உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 11


உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 11


அன்பான வாசகர்களே கடந்த சில பகுதிகளாக தமிழ் கற்றும் கற்றுக் கொடுத்தும் வருகிறேன்! படிக்க படிக்க இனிக்கும் மொழியான தமிழின் சொற்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் இன்று சில தமிழ் சொற்களும் அதன் பொருட்களையும் பார்க்கலாம். கூடவே ஒரு இலக்கியசுவையும் உண்டு.
  சமீபத்தில் பாலாவின் பரதேசி என்ற படத்தை பார்த்தேன். நீங்களும் பார்த்திருப்பீர்கள்! அதில் கங்காணி என்றொரு பாத்திரம். கொத்தடிமைகளாக மக்களை அழைத்துச்செல்லும் ஒரு கதாபாத்திரம். கங்காணி என்ற சொல் மனதில் பதிந்தது. நேற்று பொன்னேரி சென்றிருந்தேன். அப்போது ஒருவர் பேச்சு வழக்கில் கங்காணி பயலுவ! என்று கூறினார். கங்காணி பற்றிய ஆர்வம் அதிகரித்தது. அகராதியில் கங்காணியைத் தேடினேன். பொருள் அறிந்தேன். கண்காணி என்பதுதான் கங்காணி என்று மறுவி இருக்கிறது.
   கண்காணி அல்லது கங்காணி என்ற சொல்லுக்கு பொருள் மேலாளர். அதாவது நம்ம மேனேஜருதாங்க அது.
     இன்னும் அதே வரிசையில் சில சொற்களையும் பொருட்களையும் பார்க்கலாம்.
1.கங்காணி-மேலாளர்
2. கங்கரம்-மோர்
3. கங்காதரன் சிவபெருமான்
4.கங்கதம்- சீப்பு
5.கங்கணம்- காப்பு நாண்
6.கங்கம்- பருந்து, ஒருவகை பாம்பு, பெரிய மரம்
7.கங்காளம்- உலோகபாத்திரம், எலும்புக்கூடு
8கங்காளன் -பெரியகலம், சிவன்,
9. கங்கானம் - குதிரை, வாசி
10. கங்குகரை- எண்ணிக்கை அளவு
11 கங்குல்- இரவு, இருள்
12. கங்குல்வாணர்- அரக்கர்
13கங்கைதூவி-  மேகம்
14.கசங்கலம்- கடல்
15 கசங்கு- கழிந்த ஈச்சமட்டை,

இனி இலக்கியத்திற்கு வருவோம்.

மகத்தில் புக்கதோர் சனிஎனக்கு ஆனாய்
மைந்தனே மணியே மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால்
‘அழையேல்.. போ குருடா!’எனத் தரியேன்..’

கோபம் வருகிறபோது நம் நாவில் உதிக்கும் முதல் சொல் சனியனே! என்பதுதான்! வேண்டாத சனியனை இழுத்து வந்து வச்சிருக்கு!  சனியன் பிடிச்ச மூதேவி! இப்படி சனியனை நாம் வம்புக்கு இழுக்காத நாள் இல்லை!
    முதன் முதலில்   சனியனே! என்று திட்டிய ஒரு சிவனடியாரை பார்க்க போகிறோம் இன்று. சுந்தரர் என்பவர்தான் மேலுல்ல பாடலில் சிவபெருமானை சனியனே! என்று விளிக்கிறார். ஏன்?
    திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரை இரண்டாவது மனைவியாக மணந்த சுந்தரர் அவரைவிட்டு பிரியேன் என்று சத்தியம் செய்கிறார். ஆனால் திருவாரூரில் வசந்த உற்சவம் காணும் பொருட்டு ஆவலாக புறப்பட்டு சென்று விடுகிறார். சத்தியம் மீறிய தண்டணையாக அவரது இரண்டு கண்களிலும் பார்வை போய்விடுகிறது.
   நண்பனான சிவன் துன்பத்தில் உதவ வேண்டாமா? உதவவில்லையே என்ற ஆத்திரத்தில் சிவனை மகத்தில் புகுந்த சனியனே! என்று சாடுகிறார். வீட்டில் நான் எதற்காவது கூப்பிட்டால் ஏய் குருடா! கூப்பிடாதே! என்று பெண்கள் என்னை அலட்சியம் செய்வார்களே! அதை எப்படி நான் தாங்கிக் கொள்வேன்  என்று வருந்தி பாடுகிறார் சுந்தரர். மக நட்சத்திரத்தில் சனி புகுந்தால் துன்பம் அதிகமாகும் என்ற சோதிடக் குறிப்பும் இந்த பாடலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்! பிரதோஷ வேளை நெருங்குகிறது. சிவனை தரிசித்து மகிழ்வோம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட்செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இனிக்கும் தமிழ் & இலக்கியம் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. மக நட்சத்திரத்தில் சனி புகுந்தால் துன்பம் அதிகமாகும் என்ற சோதிடக் குறிப்பும் இந்த பாடலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இன்று தான் இத் தகவலை அறிகின்றேன் .மிக்க நன்றி சகோ
    வாழ்க உங்கள் தமிழ்ப் பணி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2