பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8



பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8

உங்கள் ப்ரிய பிசாசு

முன்கதை சுருக்கம்} ராகவனின் நண்பன் வினோத் கூட்டி வரும் பெண் செல்வியின் செய்கைகள் வினோதமாக இருக்கிறது. அவளுக்கு பேய் பிடித்திருப்பதாக ஊரில் பேசிக் கொள்கிறார்கள். அது உண்மையென்றும் அதனால் தான் இங்கு கூட்டி வந்தேன் என்று சொல்கிறான் வினோத். பஞ்செட்டியில் முகேஷின் நண்பன் ரவி முகம் கழுவ பாத்ரூமிற்கு செல்கிறான். அங்கு கண்ணாடியில் அவன் முகம் தெரியாமல் வேறு முகம் தெரிகிறது!


கண்ணாடியில் தெரிந்த புகை படிந்த உருவத்தை கண்டதும் வீல் என அலறினான் முகேஷ்! அதே சமயம் ரத்தக்கறை படிந்த அந்த துணியை சுவைத்துக் கொண்டிருந்த ரவி திரும்பினான். அவன் கண்களில் ஒரு கனல்! ஏய்! ஏன் இங்க வந்தே போ! போயிரு! என்று கத்தினான்.
  முதன் முதலாக நண்பனை கண்டு பயந்தான் முகேஷ்! பின் சுதாரித்துக் கொண்டு டேய்! நான் உன் ப்ரெண்டுடா நல்லா பாரு! என்றான்.
  யாரு! நீயா? நீ இல்லே என் ப்ரெண்டு! என்று மீண்டும் ரத்தத்தை ருசிக்க ஆரம்பித்தான் ரவி. முகேஷ் அவசரமாக பூஜையறைக்குச் சென்றான். ஒரு சொம்பில் சிறிதளவு மஞ்சள் போட்டு கலந்து எடுத்துவந்து  வேகமாக ரவியின் முகத்தில் விசிறி அடித்தான்.
  ஏய்! என்ன பண்றே வேணாம்! வேணாம்! என்று ரவி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மஞ்சள் நீர் பட்டதும் அப்படியே சுருண்டு விழுந்தான் ரவி!
   இப்பொழுது அருகில் சென்று அவனை தூக்கி எழுப்பினான் முகேஷ். அப்படியே அவன் தலையில் அருகில் இருந்த குழாயில் தண்ணீர் பிடித்து ஊற்றினான். பின்னர் அப்படியே மெதுவாக கண்விழித்தான் ரவி.
  ஏண்டா இப்ப என்னை குளிப்பாட்டுற? என்றான்.
 முகேஷ் எதுவும் பேசவில்லை! மடமடவென்று இன்னும் சிறிது மக் தண்ணீரை அவன் மீது விசிறி எறிந்து ரவியை எழுப்பினான். வா! என்றான்.
  என்னடா பண்றே? உனக்கு என்ன ஆச்சு?
 எனக்கு ஒண்ணும் ஆகலைடா உனக்குத்தான் பேய் பிடிச்சிருக்கு!
என்னது பேயா?
 ஆமாம்! பயங்கரமான ரத்தவெறிப் பிடித்த பேய்!
நீ சொல்றது விளங்கலைடா!
ரவி உனக்கு எல்லாத்தையும் விளக்கிட்டு இருக்க முடியாது! ராத்திரி நீ எங்க போனே? நான் தூங்கி கிட்டு இருக்கும் போது நீ வெளியில் போய் வந்திருக்கே! அங்க என்ன செஞ்சயோ தெரியலை! இப்ப உன் லுங்கியில ரத்தக்கறை அதை சுவைச்சு சாப்புடறே! அப்ப நீ நார்மலா இல்ல!
