லஞ்சமா வாங்குறே? பாப்பா மலர்


லஞ்சமா வாங்குறே?

ஆபிஸில் இருந்து வந்ததும்  வராததுமாய் தனபால் கோபத்தில் வானத்திற்கும் பூமிக்குமாய் எகிறிக் கொண்டிருந்தார். கோபத்திற்கு காரணம் அவர் மகன் ரமேஷைப் பற்றி ஆசிரியர் சொன்ன புகார்தான் காரணம். வரட்டும் அவனை இன்று ரெண்டில் ஒன்று பார்த்துவிடுகிறேன் என்று கறுவிக் கொண்டிருந்தார் அவர்.
   அப்படி என்ன புகார் ரமேஷ் மீது அவனுடைய ஆசிரியர் சொன்னார் என்று கேட்கிறீர்களா? ரமேஷ் லஞ்சம் வாங்குகிறானாம்! என்ன ரமேஷ் படிக்கும் சிறுவன் தானே எப்படி லஞ்சம் வாங்குவான்? அவன் என்ன அதிகாரியா இல்லை அரசியல் வாதியா என்று சந்தேகப் படுகிறீர்களா? உங்கள் சந்தேகம் நியாயம் தான் ஆனால் ரமேஷ் நிச்சயம் லஞ்சம் வாங்குகிறான் என்று அவனுடைய ஆசிரியரே சொல்லிவிட்டார். எப்படி?
   ரமேஷ் தான் வகுப்பு லீடராம். சக மாணவர்கள் தவறு செய்தால் ஆசிரியரிடம் மாட்டி விடாமல் இருக்கவும் அவர்களை தண்டிக்காமல் இருக்கவும் ஒரு சிறு தொகையை தரவேண்டுமாம். கேட்ட தொகை கிடைத்தால் விட்டு விடுவானாம். தர மறுப்பவர்களை தண்டனை பெற்றுத் தருவானாம். இது இப்போதுதான் வகுப்பாசிரியருக்குத் தெரியவந்து தனபாலை சந்தித்து பையனை கொஞ்சம் கண்காணியுங்கள் என்று சொன்னார்.
    தனபால் தாலுகா ஆபிஸில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர். நல்ல சம்பளம். தினம் ரமேஷிற்கு செலவிற்கு காசு தராமல் விட்டதே இல்லை. போதாக் குறைக்கு அவன் கேட்கும் முன்னறே அவனுக்குத் தேவையான எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்து விடுவார் தனபால்.ஒரு குறையில்லாமல் வளர்க்க வேண்டும் என்று வளர்த்தால் மற்றவர்கள் அவனைப் பற்றி குறை கூறுமளவுக்கு நடந்துகொள்கிறானே வரட்டும் பயல் இன்று அவனை விளாசுகிற விளாசலில் இனி யாரிடமும் கை நீட்ட மாட்டான். என்று கொந்தளித்துக் கொண்டிருந்தார் தனபால்.
    ரமேஷ் கிரிக்கெட் மட்டையை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தான். ஏய் நில்லுடா! கத்தினார் தனபால். ரமேஷ் பயப்படவில்லை! அப்படியே நின்றான். ஏம்ப்பா! என்னாச்சு எதுக்கு இவ்வளவு கோபப்படறீங்க என்றான். தொரை என்னையே கேள்வி கேக்கறாறே? இதுக்கு பதில் சொல்லிட்டு உள்ள வா!தொரை லஞ்சம் வாங்கறீங்களாமே? கிண்டலாக கேட்டார் தனபால்.
   லஞ்சமா? அப்படி எட்துவும் இல்லையே?
பின்னே பசங்களை காட்டிக் கொடுக்காம இருக்கறதுக்கு பணம் வாங்கறீயாமே அதுக்கு பேர் என்ன?
   ஓ அதுவா? அதிலென்னப்பா தப்பு?
தப்பு இல்லையா? சொல்லுவடா சொல்லுவே! உன்னை “பளார்” என்று கன்னத்தில் அறைந்தார் தனபால்.
  நான் செஞ்சா தப்பு! அதுவே நீங்க செஞ்சா தப்பு இல்லையா? அழுகையுடன் கேட்டான் ரமேஷ்.
