விஸ்வரூபம் எடுத்த விஜய்! சரணாகதி அடைந்த வீரு!

விஸ்வரூபம் எடுத்த விஜய்! சரணாகதி அடைந்த வீரு!


நேற்று சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை பார்த்தவர்கள் யாரும் எளிதில் மறக்கமாட்டார்கள்! அப்படி ஒரு ஆட்டம் ஆடி விஸ்வரூபம் எடுத்து எதிரணியை ஒரே ஆளாய் வீழ்த்திவிட்டார் விஜய்.
    முரளிவிஜய் தமிழக அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன். கிளாசிக் பேட்ஸ்மேன் என்று அவரை வர்ணிப்பார்கள். சென்னை அணிக்கு தேர்வானபோது எல்லோருமே ஆச்சர்யப்பட்டார்கள் டி20 போட்டிக்கு இவர் ஒத்துவருவாரா என்பதுதான் அந்த ஆச்சர்யம். ரஞ்சி போட்டிகளில் பொறுமையாக ஆடி ரன் குவிப்பதற்கும் டி20க்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். இவர் முதல் ஐபிஎல் தொடரில் அவ்வளவாக அணியில் சேர்க்க வில்லை. 2010 ஐபிஎல் தொடர்தான் இவரை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
    அந்த தொடரில் சென்னை அணியின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்தார். அதன் பின் இந்திய அணியிலும் இடம் பிடித்தார். ஒருசதம் கூட அடித்தார். ஆனால் இவரை நிலையாக அணியில் நீடிக்க விடவில்லை தேர்வாளர்கள். கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் பெரிதாக பேசப்பட்டாலும் மோசமான பார்ம் காரணமாக பெரிதாக ஒன்றும் சாதிக்கவில்லை.
   இந்த தொடரின் ஆரம்பத்திலும் இவர் சொதப்பலாகவே ஆடிவந்தார். நிறைய பந்துகளை வீணடித்தார். குறைவான ரன்களையே எடுத்துவந்தார். இவரை நீக்கவேண்டும் என்று ரசிகர்கள் கோபப்பட்டனர். நான் கூட நேற்று இவருக்குப்பதில் அனிருத்தாவை சேர்த்திருக்கலாம் என்று எழுதியிருந்தேன். மிகப்பெரிய ப்ளேயராக இருந்தாலும் சொதப்பினால் மாற்றுவீரரை புகுத்தவேண்டும் என்பது என் கருத்து. ஆனால் தோனியின் கருத்து வேறு விதமானது. அவர் வீரர்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்து இருக்கிறார். அவர் வைத்த நம்பிக்கையை நிஜமாக்கி டெல்லியின் கனவை பொய்யாக்கி சென்னையை பைனலுக்கு அழைத்து சென்று இருக்கிறார் முரளி விஜய்.
    ஐபிஎல் தொடரில் இரண்டு சதம் அடித்த முதல் இந்தியவீரர் என்ற சாதனையோடு இந்ததொடரில் அதிவேகமாக அடிக்கப்பட்ட சதம் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் விஜய். நேற்று அவரது பொன்னாளாக அமைந்து விட்டது. தொடக்கம் முதலே பவுண்டரிகளாக விளாசிய அவர் சேவாக்கின் பந்தில் தூக்கி அடிக்கும் போது ரோஸ் டெய்லர் கேட்ச் செய்தார். அதிருஷ்ட தேவதை அவர் பக்கமிருக்க டீவி ரீப்ளேயில் டெய்லர் எல்லை கோட்டை மிதித்தது தெரியவந்தது. கேட்ச் சிக்ஸ் ஆனது. அந்த ஓவரில் மட்டும் 21 ரன்கள் குவிக்கப்பட நொந்து போனார் சேவக்.
    விஜய் பொதுவாகவே சுழல் பந்துகளை சிறப்பாக ஆடக்கூடியவர். இவருக்கு எதிராக சுழல் பந்துவீச்சாளர்களையே சேவாக் பயன் படுத்தியது அவருக்கு மிகவும் வசதியாக போனது. இந்த தொடரில் இரண்டாவது முறையாக 50 ரன்களை கடந்த அவர்51 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். இவரது ரன் தாகம் இறுதி வரை குறையாமல் இருக்கவே சென்னை அணி 222ரன்களை அள்ள முடிந்தது. இவருக்கு நல்ல ஒத்துழைப்பு தந்த பிராவோ தோனி, ரெய்னா, ஹசியும் விரைவாக ரன்கள் குவித்தனர்.
     சிறப்பாக ஆடிய விஜய் 113 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். மீண்டும் பீல்டிங் செய்யவந்த போதும் கலக்கினார். சிறப்பாக ஆடிய வார்னரை மிக அருமையான முறையில் கேட்ச் செய்து அவுட்டாக்கி அசத்தினார். மொத்தத்தில் இழந்த பார்மை மீட்ட அவர் சென்னை அணிக்கு கோப்பை வெல்லும் வாய்ப்பினை உறுதியாக்கிவிட்டார். பொதுவாகவே நாக் அவுட் சுற்றுக்களில் சென்னை சிறப்பாக ஆடும். அது கடந்த இரண்டு போட்டிகளில் உறுதியாகிவிட்டது. இதே உத்வேகத்துடன் ஆடினால் கோப்பை சென்னைக்குத்தான்.மொத்தத்தில் இவரது விஸ்வரூபத்தின் முன் வீரு சரணாகதி அடைய சென்னை எளிதாக  வென்றது!
   கம்பீர் அணிக்கு இப்போதே வயிற்றை கலக்க ஆரம்பித்திருக்கும் என்றுநினைக்கிறேன். சென்னையின் அதிர்ஷ்ட வாய்ப்பு யாராலும் நம்ப முடியாத ஒன்று மூன்று அணிகளின் அதிர்ச்சி தோல்வி காரணமாக உள்ளே நுழைந்த அணி இறுதி போட்டியில் கோப்பை வென்றால் இந்த சாதனை யாராலும் முறியடிக்க முடியாததாக இருக்கும். தோனியின் அதிருஷ்டம் தொடரட்டும். கோப்பை வெல்லட்டும் சென்னை அணி.