  ரவியின் முகம் வெளிறிப் போனது.
டேய் எனக்கு என்னடாஆச்சு! நான் பழையபடி மாறுவேனா? என்றான் சோகமுடன்.
அது  என் சித்தப்பா கிட்ட தான் இருக்கு!
 அவர் இப்ப எங்கடா இருக்கார்!
 அவர் ஆந்திராவுல இருக்கார் திருப்பதி பக்கத்துல ஒரு சின்ன கிராமம் அங்க இருக்கார்.
  அவரை இங்க வரவழைக்க போறீயா?
இல்லைடா! நாம தான் அங்க போகப் போறோம்! இன்னிக்கு சனிக்கிழமை! மதியமே கிளம்பலாம்! நீ வீட்டுக்கு போயிட்டு ரெடியாயிடு.
 ரவி அரைகுறையாக தலையசைத்து விட்டு நகர்ந்தான். டேய் நில்லுடா! நானே உன்னை உன் வீட்டுல விட்டுடறேன்! மதியம் ஒன்றரை மணிக்கு திருப்பதி பஸ் இருக்கு இப்பவே மணி எட்டு ஆயிடுச்சு நான் ஆபிஸ் போய் லீவ் சொல்லிட்டு அப்படியே உன் வீட்டுக்கு வந்துடறேன் நீ ரெடியா இரு என்றான் முகேஷ்.
  ரவியை தனது பைக்கில் அமர்த்தி சென்று வீட்டில் இறக்கிவிட்டான். ரவியின் பேயறைந்த முகத்தை பார்த்து குழம்பி போனார்கள் அவனது பெற்றோர்.
  ஓன்னுமில்லேம்மா! ராத்திரி முழுக்க முழிச்சிருந்து டீவியிலே கிரிக்கெட் மேட்ச் பாத்தான்! அதான் இப்படி  இருக்கான். மதியம் திருப்பதி போறேன். இவனையும் கூட்டிகிட்டு போலாமுன்னு!  என்று இழுத்தான் முகேஷ்.
  அதுக்கென்னப்பா! கூட்டிகிட்டு போ என்றார் ரவியின் தந்தை
ரவி ரெடியா இரு நான் சரியா ஒரு மணிக்கு வந்திடறேன் என்று விடைபெற்றான் முகேஷ்.
  அவன் அப்படி சென்றதும் ரவி தன் தந்தையிடம் சென்று அப்பா நான் திருப்பதி போய்த்தான் ஆகனுமா? என்றான்.
  என்னடா இப்படி கேக்குற? நீயும் முகேஷிம் பேசித்தானே என்கிட்ட வந்து கேட்டீங்க?
  இல்லேப்பா! அவன் வற்புறுத்தி கூப்பிடறான்! ஆனா எனக்கு போக பயமா இருக்கு!
  ஏண்டா? அங்க பூதமோ பேயோ இல்லே! வெங்கடேசபெருமாள் தானே இருக்கார்!
  அங்க அவரு இருக்காரு! ஆனா எனக்குள்ள இல்லே பேய் உக்காந்துகிட்டு இருக்கு என்று முணுமுணுத்தான் ரவி.
  என்னடா சொல்றே சத்தமா சொல்லு!
 ஒண்ணுமில்லே! எனக்கு சுத்தமா பிடிக்கலை திருப்பதி போறது!
 அப்ப அவன்கிட்ட நேரடியா சொல்ல வேண்டியதுதானே!
அவன் கூப்பிடறப்போ மறுத்து பேசத் தோணலை!
 அப்ப கிளம்பி போ! நம்ம குலதெய்வம் வேற போயி வணங்கிட்டு வா தப்பில்லை!
பதில் பேசாமல் உள்ளே சென்றான் ரவி.

