திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர்



திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரர்



 சிவானந்தேஸ்வரர்



நாலு பேர் போன வழியில் நாமும் செல்வோம் என்றொரு பழமொழி உண்டு. யார் அந்த நால்வர்?முன்னே செல்பவர்களை பின்பற்றி செல்ல வேண்டுமா? இல்லை! சமய குரவர்களான அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர் தான் அந்த நால்வர்.இந்த பெரியோர்கள் அக்காலத்தே வண்டி பாதை வசதிகள் இல்லாத போதும் பல அரிய சிறப்பு வாய்ந்த தலங்களுக்குச் சென்று இறைவனின் சிறப்புக்களை பாடல்களாக பாடி துதித்து இறையருள் பெற்றதோடு மட்டுமல்லாமல் நமக்கு வழிகாட்டியாகவும் உள்ளனர்.
    நம் நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் 275 ஆகும். அவற்றுள் தொண்டை நாட்டில் 32 தலங்கள். அவற்றுள் ஒன்றுதான் திருக்கள்ளில். திருஞான சம்பந்தரால் போற்றி பாடப்பெற்ற இந்த அழகிய தலம் இன்று திருக்கண்டலம் என்று அழைக்கப்படுகிறது.
 நந்தி தீர்த்தம்
     சென்னையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சென்னை- பெரியபாளையம் செல்லும் வழியில் கன்னிகைப்பேர் என்னும் இடத்தில் இருந்து தெற்கே பிரியும் கிளைச்சாலையில் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கள்ளில் என்னும் திருக்கண்டலம். திருவள்ளூரில் இருந்து தாமரைப்பாக்கம் வழியாக பெரிய பாளையம் செல்லும் சாலையில் வெங்கல் என்னும் ஊரிலிருந்து கன்னிகைப்பேர் செல்லும் சாலையில் வலப்புறம் திரும்பினால் 10 கி.மீ தொலைவில்  திருகண்டலம் அடையலாம்.
    திருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வந்து இங்குள்ள குசஸ்தலை ஆற்றில் நீராடுவதற்கு முன் தனது பூஜைப் பெட்டிகளை கரையின் மீது வைத்து விட்டு அடியார்களோடு நீராடினார்.அப்போது இறைவன் சம்பந்தரது பூஜைப்பெட்டிகளை கவர்ந்து அருகில் உள்ள கள்ளிக் காட்டில் மறைத்து தான் அங்கு உறைவதை குறிப்பால் உணர்த்தினார்.  கள்ளில் உறையும் ஈசனை வழிபட்டு கள்ளில் பதிகம் பாடினார் சம்பந்தர் என்பது வரலாறு.
 ராஜகோபுரம்

தலவிருட்சம்: இத்தலத்தின் விருட்சம் கள்ளியாகும். அபூர்வமான கோட்டுப்பூ வகையைச் சேர்ந்த கப்பலறி எனப்படும் இக்கள்ளி மரத்தடியில் இறைவன் எழுந்தருளி இருந்ததால் திருக்கள்ளில் நாதர் என்றும் திருக்கள்ளீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். ப்ருகுமுனிவர் அகத்தியர் போன்றோர் வழிபட்ட தலம் திருக்கள்ளில்.

மூர்த்தி தலம் தீர்த்தம் என்ற சிறப்புடையது திருக்கள்ளில். இத்தலத்தின் மூர்த்தி சிவானந்தேஸ்வரர்.  தீர்த்தம் நந்தி தீர்த்தம். தலம் திருக்கள்ளில் மூன்றுமே சிறப்புடையது. ஆலயத்தின் எதிரே நந்தி தீர்த்தம் அருமையாக அமைந்துள்ளது. புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சுவாமி விமானம் பழமையான கஜபிருஷ்டம் என்னும் வகையை சேர்ந்தது.
 ஆலய உள் பிரகாரத்தின் ஒரு பகுதி
 
