பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 22


பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 22

உங்கள் ப்ரிய “பிசாசு”


முன்கதை சுருக்கம்: ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்விக்கு பேய் பிடித்துள்ளதால் முஸ்லீம் நகர் தர்காவிற்கு மந்திரிக்க அழைத்து செல்கின்றனர். அங்கு தங்கும் அவள் நள்ளிரவில் எழுந்து சென்று ஒரு விபத்தை ஏற்படுத்துகிறாள்

முந்தைய பகுதிகளுக்கான லிங்க்:






  
இனி:
    அந்த விடியற்காலை பொழுதில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த போது தலைவிரி கோலமாக காட்சியளித்த செல்வி ஒரு விகாரச் சிரிப்புடன் என் கணக்கு இன்னிக்குத்தான் துவங்கியிருக்கு! என்று வெறிபிடித்தவள் போல சிரிக்க ஆரம்பித்தாள்.
    பாய் தன் கழுத்தில் அணிந்திருந்த பவழ மணி மாலையை எடுத்து வாயில் ஏதோ முணுமுணுத்தபடி உருட்ட ஆரம்பித்தார். சிறிது நேரத்தில்  தலையில் கை வைத்தபடி ஓ அல்லா! என்று அமர்ந்தார்.
   என்ன ஆச்சு பாய்!
  இப்ப ஆம்புலன்ஸ் ஓசை கேட்குதே அதுக்கு இவதான் காரணம்! இவதான் அந்த விபத்தை ஏற்படுத்தி இருக்கா!
   செல்வி விருட்டென்று திரும்பினாள். பாய்! நான் எதுவும் செய்யலை! எனக்கு ஒன்றும் தெரியாது என்றாள். அடுத்த நிமிடம் வெறி கொண்டவள் போல சிரித்தாள்.
   பாய்! எனக்கு ரொம்ப பயமா இருக்குது! இவளுக்கு ஹிஸ்டீரியாவோ  என்னவோ தெரியலை! இவங்க அப்பா அம்மாவை வரச்சொல்லியிருக்கேன் வந்ததும் இவளை அவங்க ஊருக்கு அனுப்பிச்சிட வேண்டியதுதான்.
   அப்ப இவ மேல இருக்கிற பேயை விரட்ட வேண்டாமா?
எங்க பாய்? உங்க கட்டுப்பாட்டில எதுவும் மீற முடியாதுன்னு சொன்னீங்க! ஆனா இவ அதையும் மீறி விபத்தை ஏற்படுத்தி ஒரு உயிரை கொன்னு போட்டிருக்காளே!
   பாயால் பதில் பேச முடியவில்லை!மவுனமானார்.
  என்ன பாய் மவுனமாயிட்டீங்க? பதில் சொல்லுங்க! உங்களை நம்பி வந்தா இப்படி ஆயிருச்சே!
   தம்பி கோபப்படாதீங்க! இது கொஞ்சம் வித்தியாசமான கேஸா இருக்கு! இதுவரைக்கும் இத மாதிரி என்னை மீறி இங்க நடந்துது இல்லை! இதுதான் முதல் தடவை கொஞ்சம் அசட்டையா இருந்துட்டேன். என்னோட பாதுகாப்பை பலப்படுத்தனும்னு தோணுது இது எனக்கு விடப்பட்ட சவாலா எடுத்துக்கிறேன். இவங்க அப்பா அம்மா வரட்டும். அவங்களும் இங்கேயே தங்கட்டும். ஆனா இவளை குணப்படுத்திதான் அனுப்புவேன் இதுக்கு நீங்க ஒத்துழைக்கணும் என்றார்.
    என்ன பாய்! என்னை குணப்படுத்த போறீங்களா? எனக்கு எந்த வியாதியும் இல்லையே! அப்புறம் என்ன மருந்து கொடுக்க போறீங்க? என்ற செல்வி! எனக்கு மருந்து இன்னும் ரெண்டு உயிர்கள் தான் அதை உங்களாளே தர முடியுமா? என்று கெக்களித்தாள்.
   பாய் அதுவரைசாந்தமாக இருந்தவர் இப்போது மிகவும் கோபமானார். கையில் சிறிது நீரை எடுத்து ஏதோ ஓதி அதை செல்வியின் மீது எறிந்தார். ஐயோ! எரியுதே! எரியுதே? என்னை காப்பாத்துங்க காப்பாத்துங்க! என்று இங்கும் அங்கும் ஓடினாள் செல்வி.
  பாய்! என்ன செய்யறீங்க?
பாய் கை அமர்த்தினார்! நீங்க கொஞ்சம் சும்மா இருங்க! இது என்னோட ட்ரீட்மெண்ட்.
  ஆனா செல்விக்கு ஏதாவது ஆச்சுன்னா?
ஒண்ணும் ஆகாது! குணமடையனும்னா இப்படி சில வேதனைகளை பொறுத்துகிட்டுதான் ஆகும். டாக்டர் கொடுக்கிற கசப்பு மருந்தை சாப்பிட்டாதானே ஜுரம் குணமாகுது அது போலத்தான் இதுவும் என்றார்.
    செல்வி அப்படி அரற்றிக் கொண்டிருக்கும் போதே மீண்டும் கொஞ்சம் நீரை மந்திரித்து தெளித்தார். இன்னும் அதிகமாக செல்வி அலற தொடங்கினாள் வினோத்தால் அதை சகிக்க முடியவில்லை. போதும் பாய்! என்றான்.
  பாய் அவனை முறைத்தார்! நீங்க கொஞ்சம் வெளியே போங்க! என்றார். வினோத் அரைமனதுடன் அங்கிருந்து நகர பாய் மீண்டும் மந்திரிக்க ஆரம்பித்தார்.
    செல்வியின் அலறல் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக அடங்க தொடங்கியது. இப்போது பாய் கையில் ஒரு தாயத்துடன் இருந்தார். அதை சாம்பிராணி தூபத்தில் காட்டி மனதிற்குள் ஏதோ முணுமுணுத்தவாறே செல்வியை நெருங்கி அவள் கையில் கட்ட முயன்றார்.
   அதுவரை அடங்கி இருந்த செல்வி வெறிகொண்டார் போல எழுந்தாள். கட்ட வந்த பாயை அப்படியே உதறி தள்ள தூரத்தில் போய் விழுந்தார் பாய்!
 ஓ! சைத்தான் கி பச்சா!  என்னையே நீ விரட்டறியா? உன்னை என்ன செய்யறேன்பார் என்று மீண்டும் மந்திரிக்க முயன்றார் பாய். ஆனால் அவரது வாய் கோணிக் கொண்டது. பேச முடியவில்லை! அவரை மீறிய ஒரு சக்தி அது!
   செல்வி அங்கிருந்து வேகமாக வெளியே வந்தாள். வினோத்தை கடந்து வேகமாக நடக்க தொடங்கினாள். வினோத் எதோ வித்தியாசமாக உணர்ந்தான். செல்வி செல்வி ! நில்லு! என்று குரல் கொடுத்துக் கொண்டே பின்னால் சென்றான். ஆனால் அவள் வேக நடை முன் இவனால் நடக்க முடியவில்லை! ஐந்தே நிமிடத்தில் முஸ்லீம் நகர் ஏரியாவை அவள் கடந்து சென்றாள். ஆண்டார்குப்பம் பிரதான சாலையில் வந்தவள் அவ்வழியே வந்த ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டாள்.
   அவளை பின் தொடர்ந்து வந்த வினோத்தால் அவள் பேருந்தில் ஏறுவதைத்தான் பார்க்க முடிந்தது. அப்படியே தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