வினோத் என்னடா சொல்றே இவதான் இங்க உன்னை கூட்டி வரச் சொன்னாளா? புரியற மாதிரி சொல்லு என்றான் ராகவன்.
    இவளை எனக்கு கட்டி வைக்க என் பெற்றோர் முடிவு செஞ்சி பொண்ணு பார்க்க கூட்டிகிட்டு போனாங்க! நானும் போன ட்ரிப்ல கிளம்பறதுக்கு முன்னே போய் பார்த்து வந்தேன். அப்புறம் துபாய் போயிட்டேன். ரெண்டு பேருக்கும் பிடிச்சு போனதாலே திரும்ப அடுத்த முறை வரும்போது மேரேஜ்னு முடிவாச்சு!
  நாங்க சாட் பண்ணிக்குவோம்! போன்ல பேசிப்போம்! அப்ப ஒரு நாள் இவ இந்த ஊருக்கு கூட்டிட்டு போறியா? அங்க ஒருத்தரை பார்க்கணும்னு மெசேஜ் அனுப்பினா !
அட நம்ம ஊரா இருக்கே இங்க யாரை பாக்க போறேன்னு கேட்டேன்.
  கூட்டிட்டு போ காட்டறேன்னு சொன்னா! நானும் வரும்போது கூட்டிகிட்டு போறேன்னு சொல்லிகிட்டு இருந்தேன்.
  ஆனா இவ தினமும் என் போனுக்கு அந்த ஊருக்கு கூட்டிகிட்டு போ!ன்னு தொடர்ந்து மெசேஜ் அனுப்பவும் அவ அப்பாகிட்ட போன் செஞ்சு சொன்னேன். அவரு அழுதுகிட்டே தம்பி என் பொண்ணு கொஞ்ச நாளாவே சரியில்லை! அவளை மறந்துட்டுங்கன்னு அழ ஆரம்பிச்சிட்டாரு.
   இதுல ஏதோ பிரச்சனை இருக்குன்னு என் உள் மனசு சொல்லிச்சு ஒரு இருபது நாள் லீவ் போட்டுட்டு அங்கிருந்து கிளம்பி வந்து நேரா இவ ஊருக்கு போனேன். இவ என்னை பார்த்ததும் மீண்டும் அதே பாட்டை பாடினா!
  ஆளே மாறிப்போயிருந்தா! திடீர்னு அப்நார்மல் ஆயிட்டா! ஹிஸ்டீரியா வந்தது போல உன் ஊருக்கு கூட்டிட்டு போன்னு ஒரே அடம் சரின்னு அவங்க அப்பா அம்மா அனுமதியோட இங்க கூட்டி வந்துட்டேன்! அவங்க பின்னாலேயே வர்றதா சொல்லியிருக்காங்க! என சொல்லி முடித்தான்.
  அப்ப இவ மேல ஏதோ ஒண்ணு பிடிச்சுதான் இருக்குன்னு சொல்றே
  அதுலே மாத்தமே இல்லே! இவளை பிடிச்சு ஏதோ ஒண்ணு ஆட்டுது.
சரி இன்னைக்கு ஞாயித்துகிழமை நம்ம பூஜாரிகிட்டே மந்திரிப்போம்! அதுக்கும் சரிபட்டு வரலைன்னா இருக்கவே இருக்கார் முஸ்லீம் நகர் பாய்!
   வா அவளை கூட்டிகிட்டு பூஜாரி வீட்டுக்கு போவோம்!
இருவரும் சென்று செல்வியை எழுப்பினர். அவள் நார்மலாய் மாறி இருந்தாள்!
எங்கண்ணா கூப்பிடறீங்க? என்றாள் ராகவனை பார்த்து
ஒண்ணுமில்லேம்மா அப்படியே காலாற நடந்து வரலாம் வா! என்று அழைத்துக் கொண்டு பூஜாரியின் வீட்டிற்கு கிளம்பினர்.
  இரவு நேரம் கிராமத்து தெரு விளக்குகள் மங்களாக எரிய இரண்டு தெரு தள்ளி இருக்கும் பூஜாரி வீட்டிற்கு சென்றனர். அவர் வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தார்.
என்னய்யா பூஜாரி சவுக்கியமா? என்றான் ராகவன்.
  அதுக்கென்ன குறைச்சல்! என்ன கும்பலா வந்திருக்கீரு!
 காரணம் இல்லாமலா வருவோம்! இப்படி வாரும்!  என்றுபூஜாரியை தனித்து அழைத்துச் சென்ற ராகவன் சுருக்கமாக விபரம் கூறினார்.
  பூஜாரியின் கண்களில் வியப்பு தென்பட்டது. இது பெரிய விவகாரமா இருக்கும் போலிருக்குங்களே சாமி! நீங்க பாய்கிட்ட கூட்டிகிட்டு போய் இருக்கலாமே!
  அவருகிட்ட அப்புறம் போறோம்! முதல்ல நீ கொஞ்சம் மந்திரிச்சு பாரேன்
சரிங்க! என்று உள்ளே சென்ற பூஜாரி ஒரு தட்டில் விபூதி பரப்பி கற்பூரம் ஏற்றி ஏதோ மந்திரங்களை முணுமுணுத்தான். ஒரு இரண்டு நிமிடங்களுக்கு பின். அம்மா தாயே மகமாயி! நீ தான் இந்த பொண்ணை காத்து ரட்சிக்கணும் என்று அந்த விபூதியை செல்வியின் நெற்றியில் இட்டு விட்டான்.
  வினோத் என்ன இது விபூதி எல்லாம்!
  இது எங்க காவல் தெய்வம் விபூதி!  உனக்கு உடம்பு சரியில்லையோன்னு தோணுது அதான் கொஞ்சம் மந்திரிச்சு  இட்டு விட்டோம்.
 நல்ல வேடிக்கையா இருக்கு! நான் நல்லாத்தான் இருக்கேன்.
சரி கிளம்புவோம்! பூஜாரிக்கு காணிக்கை கொடுத்துவிட்டு கிளம்பினார்கள்!