 சில துளிகள்!


நடப்பு .பி.எல்.5வது அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணி என்ற பெருமை சென்னை சூப்பர்கிங்ஸூக்கு நேற்றைய போட்டியின் மூலம் கிடைத்திருக்கிறது.

-
.பி.எல்.5வது தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக கெய்லை அடுத்து முரளி விஜய்தான் சதமடித்திருக்கிறார். டெல்லிக்கு எதிராக கெய்ல் 128 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். நேற்றைய போட்டியில் 113 ரன்கள் எடுத்திருந்தார் முரளி விஜய்.

-
நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றதன் மூலம் .பி.எல்.போட்டிகளில் 5-வது முறையாக அவர் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றிருக்கிறார்.

-
ரோஸ் டெய்லரின் பந்தை கேட்ச் பிடித்ததன் மூலம் சுரேய் ரெய்னா .பி.எல். போட்டிகளில் 42 கேட்சுகளைப் பிடித்திருக்கிறார்.

-
சென்னை அணி எடுத்த 222 ரன்களே இந்த ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் எடுத்த 215 ரன்களே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.

-
விஜய் நேற்று அடித்த சதமே அதிகவேக சதமாகும். 51 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் சதம் கண்டார். முன்னதாக ரோஹித் சர்மா, டேவிட் வார்னர் (52 பந்துகளில்) அடித்த சதங்களே அதிவேக சதமாக இருந்தது.

-
நடப்பு .பி.எல். போட்டியில் 12 ஆட்டங்களில் விளையாடிய விஜய், அரைசதம்கூட அடிக்கவில்லை. ஆனால் தனது 13-வது ஆட்டத்தில் சதமடித்து சென்னைக்கு அபார வெற்றியைப் பெற்றுதந்துள்ளார். நடப்பு ஐபிஎல் போட்டியில் அடிக்கப்பட்ட 6-வது சதம் இது. மேலும் நடப்புத் தொடரில் தனி ஒரு வீரர் அடித்த 2-வது அதிகபட்ச ஸ்கோரும் இதுதான்.

-
ஐபிஎல் போட்டிகளில் விஜய் அடித்த 2-வது சதம் இது. இரு சதம் அடித்த ஒரே இந்திய வீரரும் அவர்தான்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்து கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!



Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!