  உன் நண்பன் ஏன் பேய் பிடிச்சிருக்கிறதா நடிக்க கூடாது? சித்தப்பா கேட்க முகேஷ் அதுக்கு அவசியம் என்ன சித்தப்பா? என்றான்.
    அவசியம் இல்லேதான் முகேஷ்! ஆனா எமனை பார்த்தவனை நம்ப மாட்டேன்னு சொல்ற நீ உன் ப்ரெண்டுக்கு ஒண்ணுன்னா மட்டும் நம்பறே இல்லையா? முகேஷ் எந்த விஷயத்திலும் ஒரு நம்பிக்கை வேணும். நம்மளோட வாழ்க்கைக்கே ஆதாரம் நம்பிக்கைதான். என்று தத்துவம் பேச ஆரம்பிக்க
  சரி சித்தப்பா நான் நம்பறேன்! என்றான். இப்படியா அறைகுறையா சொல்லாதே முகேஷ். எதையும் தீர விசாரிக்கனும்னு சொல்லுறது அறிவு. ஆனா நம்பிக்கை என்பது வேற! அது நாம் ஒருத்தர் கிட்ட செலுத்தற பக்தின்னு கூட சொல்லலாம் என்றார்.
  ஓக்கே சித்தப்பா! நான் நம்பறேன்! ஆனா ரவிக்கு பேய் பிடிக்கலைன்னு மட்டும் சொல்லிடாதீங்க! அவன் நடவடிக்கை எல்லாம் வித்தியாசமா இருக்குது.
   நீ அவனுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு நம்பறே இல்லையா?
  ஆமாம் நம்பறேன்!
பேயின்னு ஒண்ணு இல்லைன்னு சொல்றவன் உன் நண்பன் அவனை ஒரு பேய் பிடிச்சு ஆட்டுவிக்குது! என்ன் விசித்திரம் பார்!
  சித்தப்பா! நீங்க அவனோட முழு ஜாதகத்தையும் சொல்றீங்க!
ஆனா என்னை நம்ப மாட்டேங்கிறியே! அவனை நம்பற ஆனா நான் சொல்றதை நம்ப மாட்டேன்கிறியே!
   சித்தப்பா நீங்க என்னதான் சொல்றீங்க?
உன் ப்ரெண்டுக்கு  பேய் பிடிக்கலைன்னு சொல்றேன்!
  வியப்பாய் அவரையே பார்த்தான் முகேஷ்.
அப்ப அவன் இந்த மாதிரி நடந்துக்கணும்?
அவனையே கேப்போமா? இங்கதான் நம்ம பின்னாடி நின்னு முறைச்சிகிட்டு இருக்கான்! ஏம்பா ரவி! ஏன் ஒளிஞ்சிகிட்டு ஒட்டு கேக்கற? இப்படி முன்னாடி வா! சுவாமிஜி கூப்பிட  கண்களில் ஆக்ரோஷத்துடன் அடேய் பாவி! என் திட்டத்தையே கெடுத்திட்டியே? என்று முகேஷ் மீது பாய்ந்தான் ரவி!
                                             மிரட்டும்(22)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!