அம்மா சரணம் திருவடி பணிந்தேன்!

ஆடியில் அம்மன் தரிசனம்!


தட்சிணாயின புண்ய காலத்தில் முதல் மாதம் ஆடி! ஆஷாட மாதம் என்று சம்ஸ்கிருதத்தில் விளிக்கப்படும் இந்த மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. முக்கியமாக கருமாரியம்மன் வழிபாடு இந்த மாதத்தில் சிறப்பாக கொண்டாட படுகிறது. ஆஷாட நவராத்திரியும் சிறப்பாக கொண்டாடப்படும் மாதம் இது.
     இந்த மாதத்தில் புதிதாக விதை விதைத்து காய்கறி செடிகள் பயிரிடுவார்கள். புது மழையும் பெய்யக்கூடிய மாதம். இதனால் அறிவியல் பூர்வமாகவும் நம்மை காத்துக் கொள்ள கிருமி நாசினிகளான வேப்பிலை, மாவிலை, மஞ்சள் போன்றவை கொண்டு அம்மனை வழிபடுகிறோம். எளிமையான சத்தான உணவான கூழ் கரைத்து அம்மனுக்கு படைத்து மகிழ்கிறோம். இந்த ஆடிமாதத்தில் துவக்கமான முதல் வெள்ளியான இன்று அம்மன் தலங்களில் அருமையாக வழிபாடுகள் நடந்தேறிக் கொண்டிருக்கும். நாமும் சில அம்மன்களை இப்பதிவில் தரிசிப்போமா?

பெரியபாளையம் பவானி அம்மன்:
                
  இது எங்கள் ஊருக்கு அருகில் உள்ள அருமையான அம்மன் ஆலயம், அதனால் முதலிடம் தந்துள்ளேன். எனது இஷ்ட தெய்வமும் கூட; திருவள்ளூர் மாவட்டம்  ஆரணி அருகே பெரியபாளையம் அமைந்துள்ளது. ஆரணி நதிக்கரையில் அழகுற வீற்றிருக்கிறாள் அன்னை பவானி. அம்மன் சுயம்பு மூர்த்தி. முன்னொரு காலத்தில் சிறுவர்கள் மணலில் லிங்கம் பிடித்து அம்மனை நினைத்து வழிபட அதில் அம்மன் ஐக்கியமானதாக வரலாறு கூறுவார்கள். ஆடி மாதம் முதல் ஞாயிறு முதல் பத்து வாரங்கள் இந்த ஆலயம் களை கட்டும். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து இந்த அம்மனுக்கு பொங்கலிட்டு வேப்பிலைஉடையணிந்து மொட்டையடித்து பலரும் பலவிதமாக தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றுவர். இந்த ஆலயத்தில் பவானி அம்மன் தவிர விநாயகர், முருகர், மாதங்கி அம்மன், பெருமாள் சன்னதிகளும் புற்று அம்மன் கோயிலும் உண்டு. மிகவும் சக்திவாய்ந்த புகழ்பெற்ற அம்மன் ஆலயம். காலை 7 மணி முதல் 12.30 வரையிலும் மாலை 4 மணி முதல் 8.மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

மாங்காடு காமாட்சி அம்மன்;

  இந்த தலத்தை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை! சென்னையில் இருப்பதால் பலர் அறிந்திருப்பர்.குன்றத்தூர் அருகே அமைந்துள்ள அழகிய தலம். இங்கு அன்னை காமாட்சியாக விற்றிருந்து அருள் பாலிக்கிறாள்.
      ஒருமுறை தேவி விளையாட்டாக ஈசனின் திருக்கண்களை மறைக்க உலகமே இருளில் மூழ்கியது. தனது செயலால் வருத்தம் அடைந்த தேவி பூலோகம் வந்து தவத்தில் ஆழ்ந்தாள். ஈசனை தன் இதயக் கமலத்தில் ஆழ்த்தி ஆத்ம லிங்கமாக பூஜித்தாள். தேவர்கள் அனைவரும் பூலோகம் சென்ற தேவியை மீண்டும் கயிலாயம் வரவழைக்க வேண்டும் என்று சிவபெருமானிடம் முறையிட்டனர். ஐயனும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி பூலோகம் வந்து தேவியின் சகோதரர் ஆன திருமால் தாரை வார்த்து கொடுக்க தேவியை திருமணம் புரிந்து கொண்டார். இந்த சம்பவம் மாமரங்கள் நிறைந்த காட்டில் நடந்தது. எனவேஅப்பகுதி மாங்காடு என்று அழைக்கப்பட்டது. இங்குள்ள அம்பிகைக்கு ஆதி காமாட்சி என்ற பெயர் ஏற்பட்டது. தாரை வார்த்த பெருமாள் வைகுண்ட நாத பெருமாள் என நாமம் கொண்டு அருள் பாலிக்கிறார்.அன்னை காமாட்சியை வழிபடும் கன்னிப்பெண்களுக்கு இனிய வாழ்க்கை துணை கிடைக்கும். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காலை முதல் இரவு வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம்.

