உலை வைத்த உலவும் தவிக்க வைத்த மின்வெட்டும்!

உலை வைத்த உலவும் தவிக்க வைத்த மின்வெட்டும்!

தமிழ் நாட்டில் வசிப்பவர்கள் அதிலும் கிராமப் புறத்தில் வசிப்பவர்கள் என்றால் கட்டாயம் மின்வெட்டை அனுபவித்தே ஆகவேண்டும். பிறக்கும் போதே மின்சாரத்தை கண்டுபிடித்தோமா என்ன? ஆனாலும் மின்சாரம் அத்தியாவசிய தேவையாகிவிட்டது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மன்னர்கள் காலத்தில் இந்த மின்சாரம் இருந்ததா? சாலை வசதிகள் வாகன வசதிகள் இருந்ததா என்றால் இல்லை! ஆனாலும் அவர்கள் எவ்வளவு அற்புதமான ஆலயங்களையும் கட்டிடங்களையும் நிர்மானித்துள்ளார்கள். ஆனால் இன்று எவ்வளவோ வசதிகள் வந்தும் அந்த அளவுக்கு சிறப்பாக நம்மால் செயல்பட முடியவில்லைதான் இல்லையா?
   சரி விசயத்துக்கு வருவோம்! ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின் வெட்டு தளர்த்தப்பட்டு குறைக்கப்படும் என்றார் அம்மா! குறைக்கப்படும் என்றால் மின்வினியோகம் குறைக்கப்படும் என்று அர்த்தமா? இல்லை மின்சாரத்தையே கண்ணில் காட்டமாட்டார்களா என்று ஒன்றும் தெரியவில்லை! அம்மா புகழ் பாடும் நாளிதழ்களும் இந்த கூடுதல் மின்வெட்டு குறித்து ஒன்றும் கண்டு கொள்ள காணோம்! கூடங்குளம் உற்பத்தி துவங்க உள்ளது. மேட்டுர் அனல் மின்நிலையம் சீரமைக்கப்பட்டுவிட்டது. எண்ணூர் நிலையமும் சீரமைக்கப்பட்டு வருகிறது. காற்றாலைகளில் உபரியாக மின்சாரம் கிடைக்கிறது இருந்தாலும் கடந்த மூன்று நாட்களாக எங்கள் ஊரில் மின்வினியோகம் சீராக இல்லை! நான்கு மணிநேர மின்வெட்டு கடந்த இரண்டு நாட்களாக ஆறு மணி நேரம் ஏழு மணி நேரம் என்று அதிகரித்து. இன்று இந்த பதிவை எழுதும் போது காலையிலிருந்து அதாவது காலை ஆறுமணியிலிருந்து இப்போது மாலை 6.45வரை  எட்டரை மணி நேரம் மின் வெட்டு செய்யப்பட்டுள்ளது. ஆக 4மணி நேரமே பகலில் மின்சாரம் கிடைத்துள்ளது. இரவு என்னாகுமோ தெரியவில்லை!
      ஐயா நாட்டை ஆள்பவர்களே! நீங்கள் ஏசியில் அமர்ந்து உல்லாசமாக ஊர்கதை  பேசி அடுத்த ஊழலுக்கு வழி தேடலாம். கிராமத்தில் பகல் முழுக்க உழைத்து களைத்து உறங்க வரும் விவசாயிகளையும் விவசாய கூலி ஆள்களையும் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அவர்களுக்கு பெரிதாய் ஒன்றும் செய்ய வேண்டாம் குறைந்த பட்சம் இரவு நேர மின்வெட்டையாவது தவிருங்கள்! இல்லையெனில் அவர்கள் உங்களை தவிர்த்துவிடுவார்கள்!
    இந்த மின்வெட்டால் பதிவு எதையும் உருப்படியாக எழுதமுடியவில்லை! ஓய்வு நேரத்தில் கரண்ட் போய் விடுகிறது இன்வெர்ட்டரும் படுத்துவிடுகிறது. கிடைக்கும் சிறிது நேரத்தில் காப்பி பேஸ்ட் தான் செய்ய முடிகிறது. அதிலும் சினிமா சம்பந்தமான செய்திகளைத்தான் பிளாக் கூறும் நல்லுலகத்தினர் அதிகம் விரும்புவதால் காப்பியடிப்பதை தவிர்க்க முடியவில்லை! தமிழ் மணத்தினர் என்னை ஒதுக்கிவிட்டனர் தமிழ்10லும் எனது பதிவுகளை இணைக்க முடியவில்லை! இந்த சமயத்தில் உலவு திரட்டி வேறு நேற்று எனக்கு உலை வைத்தது.
