சச்சினை நிராகரித்த லில்லி!

ஒரு பந்து வீச்சாளராக வேண்டும் என்ற வேட்கையுடன் சென்னையில் உள்ள எம்.ஆர்.எப் பேஸ் பவுண்டேஷனுக்கு வந்த 14 வயது சச்சின் டெண்டுல்கரைப் பார்த்த அந்த மையத்தின் பொறுப்பாளரும், உலகின் மிகச் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவருமான டென்னிஸ் லில்லி, அவரை பயிற்சிக்கு ஏற்க முடியாது என்று கூறி நிராகரித்து விட்டாராம்.
இதை நினைவு கூர்ந்து பேசிய லில்லி, நான் சச்சினுக்கு நல்லதுதான் செய்தேன் என்று நினைக்கிறேன் என்று கூறிச் சிரித்தார்.
டென்னிஸ் லில்லி தலைமையிலும் அவரது நேரடிக் கண்காணிப்பிலும் இயங்கி வரும் இந்த வேகப் பந்து வீச்சாளர்களுக்கான பயிற்சி மையம் பல உலகப் புகழ் பெற்ற பந்து வீச்சாளர்களை உருவாக்கியுள்ளது. அவர்களில் முக்கியமானவர் ஜாகிர் கான்.
கிட்டத்தட்ட 25 வருடங்களாக இந்த மையத்தின் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றியுள்ள லில்லி தற்போது சென்னையிலிருந்து விடைபெறுகிறார். இதையொட்டி அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1987ம் ஆண்டு என்னிடம் 14 வயது சிறுவன் ஒருவன் வந்தான். அவனை நான் உற்றுப் பார்த்தேன். உயரத்தில் சிறியவனாக உள்ள இந்த சிறுவனால் எப்படி பந்து வீச்முடியும் என்று கருதிய நான் உடனே அந்தப் பையனை பந்து வீச்சாளர் பயிற்சிக்குத் தேர்வு செய்ய முடியாது என்று நிராகரித்து விட்டேன். நான் நல்லதுதான் செய்திருக்கிறேன் என்று கருதுகிறேன்.
ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் டெண்டுல்கர் என்னிடம் வந்தார். அப்போது பேட்ஸ்மேனாக தன்னை கூறிக் கொண்டார். சரி எனது பவுலர்களை சமாளி பார்ப்போம் என்று கூறினேன்.
முதல் பந்தை பந்துவீச்சாளரின் தலைக்கு மேல் பறக்க விட்டார் சச்சின். அதைப் பார்த்த நான், இது ஏதோ ப்ளூக்கில் வந்தது. அடுத்த பந்தை அடி பார்ப்போம் என்றேன். அந்தப் பந்து பார்க்கைத் தாண்டி ஓடிப் போய் விட்டது. அந்த சிறுவனைப் பார்த்து நான் வியந்தேன்.
பிறகு தலைமைப் பயிற்சியாளராக இருந்த டி.ஏ.சேகரிடம், யார் இந்தப் பையன் என்றேன். அதற்கு அவர் சச்சின் என்றார். இந்தப் பையனைத்தான் நீங்கள் கடந்த ஆண்டு நிராகரித்தீர்கள் என்றார்.
அவர் சச்சின் என்று கூறியது எனக்கு சர்ச்சிங் என்று கேட்டது. பிறகு சேகரிடம் கூறினேன், எனது வார்த்தைகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பையன் ரன்களை மட்டுமே தேடிக் கொண்டிருக்கப் போவதில்லை. மேலும் மேலும் ரன்களைக் குவித்து தொடர்ந்து தேடிக் கொண்டிருப்பான் என்றேன்.
அதன் பிறகு நடந்ததுதான் அனைவருக்கும் தெரியுமே. இன்று வரை சச்சினின் ரன் தேடல் நிற்கவில்லை என்றார் லில்லி.
லில்லியால் 1987ம் ஆண்டு நிராகரிக்கப்பட்ட சச்சின் 1989ம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்றார். அதன் பிறகு அவரது அதிரடி இன்று வரை நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கிறது.

தகவல் உதவி} தட்ஸ் தமிழ்

டிஸ்கி} லில்லியின் சேவை நம் இந்திய அணிக்கு பெரிதும் உதவியது! அவரது இடத்தை நிரப்புவது யார்? சுவையான தகவல் கூறி விடைபெறும் அவரை வாழ்த்தி விடை கொடுப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!