சிறிது தூரம் சென்ற செல்வி  திரும்பி பூஜாரியைப் பார்த்தாள்.
 அந்த பார்வையைப் பார்த்து பூஜாரி வெலவெலத்துப் போனான். அப்படி ஒரு தீட்சண்யமான பார்வை அது.
  சாமி! கொஞ்சம் நில்லுங்க! என்று குரல் கொடுத்தவாறு வந்தான். இப்போது அவனது கையில் ஒரு தாயத்து இருந்தது.
  செல்வியைப்பார்த்து, என்னையே மிரட்டறியே தாயி! பாவம் இந்த பொண்னை விட்டு போயிடு! என்று கொஞ்சம் விபூதியை முகத்தில் ஓதினான். மந்திரங்களை முணுமுணுத்தவாறே அந்த தாயத்தை செல்வியின் கையில் கட்டினான். பின்னர் போய் வாங்க என்று அனுப்பினான்.
    மூவரும் வீடு வந்தனர். செல்வி தங்க ஒரு தனியறையும் ராகவனும் வினோத்தும் ஹாலில் படுக்க முடிவு செய்தனர். நீ போய் செல்வி கூட படுத்துக்க என்று மனைவியிடம் சொன்னான் ராகவன்.
 ஐயையோ! எனக்கு பயமா இருக்கு! நான் மாட்டேன்பா! என்றாள் அவள்.
இதுக்கெல்லாமா பயப்படுவ? நாம கிராமத்திலே இருக்கோம்! இது மாதிரி ஆயிரம் விசயம் பாத்திருப்போம்! அந்த பொண்ணு புதுசு! தனியா தூங்க பயப்படும் நீ போய் அப்படியே பேச்சு துணைக்கு படுத்துக்கோயேன் என்றான் ராகவன்.
   எங்க ஒரு பேய்க்கு பேச்சு துணையா என்னை அனுப்ப பாக்கறீங்களே?
ஷ்! கொஞ்சம் அடக்கி வாசிக்கிறீயா? என்று அடக்கிய ராகவன் அதான் மந்திரிச்சு தாயத்து எல்லாம் கட்டி கூட்டி வந்திருக்கோம் ஒண்ணும் ஆகாது. போய் தைரியமா படுத்துக்கலாம் என்றான்.
  அவனது மனைவி அரைமனதாய் செல்வி இருந்த அறைக்குள் நுழைந்தாள். அங்கு இவள் வருவதற்குள் கண்ணயர்ந்து போயிருந்தாள் செல்வி. அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு விட்டபடி பெட்டில் படுக்க பயந்து  கீழே ஒரு பாயை விரித்து படுத்தாள் ராகவன் மனைவி.
   நேரம் நள்ளிரவை கடந்திருக்கும். திடுக்கிட்டு விழித்த அவள் பெட்டை பார்த்தாள் அங்கு செல்வியைக் காணோம். ஒரு வேளை பாத்ரூம் போயிருப்பாளோ? என்று எண்ணி பத்துநிமிடம் காத்திருந்தாள் செல்வி வராது போகவே எழுந்து வந்து ராகவனை எழுப்பினாள்.
  என்னங்க! அந்த பொண்ணை காணோம்! சீக்கிரம் எழுந்திருங்க! 
ராகவன் எழுந்த போதே வினோத்தும் எழுந்துவிட்டான். நல்லா பாத்தியா? பாத்ரூம்ல இருக்காளா பாத்தியா?
  எங்கேயும் காணலைங்க?
அவர்களுக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது. புதிய இந்த ஊரில் செல்வி எங்கு போயிருக்க கூடும்? அவர்கள் யோசனை செய்து கொண்டிருந்த போது செல்வி பூஜாரியின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாள்.
                                         மிரட்டும்(8)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!


Comments

  1. ம்ம் மிரட்டலாய்தான் இருந்தது
    தொடருங்கள்...............

    ReplyDelete
  2. மேலும் மிரட்டுகிறது... (முன்கதை சுருக்கம் கொடுத்தீர்கள்... முந்தைய பதிவை படிக்க வேண்டும் என்று இருந்தேன்...[மறந்து விட்டதால்] நன்றி...)

    ReplyDelete
  3. தளிர் அண்ணா , கதையை படிக்கவில்லை. பின்னூ மட்டும்.

    பதிவுக்கான லின்க் உடனும் ஒன்றில் இல்லாமலும் உங்கள் பின்னூ பார்த்தேன். தயக்கமென்ன தாரளமாய் பதிவுக்கான லின்க் கொடுஙகளேன்.

    ReplyDelete
  4. ஆஹா பயமுறுத்தறிங்களே ....!

    ReplyDelete
  5. இப்பொழுது தான் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

    சுவாரசியமான கரு. திகில் கூட்டி எழுதியிருக்கும் விதம் நன்று. படங்களும் பொருத்தம். (குறிப்பாக பகுதி 5ல் இருக்கும் முகமிழந்த பேய்ப்படம்.. இரவில் பயங்காட்டும்)

    தொடருங்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!