காக்கை கேட்ட வரம்! பாப்பா மலர்!

காக்கை கேட்ட வரம்!

அடர்ந்து வளர்ந்திருந்த அந்த ஆல மரத்தில் காகம் ஒன்று கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அது அளவுக்கு அதிகமாக ஆசை கொண்ட பேராசைப் பிடித்த காகம். பிறரிடம் இருப்பதெல்லாம் தன்னிடம் இல்லையே என்று வருந்தும் காகம்.அவனைபோல் இருந்தால் நன்றாக இருக்கும் இவனைப் போல இருந்தால் சுகமாக வாழலாம் என தன் தகுதிக்கு மீறிய ஆசைகளை வளர்த்துக் கொண்டு அல்லல்களை அதுவே தேடிக் கொண்டது.
    ஒருநாள் அந்த காகம் கிளி ஒன்றை கண்டது. கிளியின் அழகும் சிவந்த மூக்கும் அதனைக் கவர்ந்தது. அது கிளியை நினைத்து பொறாமைப் பட்டது. நாமூம் இருக்கிறோமே கன்னங்கரேலென்று! இருந்தாக் இந்த கிளியைப் போல அழகாக இருக்க வேண்டும்.இல்லையேல் பிறந்திருக்கவே கூடாது என்று வருந்தியது. இறுதியில் அது ஓர்  முடிவு எடுத்தது. அது கடவுளிடம் தவமிருந்து வரம் பெறலாம் என்பதே அது.
   தன் நினைப்பை உடனே செயலாக்கவும் செய்தது. அன்றே இறைவனை குறித்து ஒற்றைக் காலில் நின்று தவமியற்ற ஆரம்பித்தது.காலங்கள் சென்றது. கடவுளும் மனமிறங்கி காக்கைக்கு காட்சி தந்து என்ன வரம் வேண்டும் என்று வினவினார்.
    காக்கை மகிழ்ச்சியில்  துள்ளி குதித்து கடவுளே என் தவத்திற்கு மெச்சி வருகை தந்ததற்கு நன்றி! என்னுடைய ஒரே குறிக்கோள் நான் கிளி மாதிரி அழகாக சிவந்த மூக்குடன் பச்சை நிறமாக மாற வேண்டும் அதற்காகத்தான் தவமிருந்தேன் என்றது.
   கடவுள் காகத்திடம் கேட்டார். நன்றாக யோசித்துதான் கேட்கிறாயா? இதனால் ஏற்படும் விளைவுகளை யோசித்தாயா? என்று கேட்கவும் காகம் நான் நன்றாக யோசித்துதான் கேட்கிறேன் என்று சொன்னது. சரி காகத்திற்கு பாடம் புகட்டுவோம் என்று நினைத்த கடவுள் அப்படியே ஆகட்டும் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.
  மறுநிமிடம் காகம் கிளியைப் போல மாறிவிட்டது. ஆனால் அதன் உருவம்தான் மாறியது. குரல் மாறவில்லை. அது தன் இனத்தாரிடம் தான் வரம் பெற்று வந்ததை கூறச் சென்றது.  ஆனால் காகக் கூட்டங்கள் காகத்தை கண்டதும் யார் இந்த புதியபறவை நம் இனமில்லையே என்று காகத்திடம் நீ யார் எதற்கு எங்கள் கூட்டத்திற்கு வருகிறாய் என கேட்டன.
   காகம் நானும் தங்கள் இனம்தான் கடவுளிடம் வரம் பெற்று வந்தேன் அதனால் இந்த உருவத்தில் உள்ளேன் என்று கூறியது. ஆனால் காகக் கூட்டங்கள் குரல் மட்டும் காகம் போலுள்ளதால் உன்னை காகம் என்று ஒத்துக் கொள்ள முடியாது நீ யாரோ புதியவன் உன்னை எங்களுடன் சேர்க்க முடியாது ஓடிவிடு என்று விரட்டின.
  மனம் வருந்திய காகம் கிளி கூட்டத்திடம் சென்றது. தன்னை அவர்களுடன் சேர்த்துக் கொள்ளுமாறு கூறியது. கிளிகளோ நீயோ காக்கை இனம் உருவத்தில் மட்டுமே எங்களைப் போல உள்ளாய்! உன்னை எங்களுடன் சேர்த்தால் வம்பு தான் மரியாதையாக இடத்தை காலி செய் என்று விரட்டியது.
  காகம் இரண்டு பிரிவினரும் சேர்த்து கொள்ளாததால் வருந்தியது. அப்போது வேடன் ஒருவன் வித்தியாசமான பறவையாக இருக்கிறதே என காகத்தை பிடித்து கூண்டில் அடைத்தான். காகம் தன் செயலுக்கு வருந்தி அழுதது. மீண்டும் கடவுளிடம் முறையிட்டது.
   கடவுளே நான் தவறு செய்து விட்டேன் என்னை காப்பாற்றுங்கள் என்று கதறியது. கருணை வடிவான கடவுள் காகம் முன் தோன்றினார். காகமே! இறைவனின் படைப்பில் எல்லோரும் சமமே! ஒவ்வொருவருக்கும் ஓர் சிறப்பினை படைத்தோம் நம் சிறப்பு என்ன என்பதை உணர்ந்து அதை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர பிறரிடம் அது உள்ளதே இது உள்ளதே என்று ஆசைப்பட்டு அவதிப் படக் கூடாது. உன் தவறான முடிவால் வேடனிடம் சிக்குண்டாயே! என்று அறிவுரை வழங்கினார்.
   காகம் தலைகுனிந்து என் தவறை உணர்ந்தேன் என்னை மன்னித்து காப்பாறுங்கள் என்று வேண்டியது. கடவுளும் மனமிரங்கி அதை பழையபடியே காகமாக மாற்றினார். இனியாவது இருப்பதை கொண்டு திருப்தி அடை! பிறரை பார்த்து பொறாமைப் படாதே என்று அறிவுறுத்தி மறைந்தார்.
   கூண்டில் அடைத்த பறவை காகம் என்று அறிந்த வேடனும் கூண்டை திறந்து விட புத்தி வந்த காகம் வெளியே பறந்தது.

அறவுரை!

நாலடியார்

வேம்பின் இலையுள் கனியினும் வாழைதன்
தீஞ்சுவை யாதும் திரியதாம் ஆங்கே
இனந்தீ  தெனினும் இயல்புடையார் கேண்மை
மனம் தீதாம் பக்கம் அரிது
                         சமண முனிவர்கள்
விளக்கம்}  வேம்பின் இலைகளுக்கிடையே வாழை பழுத்தாலும் அதன் இனிய சுவை சிறிதும் மாறுபடாது. அது போல பண்புடையார் சேர்ந்த இனம் தீதாயினும் அதனால் அவர்கள் மனம் தீயதாக மாறாது

உங்களுக்குத் தெரியுமா?
தாஜ் மகாலை கட்டிய பாரசீக சிற்பியின் பெயர்  உஸ்தாத் ஈஸா

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே! வாக்களித்து பிரபலபடுத்தலாமே!


Comments

  1. உங்களுக்கு தெரியுமா தகவல் சூப்பர் பாஸ்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!