சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தும் மலைவாழ் மக்கள்

உடுமலை:மின்தட்டுப்பாட்டினால், நகரம் மற்றும் கிராமப்புற மக்கள் அவதிப்படும் நிலையில், மலைவாழ் மக்கள் மின்சாரத்தை நம்பாமல், சோலார் சிஸ்டத்தை பயன்படுத்தி தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவி வரும் மின்தட்டுப்பாட்டினால், மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மின்சாரம் முழுமையாக கிடைக்காத நிலையில், தொழில்களும் பாதிக்கப்பட்டு வருவதாக தொழில் அமைப்புகளும் தெரிவித்து வருகின்றன.
மின்தட்டுப்பாட்டு காரணமாக தினசரி குறிப்பிட்ட நேரங்கள் மின்தடையும் நடைமுறையில் உள்ளது. மின்சாரம் தட்டுப்பாட்டினால், பொதுமக்கள் அவதிப்படுவதை தவிர்க்க தமிழக அரசும் மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கிராமம் மற்றும் நகர்ப்புற மக்கள் தங்கள் பகுதியில், அவ்வப்போது மின்சாரம் தடைபடுவதால், அதற்கு மாற்று ஏற்பாடாக யு.பி.எஸ்., இன்வெர்ட்டர், ஜெனரேட்டர் என நாடிச் செல்லும் நிலை உள்ளது.
மின்தடையால் ஒரு பக்கம் மக்கள் அவதிப்படும் நிலையில், மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் மக்களோ எவ்வித கவலையுமின்றி சோலார் சிஸ்டம் பயன்படுத்தி தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

இதில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தளிஞ்சி மலைவாழ் மக்கள் வனத்துறை மூலம் வழங்கப்பட்ட சோலார் சிஸ்டம் மூலம் தங்களது அன்றாட தேவைகளை மேற்கொள்கின்றனர். இப்பகுதி மக்கள் சோலார் சிஸ்டத்தினை முறையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருமூர்த்தி மலைப்பகுதி மக்களும் மின்தட்டுப்பாட்டை போக்க சோலார் சிஸ்டத்தை நாட துவங்கியுள்ளனர். இங்கு அமணலிங்கேஸ்வரர் கோவில் அருகே கடை வைத்துள்ள மலைவாழ் பகுதியை சேர்ந்த கண்ணப்பன் என்பவர் சோலார் சிஸ்டம் மூலம் ரேடியோ கேட்க பயன்படுத்தி வருகிறார். மற்ற பயன்பாட்டிற்கும் சோலார் சிஸ்டம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

"மின் இணைப்பு இல்லாத நிலையில், சோலார் சிஸ்டம் கைகொடுக்கிறது; சூரிய ஒளியில் இயங்குவதால் தடையின்றி மின் இணைப்பு கிடைக்கிறது. தற்போது கடையில், வேலை செய்யும் போதுபணிப்பளு தெரியாமல் இருக்க ரேடியோவை இயக்க பயன்படுத்தி வருகிறேன். இயற்கையாக சூரிய ஒளியிலிருந்து மின் உற்பத்தி செய்யப்படுவதால், சோலார் சிஸ்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது,' என கண்ணப்பன் கூறினார். 


தகவல் உதவி : தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!