டு நீ இருபது வகையான உணவுகளை சமையல் செய்யவேண்டும். அதைச் சாப்பிட நாங்கள் நூறு பேர் வருவோம். எங்களுக்கு வயிறார  நீ உணவு போட வேண்டும் என்றான்.
   இதைக்கேட்ட முனியன் தன் கையில் இருந்த ஒரு ஊசியை எடுத்து அரசனிடம் தந்தான். அதைப்பெற்றுக் கொண்ட அரசன் எதற்காக இந்த ஊசியை தருகிறாய்? என்று கேட்டான்.
  அரசே! ஒரு கோழியைக் கொண்டு நூறு வகையான சமையல் கூட நான் செய்யத் தயார்! அதைக் கொண்டு ஆயிரம் பேருக்கு வயிறார உணவிடவும் என்னால் முடியும். இந்த உலகில் முடியாதது என்பது கிடையவே கிடையாது. நான் கொடுத்த இந்த ஊசியை நீங்கள் யாரிடமாவது கொடுத்து அடுப்பு சமையலுக்கு தேவையான பாத்திரங்கள் செய்து தரச் சொல்லுங்கள் அடுப்பும் பாத்திரமும் வந்தவுடன் நீங்கள் சொன்னபடியே சமைக்கிறேன் என்றான் முனியன்.
   இந்த ஊசியில் எப்படி பாத்திரங்கள் செய்ய முடியும்? மன்னன் முனியனின் அறிவை மெச்சினான். முனியா நீ! பலே கில்லாடி!  இவ்வளவு அறிவுடைய நீ இன்று முதல் என் அமைச்சர்களில் ஒருவன்.  என்று முனியனை அமைச்சன் ஆக்கி கொண்டான்.
   தன்னுடைய அறிவு கூர்மையால் வேலைக்காரனாக இருந்து அமைச்சராக உயர்ந்த முனியனின் அறிவுத்திறமையை போற்றுவோம்!

(செவிவழிக் கதை தழுவல்)

  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. முள்ளை முள்ளால் எடுப்பது போன்று சிறந்த அறிவினால் சாதிக்கும் ஒரு நீதிக் கதை .மிகவும் அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி .வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
  2. எடக்கு மடக்கு புத்திசாலித்தனம்
    மிகவும் ரசித்தேன்
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!