டேய் குண்டு பூசணி! பாப்பா மலர்!

டேய் குண்டு பூசணி!

பள்ளிக்குள் மணி நுழைந்ததுமே மாணவர்கள் டேய் குண்டு பூசணி வருதுடா! வழி விடுங்கடா! இல்லேன்னா இடிச்சி நசுக்கிடும்டா! என்று ஆளுக்கு ஆள் கேலி பேசி சிரித்தார்கள். மணிக்கு அவமானமாக இருந்தது.வாய் பேசாமல் தனது இருக்கையில் போய் அமர்ந்தான். டேய் பார்த்து உட்காருடா! பெஞ்ச் உடைஞ்சிடப் போவுது ஒருவன் குரல் கொடுக்க மற்றவர்கள் ‘ஓ’வென்று கூச்சலிட்டனர். மணி கூசிப் போனான். அப்படியே தலை கவிழ்ந்து அமர்ந்து கொண்டான்.
    மணி ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான்.அவனது உடல் மிகவும் பருத்து குண்டாக இருப்பான்.வகுப்பிலேயே அவன் தான் குண்டு.குண்டு நபர்கள் மற்றவர்கள் கேலிக்கு ஆளாவது இயல்புதானே! அவ்வழியில் உடன் படிக்கும் மாணவர்கள் அவனை கிண்டல் செய்து மகிழ்ந்தனர். ஆனால் மணிக்குத் தான் மிகவும் வருத்தமாக இருந்தது. இறைவன் ஏன் நம்மை இப்படி படைத்தானோ என்று வருந்துவான்.
   மற்ற மாணவர்களின் கிண்டலை கேட்டு கேட்டு மணிக்கு தன் மீதே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. ச்சே குண்டாக பிறந்துவிட்டோமே! அனைவரின் கேலிக்குரிய பொருளாகிவிட்டோமே! என்ன பாவம் செய்தேனோ இப்படி ஒரு பிறப்பு எடுத்துவிட்டேன் என்று தன்னைத்தானே நொந்து கொள்வான்.நாளுக்கு நாள் பிள்ளைகளின் கிண்டல் அதிகமாக உலகை வெறுத்து உயிரை விட துணிந்துவிட்டான் மணி!
    பள்ளிவிட்டதும் வீட்டிற்கு போகாமல் கடற்கரைக்கு வந்தான் மணி.கடல் அலைகளை போல அவனது மனமும் ஆர்பரித்துக் கொண்டு இருந்தது.மற்றவர்கள் கேலிசெய்ய தான் ஒரு இழி பிறப்பு ஆகிவிட்டோமே இப்படி வாழ்வதற்கு சாவதே மேல் ஏ கடலே என்னை விழுங்கி விடு என்று கடலுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தான். பெரிய அலை ஒன்று அவனை மூழ்கடித்தது. ஆ ! அம்மா! என்று மூழ்கி போனான் மணி.
    இறந்து போக நினைத்த மணி கடலில் குதித்ததும் அலையைக் கண்டு பயந்ததையும் பார்த்துக் கொண்டிருந்த அருகில் குளித்துக் கொண்டிருந்த ஒருவர் அவனது முடியைப் பற்றி இழுத்து வந்து கரையில் போட்டார். அதற்குள் நிறைய தண்ணீரை குடித்து இருந்தான் மணி. அவர் மணியின் வயிற்றில் கைவைத்து அழுத்தி நீரை வெளியேற்றி முதலுதவி சிகிச்சைகள்செய்ய கண்விழித்தான் மணி.
    ஐயா என்னை ஏன் காப்பாற்றினீர்கள்? என்று அழுதபடி கேட்டான் மணி. தம்பி! சாகும்படி உனக்கு வாழ்க்கையில் என்ன கஷ்டம் நேர்ந்து விட்டது. இறைவன் கொடுத்த இந்த அருமையான உயிரை போக்கிக் கொள்ள உனக்கு இந்த சிறுவயதில் எப்படி தைரியம் வந்தது என்று கேட்டார் காப்பாற்றியவர்.

   மணி நடந்ததை அழுதபடி கூறினான். பிறர் கேலி பேசும் கேலிப்பொருள் ஆகிவிட்டேன் நான்! அதனால்தான் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தேன் என்றான்.அதைக் கேட்ட அவர் சிரித்தார். தம்பி உன் செயல் வேடிக்கையாக உள்ளது. குண்டாக இருந்தால் கிண்டல் செய்யத் தான் செய்வார்கள் இதற்காக உயிரை மாய்த்துக் கொள்ளலாமா?

   உலகில் உள்ள குண்டான மனிதர்கள் எல்லாம் உன்னைப்போல முடிவெடுத்தால் உலகில் குண்டர்களே இருக்க மாட்டார்கள். இப்படி எதிர்மறையாக சிந்திப்பதை தவிர்க்க வேண்டும்.உன்னை விட பெரிய பெரிய குண்டு மனிதர்கள் உலகில் சந்தோஷமாக வாழ்கின்றனர்.நாம் தெய்வமாக போற்றும் பிள்ளையார் கூட குண்டு மனிதர்தான். மகாபாரதத்தில் வரும் பீமனும் குண்டு மனிதன் தான்.பிறரை சிரிக்க வைக்க உன் குண்டு உருவம் பயன் படுகிறது.நம்மால் நாலு பேர் சந்தோஷம் அடைகிறார்கள் என்று எண்ணிக் கொள்! நம்மைப் பார்த்து நாலு பேர் சிரிக்கிறார்கள் என்று எண்ணாதே! உன்னால் இந்த குண்டு உருவத்தை குறைக்க முடியும்! அதற்கான வழிமுறைகளை செய்! தினமும் உடற்பயிற்சி செய்! தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்! வீணாக இப்படி உன் உயிரை மாய்த்துக் கொள்ளும் செயலை செய்யாதே என்று அறிவுரை கூறினார்.
    மணி அவரது காலில் விழுந்தான்! ஐயா எனக்கு புத்தி வந்தது! அவசரப்பட்டு அருமையான வாழ்க்கையை இழக்க இருந்தேன். இனி யார் கேலி செய்தாலும் வருந்தமாட்டேன். உடலை குறைக்க உடற்பயிற்சிகள் செய்வேன்! உடல் குறையாவிட்டாலும் உயிரைவிட மாட்டேன்.குறையை நிறையாக்கி மற்றவர்களை மகிழ்விப்பேன் என்றான் மணி.

   மணியின் முடிவு மாறியது கண்டு மகிழ்ந்து விடை பெற்றார் அவனை காப்பாற்றியவர். மணி இப்போதெல்லாம் தன் குண்டு உருவம் கண்டு வருந்துவது இல்லை!

உங்களுக்குத் தெரியுமா?


இந்தியாவின் முதல் ராணுவப் புரட்சி 1808 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் நடந்தது.

நாய்களுக்கு வியர்வை அதன் நாக்கு வழியே வருகிறது.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்து கமெண்ட் செய்து ஊக்குவிக்கலாமே!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!