கண்ணிருந்தும்குருடர்களாய்.....

கண்ணிருந்தும்குருடர்களாய்.....

நான் அவளை பலமுறை இதே பேருந்தில் பார்த்திருக்கின்றேன்.அவள் அப்படியொரு அழகு.இருபதுமுதல் எழுபது வரை அவளை ஒருமுறையேனும் திரும்பிப்பார்க்கவைக்கும் அழகு.
     அவள் எப்போதும் பஸ்ஸின் முதல் இருக்கையில் அமர்ந்து கொண்டுவருவாள் அது மாற்றுத் திறனாளிகளுக்கான இருக்கை. எத்தனயோ இருக்கை காலியாக இருக்க அவள் ஏன் அதில் அமர வேண்டும் பார்த்தால் படித்தவள் போலத் தெரிகிறது. அதுவும் அலங்காரத்திற்கு குறைவில்லை. மடிப்பு கலையாத புடவையும் பொருத்தமான ப்ளவுஸும் அணிந்து “பை”பின்னல் போட்டு “பர்ப்யும்”மின் தூக்கலான வாசனை கண்களுக்கு கூட கூலிங் கிளாஸ் ,டம்பப்பை,சகிதமாக சர்வலங்கார பூஷிதையாக செல்லும் இவள் நிச்சயம் படிக்காதவளாக இருக்கமாட்டாள்.
       பின் ஏன் ஊனமுற்றோர் இருக்கையில் அமரவேண்டும்?அழகிருக்கும் இடத்தில் அறிவு இருக்காது என்பார்களேஅது சரியாகத்தான் உள்ளது.
      அன்று பேருந்தில் வழக்கதைவிட கூடுதலான நெரிசல்,நான் நிற்க இடமில்லாமல் தவிக்க வழக்கம்போல் அவள் முதலிருக்கையில் கூலிங்கிளாஸோடு அமர்த்தலான பார்வையில் அமர்ந்திருக்க அவள் அருகிலேயே கால் ஊனமுற்ற ஒரு பெண் நிற்கமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருந்தாள்.அதைப்பார்த்து எனக்கு எரிச்சலாக வந்தது. அவளுடய இருக்கையை பறித்துகொண்டு வேடிக்கைப்பார்க்கிறாளோ? இந்த நடத்துனரும் சும்மா இருக்கிறாரே? அவர் வேண்டுமானால் சும்மாஇருக்கட்டும் என்னால் இருக்க முடியாது.நான் அவளை நோக்கி பேச ஆரம்பித்தேன்.
     ஏம்மா நீ படிச்ச பொண்ணுதானே இது மாற்றுத் திறனாளிகள் இருக்கை.படிக்கலியா? இல்ல கண்ணு தெரியிலயா?உன்பக்கத்துல ஒரு காலில்லா பொண்ணு நிக்க முடியாம தவிக்குது அது உன் பார்வையில படவே இல்லியா? கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாம உக்கார்ந்து இருக்கியே? என்று விளாசினேன்.
   ஐ யாம் சாரி சார் நான் நீங்க சொன்னமாதிரியே குருடு தான் அதான் என்க்குத் தெரியாம போச்சு. என்றபடி தனது வாக்கிங் ஸ்டிக்கை தடவி எடுத்தபடி எழுந்திருக்க திடுக்கிட்டு சாரிம்மா சாரி... நீ உக்காரும்மா என்றேன்.
இல்ல சார் எனக்கு கண்தான் இல்ல ஆனா அந்த பெண்ணுக்கு காலில்லை. கண் இல்லாதவள் நிற்கலாம் காலில்லாதவங்க நிற்க முடியாதில்லையா? நீ உக்காரும்மா என்று இடம் விட்டாள்.
     அழகை கொடுத்த ஆண்டவன் அதை ரசிக்க அவளுக்கு கண்ணைக் கொடுக்க வில்லையே கண்ணிருந்தும் குருடனாய் மாறி விட்டேனே? அவசர பட்டு கொட்டிய வார்த்தைகளைஅள்ள முடியாது தலை கவிழ்ந்தேன்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே!

குறிப்பு : இக்கதை ஒரு மீள்பதிவு!

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!