  கரண்ட் போன கடுப்பில் இருந்த என்னை மேலும் வெறுப்பேற்றியது உலவு திரட்டி! என்னுடைய பிளாக்கில் அதன் வோட்டிங்க் விட்ஜெட்டையும் ஜாவாஸ்கிர்ப்டையும் இணைத்து இருந்தது தப்பாக போய்விட்டது.
   நேற்று பதிவிட்டபின் வியு பிளாக் கொடுத்தால் என் ப்ளாக் ஓபன் ஆகி உடனே உலவு டாட் காம் என்ற ஒரு பக்கம் திறந்தது. அதை மூடிவிட்டு எத்தனைமுறை கொடுத்தாலும் எனது பிளாக் ஓபன் ஆகவில்லை! ஒரு எரர் மேசேஜ் வேறு காண்பித்தது. உங்களுடையடொமைன் எக்ஸ்பைரி ஆகிவிட்டது என்று! ஒருவழியாய் இது உலவு டாட் காம் எக்ச்பைரி ஆகியதால் வந்தது என்று கண்டு கொண்டேன். பின்னர் எடிட் எச்டிஎமெல் சென்று உலவு விட்ஜெட்டை நீக்கினால் சரியாக போய்விடும் என்று அங்கே சென்றாலும் உலவு டாட் காம் தான் ஓபன் ஆகி நின்றது. குழம்பி என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன். பின்னர் பிளாக்கர் நண்பன் பிளாக் திறந்து ஏதாவது அவரிடம் உதவி கேட்போம் என்று அதை கிளிக்கினாலும் உலவுதான் ஓபன் ஆகியது.
   பின்னர்தான் புரிந்தது. உலவு விட்ஜெட்டை வைத்திருப்பவர்கள் எல்லாருக்கும் இந்த பிரச்சனை உள்ளது என்று. ஒரு வழியாக குரோம் பிரவுசரில் என்னுடைய பிளாக் எடிட் எச் டி எம் எல் திறந்தேன். அது பழைய பார்மெட்டில் ஓபன் ஆகியதால் தப்பித்தேன். பின்னர் உலவு விட்ஜெட் கோடை கண்டுபிடித்து நீக்கி சேவ் செய்தேன். ஒருவழியாக எனது பிளாக் ஓபன் ஆகியது. இதற்காக மாலை 3.30லிருந்து இரவு 7.30வரை இடையில் ஒரு அரைமணி நேரம் தவிர உழைக்கவேண்டியதாய் போயிற்று! மகா எரிச்சல் வேறு! ஐயா வலை திரட்டிகளே உங்களது வலை திரட்டிகளின் டொமைன் எக்ஸ்பரி ஆகாமல் ஸ்பை புகாமல் பார்த்து கொண்டு என்னை போன்ற எதுவும் தெரியாத பிளாக்கர்களை காப்பாற்றுங்கள். என் பதிவை படிப்பதே சிலபேர் அதையும் கெடுத்து விடாதீர்கள்!
   இந்த பதிவை நேற்று இரவு 7.30க்கு எழுதினேன். எழுதி முடித்தவுடன் கரண்ட் போனது. பின்னர் ரிலையன்ஸ் நெட் இணைப்பு கிடைக்கவில்லை! இன்றும் காலை முதல் பவர்கட்! இப்போதுதான் மின்சாரம் வந்தது! இப்படியே போனால் நாட்டில் மின்சாரவாரியம் என்று ஒன்று இருக்கிறதா என்ற சந்தேகம்தான் எழுகிறது! என்றுதான் தடையில்லா மின்சாரம் கிடைக்குமோ? மின்சாரம் இல்லாமல் ஜனங்கள் குடிதண்ணீருக்கு படும் அவஸ்தையை காண முடியவில்லை! ஆனால் ஆட்சியாளர்கள் ஒழுங்காக மின்சாரம் கிடைப்பதற்கான வழிகளை தேடாமல் ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக்கொண்டு பொழுதை போக்கி வருகிறார்கள்! சிவாஜிகணேசன் சரஸ்வதி சபதத்தில் ஒரு வசனம் கூறுவார்! நல்ல ஆட்சி! நல்ல அமைச்சர்! நல்ல ராணி! பாவம்மக்கள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!