தீபஓளியாக அம்மன் திருநரையூர்
     கும்ப கோணத்தில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருநரையூர் எனப்படும் நாச்சியார்கோவில். இந்த தலத்தில் அமைந்துள்ளது ஆகாச மாரியம்மன் கோவில். இங்கு கருவறையில் அம்மனுக்கு விக்ரகம் எதுவும் கிடையாது. தீப ஒளியாக அம்பிகை இங்கு குடி கொண்டிருப்பதாக ஐதீகம். ஆண்டுக்கு பத்துநாட்கள் மட்டும் சமயபுரத்தாள் இக்கோயிலில் வந்து தங்கி அருள் புரிவதாக மக்கள் நம்புகிறார்கள். வைகாசி மாத அமாவாசைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமையில் சமயபுரத்தாள் வழிபாடு நடைபெறும். அப்போது தர்பையால் அம்மன் உருவத்தை செய்து அலங்கரித்து வழிபடுவர்.
கொல்லூர் மூகாம்பிகை!
    
கம்ஹாசுரன் என்னும் அரக்கன் மூவுலகங்களிலும் பல அநியாயங்கள் செய்து உயிர்களை துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியை உதவிக்கு நாடினர்.அம்பிகையும் திரிபுர பைரவியாக உருவெடுத்து கோபமுடன் அரக்கனை அழிக்க கிளம்பினாள். அரக்கன் விஷயமறிந்து சிவனை குறித்து தியானத்தில் ஆழ்ந்தான். உடனே அம்பிகை சிவனிடம் வரம் கேட்க முடியா வண்ணம் அவனை பேசமுடியாது செய்தாள். ஊமை ஆனவுடன் அவனது  மூர்க்க குணம் அதிகமாக  இன்னும் அதிகமாக உயிர்களை துன்புறுத்த ஆரம்பித்தான். மூகம் என்ற வடமொழி சொல்லுக்கு ஊமை என்று பெயர். இவனை மூகாசுரன் என்று எல்லோரும் அழைத்தனர். மூகாசுரன் கொடுமைகள் எல்லை மீறிய போது அம்மன் அவனை சம்ஹாரம் செய்தாள். அந்த இடமே கொல்லூர். மூகாசுரனை அழித்தமையால் மூகாம்பிகை என்னும் பெயர் கொண்டு அந்த தலத்தில் அருள் பாலித்து வருகிறாள். இங்கு ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சலோக சிலை உள்ளது. நான்கு திருக்கரங்களுடன் பத்மாசனத்தில் அழகாக காட்சி அளிக்கிறாள் அம்பிகை. சவுந்தர்ய லஹரி என்னும் புகழ்பெற்ற அம்மன் துதி இந்த அம்பிகை மீது ஆதி சங்கரரால் பாடப்பெற்றது. இந்த துதியை பாராயணம் செய்பவர்கள் லட்சுமி கடாட்சம் பெறுவர்.
பண்ணாரி மாரியம்மன்:
  
கோவையில் இருந்து சத்தியமங்கலம் சென்று அங்கிருந்து மைசூர் ரோட்டில் 15 கி,மீ பயணித்தால் பண்ணாரி மாரியம்மன் கோவிலை அடையலாம். ஈரோட்டில் இருந்தும் இந்த கோயிலுக்கு பஸ் வசதி உண்டு.
     பண்ணாரியில் ஓடிய தோரணப்பள்ளம் என்ற காட்டாற்றங்கரையில் மக்கள் மாடு மேய்த்து  வந்தனர். ஒரு காராம்பசு ஒன்று தன் கன்றுக்கு கூட பால் கொடுக்காமல் காட்டுக்குள் அடிக்கடி ஓடி ஒளிந்தது.  மடிநிறைய பாலுடன் செல்லும் பசு திரும்பி வந்தால் ஒரு சொட்டும் இருக்காது. மாடுமேய்ப்பவர் ஒருநாள் பசுவை பின் தொடர்ந்து சென்று கவனித்தார். காட்டில் ஒரு வேங்கை மரத்தடியில் இருந்த புற்றில் பசு பால் பொழிவதை கண்டார். மறுநாள் கிராம மக்களிடம் இதை கூறினார். மக்கள் அந்த இடத்தை சுத்தம் செய்து பார்த்த போது அங்கு அம்மன் திருவுருவம் இருப்பதை அறிந்தனர். பசு அந்த அம்மனுக்கே அபிசேகம் செய்ததாக கருதினர். அப்போது ஒருவர்க்கு அருள் வந்து  நான் வண்ணார்க்காடு என்ற ஊரில் இருந்து வருகிறேன்.பொதிமாடுகளை ஓட்டிக்கொண்டு மைசூர் செல்லும் மக்களுக்கு வழித்துணையாக வந்தேன். எழில் மிகுந்த இந்த இயற்கைசூழலில் தங்க விரும்புகிறேன்! எனக்கு இங்கு கோயில் எழுப்பி வழிபடுங்கள். பண்ணாரி மாரியம்மன் எனப்பெயரிட்டு என்னை வழிபடுங்கள் என்று கூறினார். அதன்படி அங்கு ஆலயம் எழுப்பி வழிபட்டு வருகின்றனர்.
    இந்த ஆலயத்தில் உயிர்ப்பலி கிடையாது. சைவப்படையல் மட்டுமே அம்மனுக்கு படைக்கப்படுகிறது. திருநீறுக்கு பதிலாக புற்றுமண் பிரசாதமாக வழங்கப்படுகிறது. கால்நடை வளர்ப்போரின் காவல்தெய்வமாக இந்த அம்மன் உள்ளது. பங்குனி மாதத்தில் பூச்சாற்று என்னும் வைபவம் நடக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் இருந்து குண்டம் திருவிழா எனப்படும் தீமிதி திருவிழா நடைபெறுகிறது.

    காலை 5.30 மணியிலிருந்து இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.                      தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. ஆடி மாத சிறப்பும், கோவில்களின் சிறப்புகளும் அருமை... நன்றி...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2