மரங்களுக்கும் வந்திருச்சு பீதி! பசுமை வழி சாலைக்கு வந்த சோதனை

தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்து, புது அமைச்சரவை பதவியேற்ற மூன்று மாதத்திற்குள், மூன்று முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மக்கள் மத்தியில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி, இப்போது யாரை பார்த்தாலும், மீண்டும் அமைச்சரவை மாற்றம் இருக்காமே என்ற பேச்சு அடிபடுகிறது. பொதுமக்களே ஆர்வமாக இருக்கும் போது, பதவியில் உள்ளவர்கள், பதவிக்கு வரத் துடிப்போர் மத்தியில் எப்படி மனஓட்டம் இருக்கும்.

தமிழக சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றதும், முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளித்தார். சீனியர்களை விட்டு விட்டு நமக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதே என்று ஆச்சர்யப்பட்டவர்கள் இதை தக்க வைக்க வேண்டுமே என பயந்தும் போயினர்.

பரிகார பூஜைகள்:இதன் காரணமாக, அமைச்சர்களாக பதவியேற்றதும், கோட்டையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் அமர்வதற்கு கூட, பரிகார பூஜைகள் செய்தும், நாள், நட்சத்திரம் பார்த்தும் இருக்கின்றனர். இதற்கு காரணம் இருக்கிறது, கடந்த ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள், இப்போது வழக்குகளில் சிக்கி சிறையில் உள்ளனர். இவர்கள் ராசி நமக்கும் ஒட்டிக்கொள்ள போகிறது என்று, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளில் வாஸ்துப்படி சிறு சிறு மாற்றங்களை செய்து, பூஜைகள் நடத்தி, பக்தி மணம் கமழ அறைகளை மாற்றியவர்களும் உண்டு. தங்கள் மேஜையில் முதல்வர் படத்துடன், தங்கள் இஷ்ட தெய்வங்களின் படங்களையும் வைத்துள்ள அமைச்சர்களும் உள்ளனர்.அதேபோல், அமைச்சர்கள் குடியிருப்பதற்காக, அடையாறில் பசுமை வழி சாலையில், அமைச்சர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இவ்வாறு ஒதுக்கப்பட்ட வீடுகள், பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை அமைச்சர்கள் போய் பார்த்து, வாஸ்து நிபுணர்களின் துணையுடன் சில மாற்றங்களை செய்தனர்.

தொடர்ந்து அமைச்சராக நீடிப்பதற்காக என்ன என்ன செய்ய வேண்டும், வாசல் எங்கே இருக்க வேணடும், அலுவலக அறை எங்கே இருக்க வேண்டும் என பார்த்து பார்த்து, வீட்டையே முற்றிலுமாக மாற்றிய அமைச்சர்களும் இருக்கின்றனர். பெரிய மாற்றங்களை செய்ய முடியாது என்றாலும், சிறு சிறு மாற்றங்களை செய்துள்ளனர்.

கிலியும் வாஸ்துவும்:சமீபத்தில் அமைச்சரவையில் இருந்து ஆறு அமைச்சர்கள் நீக்கப்பட்டனர்; சிலரது இலாகாக்கள் மாற்றப்பட்டன. இதன் பிறகு தான் அமைச்சர்கள் மத்தியில், "கிலி' அதிகமானது. அதுவரை வாஸ்து பார்க்காதவர்கள் கூட, தாங்கள் குடியிருக்கும் வீடுகளில் அதிரடி மாற்றங்களை செய்து பரிகார பூஜையும் நடத்தியுள்ளனர். இதற்கும் மேல் போய், இலாகாக்களை பறிகொடுத்த அமைச்சர்கள் தங்கள் வீட்டைச் சுற்றியுள்ள மரங்கள், வாஸ்துப்படியும் தங்கள் நட்சத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஜோசியம் பார்த்து, மரங்களை அப்புறப்படுத்த உத்தரவிட்டுள்ளனர்.பசுமை வழி சாலையில் அமைச்சர்கள் குடியிருப்பில் உள்ள மரங்கள் ஒவ்வொன்றும் நீண்ட ஆயுள் கொண்டவை. இரண்டு பேர் சேர்த்து கட்டிப் பிடிக்கும் அளவு சுற்றளவு கொண்டது.

ஒண்ணை சொன்னா... கூட இரண்டு:இந்த மரங்களை வெட்டுவதன் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதால், ஒரு மரத்தை வெட்டச் சொன்னால் கூட, ஒன்றிரண்டு மரங்களை ஊழியர்கள் வெட்டி விடுகின்றனர். சமீபகாலமாக 20க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.பட்டுப்போன மரத்தை வெட்டுகிறோம். மழை காரணமாக சில மரங்கள் சாய்ந்து விழ வாய்ப்பு உள்ளது என்று கூறி, சமீபத்தில் மரங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. இதனால், பசுமை வழி குடியிருப்பில் இருக்கும் வானுயர்ந்த மரங்கள் கண்ணீர் வடிக்கத் துவங்கியுள்ளன.

வாழையும், வேர்கடலையும் :சமீபத்தில் நடந்த அமைச்சரவை மாற்றத்தில் முக்கிய இலாகாவை இழந்த, மூத்த அமைச்சர் வீட்டைச் சுற்றியிருந்த மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன. இங்கு வாழைத்தோப்பும், வேர்கடலை செடியும் நடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையிலும், எட்டுக்கும் மேற்பட்ட அமைச்சர்களுக்கு இன்னும் வீடு ஒதுக்கப்படாததால், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் தங்கியிருக்கின்றனர். எங்களுக்கு வீடு ஒதுக்குங்கள் என இவர்களாக போய் கேட்காமல் இருக்கின்றனர். கிடைக்கிறப்ப கிடைக்கட்டும் என்று நிம்மதியாக இருக்கின்றனராம்.அடுத்த அமைச்சரவை மாற்றம் வந்தால், எத்தனை பேர் காணாமல் போவோமோ என, பசுமை குடியிருப்பில் உள்ள மரங்கள் பயப்படத் துவங்கியுள்ளன.

நன்றி  தினமலர்

Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2