சோமாஸ்கந்தவடிவம்.
 சுந்தர விநாயகர் சன்னதி
   சுவாமி- அம்மன் சன்னதிகளுக்கு இடையே முருகர் சன்னதி அமையப்பெற்ற ஆலயங்கள் சோமாஸ்கந்த வடிவ தலங்கள் ஆகும்.  திருக்கள்ளில் அவ்வாறு அமையப்பெற்றுள்ளது. மகேஸ்வர வடிவங்களில் சிறப்புடையது இந்த வடிவம். மூன்று தெய்வங்களும் கிழக்கு நோக்கி அமையப்பெற்று வணங்குபவர்களுக்கு வளங்களை வாரித் தருகின்றனர். இத்தல விநாயகர் பிரும்மாண்டமாய் சுந்தர விநாயகர் என்ற நாமத்துடன் காட்சி அளிக்கிறார். இங்கு விநாயகருக்கு மாலை சார்த்தி வழிபட திருமணத் தடை அகலுகிறது.
  இவ்வாலயத்தில் உள்ள பைரவருக்கு மிளகாய் அரைத்து அபிஷேகம் செய்து வழிப்பட்டால் இழந்த பொருட்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை! பிரதோஷ வழிபாடு மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. மாசி மாதத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஜனவரியில் கும்பாபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நூறுவயது ஆறுமுக குருக்கள் (சேரில் அமர்ந்திருப்பவர்)

100 வயது குருக்கள்: இந்த ஆலயத்தில் அர்ச்சகராக பணியாற்றும் திரு வெ.சி ஆறுமுக குருக்கள் 100 வயதை கடந்தவர். பரம்பரையாக பூஜித்து வரும் அவர் இந்த தள்ளாத வயதிலும் உற்சாகமாக கோவிலை பராமரித்து அபிஷேக ஆராதனைகள் செய்வித்து பக்தர்கள் சிறப்புற பூஜைகள் செய்து வருகிறார். அவர் ஆசி பெற்று வருதல் மிகச்சிறப்பு.
திருக்கள்ளில் பதிகம்:
முள்ளின் மேல் முதுகூகை முரலும் சோலை
வெள்ளின் மேல் விடுகூறை கோடி விளைந்த
கள்ளின் மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.
சம்பந்தர் பாடிய பதினோறு பதிகங்களில் முதல் பதிகம் இது.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து  ஊத்துக் கோட்டை பெரியபாளையம் செல்லும் பேருந்துகளில் ஏறி கன்னிபுத்தூர் என்னுமிடத்தில் இறங்கி அங்கிருந்து ஷேர் ஆட்டோக்கள் மூலம் திருக்கள்ளில் அடையலாம்.
தட எண்கள் 92, 123, 125,
தட எண்58டி என்ற பேருந்து திருக்கண்டலம் செல்கிறது.
செங்குன்றத்தில் இருந்து மாநகர பெரிய பாளையம் செல்லும் மாநகர பேருந்துகள் 514,592 ஆகியவை மூலம் கன்னிபுத்தூர் வந்து அங்கிருந்து ஆலயத்திற்கு செல்லலாம்.
 நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 மணி முதல் 12 மணிவரை
 மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை.

திருக்கள்ளில் செல்வோம் திருவருள் பெருவோம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Comments

  1. இதுவரை சென்றதில்லை...

    விரிவான (பேருந்து விவரம், நடை திறந்திருக்கும் நேரம் உட்பட) தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
  2. அற்புதமாக கூரியுலீர்கள்.. எப்படி செல்ல வேண்டும் எங்கு இருந்து எந்த திசையில் செல்ல வேண்டும் என்றெல்லாம் கூறி இருப்பது சிறப்பு

    ReplyDelete
  3. மிக அருமையான பகிர்வு .....உங்கள் பகிர்வுக்கு நன்றி....

    நன்றி,
    பிரியா
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. ஓம் நமச்சிவாய;ஒரு தெய்வீக ஸ்தலத்தைப் பற்றிய தொகுப்புக்கு நன்றி

    ReplyDelete
  5. சிறப்பானதொரு ஆலயப் பகிர்விற்கு நன்றி சகோ!

    ReplyDelete
  6. வெள்ளிக்கிழமைகளில் ஆன்மீகப் பதிவுகளைத் தருகிறீர்கள்.நன்றி !

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!