  என்னது நான் என்ன செய்யறேன்!  சொல்லுடா!
 ஏன் நீங்க கூடத்தான் உங்க கிட்ட வருமானச் சான்று கேட்டு வரவங்ககிட்ட இவ்வளவு கொடுத்தாதான் கையெழுத்து போடுவேன்னு கறாரா கேட்டு வாங்கலையா? அதுக்கு பேரு என்ன அன்பளிப்பா? கிண்டலாக கேட்டாலும் கன்னத்தில் அறைந்தார்போல உணர்ந்தார் தனபால்.
  அன்பளிப்புங்கிறது அவங்களா விருப்பப்பட்டு தருவது! அதைக் கூட அரசாங்க அதிகாரியா நீங்க வாங்கக் கூடாது. ஆனா நீங்க கைநீட்டி கேட்டு வாங்கிக்கறீங்க லஞ்சமா! அப்பா உங்கள பத்தி ஊர்லயும் என் நண்பர்களும் என்ன பேசிக்கிறாங்கத் தெரியுமா? ஊர்பணத்துல உயிரை வளர்க்கறவன்! லஞ்சப் பேய்! அப்படி இப்படின்னு இன்னும் என்னென்னெமோ பேசறாங்க! இதை கேட்க என் காது கூசுது மனசு நோகுது!
    ரமேஷின் வார்த்தைகள் ஒவ்வொன்ன்றும் அவரது இதயத்தை முள்ளாய் குத்தி கிழித்தன. ரமேஷ்! சாரிப்பா! முன் ஏர் சரியா இருந்தாத்தான் பின் ஏர் ஒழுங்கா இருக்கும்! இதை உணராம இருந்துட்டேன். நான் தவறு செஞ்சிட்டேன் தான். ஆனா இனிமே செய்ய மாட்டேன். இனி நீயும்!
  அப்பா உங்க பிள்ளை எப்பவுமே நல்ல பிள்ளைதான்! நீங்க லஞ்சம் வாங்கறதை பலர் பேசறதை பொறுக்க முடியாம உங்கள திருத்த நானும் வகுப்பாசிரியரும் போட்ட நாடகம் தான் நான் லஞ்சம் வாங்கிறதா சொன்னது. நேரடியா சொன்னா நீங்க கண்டிப்பா கேட்டிருக்க மாட்டீங்க! உங்களை திருத்ததான் இப்படி செய்யும்படியா ஆயிடுச்சு!
  ரமேஷ்! நீ என் கண்ணை திறந்துட்டே இனி  நான் யார்கிட்டேயும் லஞ்சம்னு கைநீட்ட மாட்டேன்! சாரிடா உன்னை அவசரப்பட்டு அடிச்சிட்டேன் என்று கண்கலங்கினார் தனபால்
   நீங்கதானே அடிச்சீங்க பரவாயில்லப்பா ஒரு முத்தம் கொடுத்து சரி பண்ணிடுங்க என்றான் ரமேஷ்!
  பாத்தியா பாத்தியா நீயே லஞ்சம் கேக்கறியே!
   சாரிப்பா! சாரி!நீங்க மாறின செய்தியை வகுப்பாசிரியரிடம் சொல்லிட்டு வந்திடறேன். அவர் ரொம்ப சந்தோஷப்படுவார் என்று விரைந்தான் ரமேஷ்!

   அறவுரை!

  ஆசாரக்கோவை

  உதவிப் பயனுடையார் உண்டி பழியார்
  அறத்தொடு தான்நோற்ற நோன்பு வியவார்
  திறத்துளி வாழ்த்தும் என் பார்.

விளக்கம்}  சான்றோராய் வாழ விரும்புவோர் தாம் ஒருவருக்கு செய்த உதவியின் பயனைச் சொல்லார். தமக்கு மற்றவர் இட்ட உணவை இகழார். தாம் செய்த அறத்தையும் நோன்பையும் தாமே மகிழ்ந்து பேசமாட்டார்.

உங்களுக்குத் தெரியுமா?

இந்தியாவின் முதல் இரும்பு உருக்காலை பொக்காரோ

இந்தியாவின் முதல் பெண் விமாணி துருபா பானர்ஜி

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

Comments

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!