சென்ரியுவாய் திருக்குறள்கள் 16 -20

தமிழ் தோட்டம் இணையதளத்தில்  நானும் கவிஞர் கவியருவி ம. ரமேஷ், ஹிஷாலி, வினிதா போன்றோர் திருக்குறளை மேலும் எளிமை படுத்தும் நோக்கில் சென்ரியூக்கள் எழுதி வருகிறோம். சென்ரியு  பற்றிய விளக்கம் நமது வலைப்பூவில் ஏற்கனவே தந்துள்ளோம். ஏற்கனவே 15குறள்களுக்கு சென்ரியூக்கள் பதிந்து இருந்தோம். இன்று 16லிருந்து 20வரை பதிவிட்டுள்ளேன். இதற்கு வறவேற்பு குறைவாக தெரிந்தாலும் தொடர்ந்து பதிவிட உள்ளேன்! படிக்கும் வாசகர்கள் கண்டிப்பாக பின்னூட்டம் தந்து உதவினால் நன்றாக இருக்கும். கருத்துக்களை பதிவதுடன் திரட்டிகளில் வாக்களித்து பிரபல படுத்துங்கள் நண்பர்களே! 
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
கலைஞர் உரை:
விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலன்றி மண்ணில் பசும்புல் தலை காண்பது அரிதான ஒன்றாகும்.
மு. உரை:
வானத்திலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகத்தில் ஓரறிவுயிராகிய பசும்புல்லின் தலையையும் காண முடியாது.
சாலமன் பாப்பையா உரை:
மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.

தளிரின் சென்ரியுவாய் திருக்குறள்16

மொட்டையான பூமி
கொட்டவில்லை
மழை!

மழை பொய்த்தமையால் பூமியில் புல் முளைக்காது மொட்டையாக காட்சி தருகிறது.

ஒளிந்த புற்கள்
தேடிய பசுக்கள்
பெய்யா மழை!

மழையில்லாமையால் மறைந்த புற்களை பசுக்கள் தேடின.


குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
கலைஞர் உரை:
ஆவியான கடல்நீர் மேகமாகி அந்தக் கடலில் மழையாகப் பெய்தால்தான் கடல்கூட வற்றாமல் இருக்கும். மனித சமுதாயத்திலிருந்து புகழுடன் உயர்ந்தவர்களும் அந்தச் சமுதாயத்திற்கே பயன்பட்டால்தான் அந்தச் சமுதாயம் வாழும்.
மு. உரை:
மேகம் கடலிலிருந்து நீரைக் கொண்டு அதனிடத்திலேயே பெய்யாமல் விடுமானால், பெரிய கடலும் தன் வளம் குன்றிப் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

தளிர் சென்ரியூவாய் திருக்குறள்17

மாரி மாறினால்
மாநிலமும்
சுருங்கும்

மழை தன்னியல்பை மாற்றிக் கொண்டால் மாநிலமும் வளம் குன்றும்.

குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
கலைஞர் உரை:
வானமே பொய்த்து விடும்போது, அதன்பின்னர் அந்த வானத்தில் வாழ்வதாகச் சொல்லப்படுகிறவர்களுக்கு விழாக்கள் ஏது?வழிபாடுதான் ஏது?.
மு. உரை:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.
சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.

தளிர் சென்ரியுவாய் திருக்குறள் 18

மறைந்து போன விழாக்கள்
திருப்பிக் கொடுத்தது
மழை!

மழையின்றி நின்று போன விழாக்கள் மழை வந்தது தொடங்கின

பொய்த்த மழையில்
மாய்ந்தன
பூஜைகளும் விழாக்களும்!

மழையின்றி போனதால் பூசைகளும் விழாக்களும் நடை பெற வில்லை!
குறள் 19:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்
கலைஞர் உரை:
இப்பேருலகில் மழை பொய்த்து விடுமானால் அது, பிறர் பொருட்டுச் செய்யும் தானத்திற்கும், தன்பொருட்டு மேற்கொள்ளும் நோன்புக்கும் தடங்கலாகும்.
மு. உரை:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.

தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 19

தங்க இடமில்லை
தானம் தவத்திற்கு
பெய்யா மழை!

மழை பெய்யாவிடில் தானமும் தவமும் மறையும்.

ஈரமின்றி போனதால்
ஈகை மறைந்து
போனது

மழையில்லாததால் மக்களிடம் ஈகை குறைந்து போனது


குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
கலைஞர் உரை:
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
மு. உரை:
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும்.
சாலமன் பாப்பையா உரை:
எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.

தளிர் சென்ரியூவாய் திருக்குறள் 20

அழுக்கான உலகம்
விழக் காணோம்
மழை!

மழையின்றி உலகமே அழுக்கானது.

வறண்ட மனது
பிரண்ட மழை
மிரண்ட உலகு!

வறண்டு போன மனதை உடைய மக்களால் மழை பிரண்டு நீரின்றி உலகம் மிரண்டது.

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!

Comments

  1. நல்ல முயற்சி தளிர்...
    சில கவிதைகள் பாராட்டும்படியாக வந்துள்ளன...
    சிலவற்றில் இன்னும் மெருகேற்றலாம்...

    ReplyDelete
  2. //மறைந்து போன விழாக்கள்
    திருப்பிக் கொடுத்தது
    மழை!//

    //ஒளிந்த புற்கள்
    தேடிய பசுக்கள்
    பெய்யா மழை!//

    இரண்டும் தரத்தின் உச்சம்.

    ReplyDelete
  3. //வறண்ட மனது
    பிரண்ட மழை
    மிரண்ட உலகு!//

    நல்ல Rhyming....

    ReplyDelete
  4. வறண்ட மனது
    பிரண்ட மழை
    மிரண்ட உலகு!

    அருமையான பகிர்வுகல்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் அனைவருக்கும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!