தென்னை மரம் ஏற நவீன கருவி: கோவை இளைஞருக்கு அங்கீகாரம்

பெ.நா.பாளையம்:தென்னை மரம் ஏற, நவீன கருவி கண்டுபிடித்த, கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் இளைஞருக்கு, தனது படைப்பை டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த கண்காட்சியில், ஜனாதிபதி முன் பார்வைக்கு வைக்கும், வாய்ப்பு கிடைத்தது.

தென்னை மரம் ஏற, புதியதாக மேம்படுத்தப்பட்ட கருவியை, கோவை நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வெங்கட் என்ற ரங்கநாதன், கடந்த 2008ம் ஆண்டு வடிவமைத்தார். இக்கருவியின் வாயிலாக, மிக உயரமான தென்னை மரத்திலும், விரைவில் ஏற முடியும்.

காயம் ஏற்படாது:தென்னை மரம் ஏற, ஏற்கனவே பல வடிவங்களில் கருவிகள் உள்ளன. ஆனாலும், அதைப் பயன்படுத்துவதில், நடைமுறைச் சிக்கல் ஏற்பட்டன. உதாரணமாக, தென்னை மரம் ஏறும் கருவியில் பல் சக்கரம் பயன்படுத்தப்பட்டதால், மரங்களின் மேல்பகுதியில், சேதம் ஏற்பட்டது. நாளடைவில், மரங்களுக்கு பாதிப்பு உண்டானது. அடிப்பகுதியில் அகலமாக உள்ள தென்னை மரங்களில், அது போன்ற கருவிகளை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. மரத்தின் சுற்றளவுக்கு ஏற்ற வகையில் மரம் ஏறும் கருவியை நீட்டிக்க செய்யும் வசதியும் இல்லை. ஆனால், தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள இக்கருவியால், மரங்களுக்கு காயம் ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும், மரத்தின் சுற்றளவை பொறுத்து, 15 அங்குலம் முதல் 50 அங்குலம் வரை, கருவியை அகலப்படுத்த முடியும்.

வெங்கட் கூறியதாவது: தற்போது, தென்னை மரங்களில் ஏறி, தேங்காய்களை பறிக்க ஆட்கள் கிடைப்பதில்லை. தேவையான நேரங்களில், தேவையான ஆட்கள் கிடைக்காத காரணத்தால், விவசாயத்தின் பலன், மக்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை. வீட்டுத் தோட்டங்களில், தென்னை மரம் வைத்துள்ளவர்கள் மற்றும் 50 முதல் 100 தென்னை மரம் வைத்துள்ளவர்களுக்கு, இக்கருவி, நல்ல பயனை கொடுக்கும். இக்கருவியை, கடந்த 2008ம் ஆண்டு வடிவமைக்கப்பட்டவுடன், "தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, மதுரையில் உள்ள "விவேகானந்தன் சேவா' என்ற தொண்டு நிறுவனம், இக்கருவியை மேம்படுத்த, "நபார்டு' வங்கி நிதி உதவி பெற்று தந்தது. தற்போது, இக்கருவி, முற்றிலும், மேம்படுத்தப்பட்ட நவீன கருவியாக உருமாற்றம், பெற்றுள்ளது. இக்கருவிக்கு, பெங்களூரூ விவசாய பல்கலை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இக்கருவியின் உதவியால் தற்போது, இந்தியா மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் தென்னை, பனை மரங்களில் காய்களை பறிக்கும் பணி, நடந்து வருகிறது.

ஊக்குவிப்பு:குஜராத் மாநிலம், ஆமதாபாத் நகரில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் தேசிய கண்டுபிடிப்பு ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது, நாடு முழுவதும் அடிப்படை கண்டுபிடிப்பாளர்களை கண்டறிந்து, ஊக்குவித்து வருகிறது. இவ்வமைப்பு, சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள 39 ஆயிரம் கண்டுபிடிப்பாளர்களில் விவசாயம், தொழில்நுட்பம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ், 45 கண்டுபிடிப்பாளர்களை தேர்வு செய்தது. அவர்களின் கண்டுபிடிப்புகள் தொடர்பான கண்காட்சியை, டில்லி ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் நடத்தியது. இதில், ஆசிய கண்டத்தில் உள்ள, முக்கிய அறிவியல் கண்டுபிடிப்பாளர்கள் கலந்து கொண்டனர். இதை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் பார்வையிட்டார். இதில், எனது தென்னை மரம் ஏறும் கருவியான "டிரீ வாக்கர்' க்கு 28வது இடம் கிடைத்தது. இதை, இந்திய அரசு எனக்கு வழங்கிய மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன். எனது கண்டுபிடிப்புக்கு சான்றிதழ், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் காப்புரிமை (பேட்டர்ன் ரைட்ஸ்) ஆகியவற்றை இந்திய அரசு வழங்கியது.அமெரிக்காவில் எனது கருவி போல, மரம் ஏறும் கருவியை உருவாக்கும் ஏழு நிறுவனங்கள் உள்ளன. இது போன்ற கருவி, காஷ்மீரில் "போல் கிளம்பர்' என்ற பெயரில் உள்ளது. கேரளாவில், அப்பச்சன் என்பவர் இது போன்ற கருவியை உருவாக்கினார். அவர், இப்போது உயிருடன் இல்லை. அதில், சில குறைபாடுகள் இருந்ததால், அதை திருத்தி, புதிய கருவியை உருவாக்க, தேசிய கண்டுபிடிப்பு ஆணையம், எனக்கு அறிவுரை வழங்கியுள்ளது.இக்கருவியை கொண்டு, சில்வர் ஓக், தேக்கு போன்ற மரங்களில் அமர்ந்தவாறு, கிளைகளை வெட்டலாம். இக்கருவி 11 கி.கி., எடை கொண்டது. 100 கி.கி., வரையுள்ள எடையை தாங்கக் கூடியது. ஏழு ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு, வெங்கட் கூறினார்.

டிஸ்கி} இது போன்ற இளைஞர்களை அரசு ஊக்குவித்து கவுரவிக்க வேண்டும். பெற்றோர்களும் உதவுதல் வேண்டும். அப்போதுதான் புதிய கண்டுபிடிப்புகள் நிறைய தோன்றும். வாழ்த்துக்கள் வெங்கட்!

தகவல் உதவி} தினமலர்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்குவிக்கலாமே!

Comments

  1. வணக்கம் பாஸ் எப்படி சுகம்?
    அருமையான கண்டுபிடிப்பு அவருக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. இத்தனை நாளாய் எங்கிருந்தாய் நண்பா! உங்கள் பாணியில் கிரிக்கெட் அலசல் படித்து நாளாகிவிட்டது! மீண்ண்டும் தொடருங்களேன்!

      Delete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!