மாண்புமிகு அம்மாவுக்கு மண்ணாங்கட்டியின் கடிதம்!

மாண்புமிகு அம்மாவுக்கு மண்ணாங்கட்டியின் கடிதம்!

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவுக்கு! மண்ணாங்கட்டியின் வணக்கமுங்க! இண்டர் நெட் இ.மெயிலுன்னு நீங்க மாடர்னா இருந்தாலும் தமிழ்நாட்டுல இன்னும் பல கிராமங்கள் தபால் ஆபிஸுக்கு கூட கதியில்லாமத்தான் கிடக்கு அப்படிப் பட்ட ஒரு கிராமத்தில இருந்துதான் இந்த கடிதத்த உங்களுக்கு எழுதறேன். எப்படியோ சூளுரைத்தபடி ஆட்சி அமைச்சு இன்னியோட 100 நாள கடந்துட்டீங்க. முதல்ல அதுக்கு என்னோட வாழ்த்துக்கள்.
         உங்க முன்னோடிகள் ஆட்சி செய்யறப்பல்லாம் இந்தமாதிரி 100வது நாள் 200வது நாள் எல்லாம் சினிமா படங்களுக்குத்தான் கொண்டாடுவாங்க. என்னபண்றது நாங்க சினிமா காரங்களை இல்ல மாத்தி மாத்தி ஆட்சியில உக்கார வைக்கிறோம். அதனால இதையும் பழகிக்கிறோம்.
 சீர்கெட்டு கிடந்த தமிழகத்தை 100 நாள்ல மாத்திட முடியாதுதான்! ஒத்துக்கறேன். ஆனா பங்காளிச் சண்டை மாதிரி இல்ல உங்க அரசாங்கம் செயல்படுது.மக்கள் உங்களை ஆட்சியில உக்கார வைச்சது நமக்கு ஏதாவது நாலு நல்லது பண்ணுவாங்கன்னுதான்.
   நாலு நல்லது பண்ற ஆளுங்க யாரும் இப்ப தமிழ் நாட்டுல இல்லாததால உங்க ரெண்டு பேரையுமே மாத்தி மாத்தி அரியணையில உக்கார வைக்க வேண்டியதா போச்சு. கேப்டனாவது கரையேத்துவாருன்னு சிலர் நினைச்சாங்க. ஆனா அவரும் உங்க லீடர்ஷிப்ல ஒரு  சார்ஜண்டாஆகிப் போயிட்டாரு.
   இதெல்லாம் சொல்ல சொல்ல உங்களுக்கு கோபம் வரலாம் இருந்தாலும் உங்க மேல நம்பிக்கை வச்ச அப்பாவி தமிழர்களை கொஞ்சம் நினைச்சு பாருங்களேன். இந்த 100 நாள்ல நீங்க பண்ண சாதனை என்ன? சமச்சீர் கல்வியை தரமில்லைன்னு சொல்லி சாதாரண கல்வியைக் கூட மூணு மாசம் படிக்கவிடாம செஞ்சிருக்கீங்க! நில மோசடின்னு சொல்லி திமுக காரங்களை பிடிச்சி உள்ள போட்டிருக்கீங்க.
சட்டசபையை செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாத்தி இருக்கீங்க. மந்திரிகளை ஒரு மூணுமுறை மாத்தீருக்கீங்க லேட்டஸ்டா தமிழ் புத்தாண்டை மறுபடியும் சித்திரைக்கு மாத்தி இருக்கீங்க!.
        இதனால எல்லாம் அப்பாவி தமிழனுங்களுக்கு ஏதாச்சும் பலன் இருக்குதா கொஞ்சம் நெஞ்சை தொட்டுச் சொல்லுங்களேன்.பாவம் இன்னும் பல தமிழ் குடும்பங்கள் இருக்க இடம் இல்லாம குடிக்க கஞ்சி இல்லாம தவிச்சிகிட்டு இருக்கு.
    தமிழ் நாட்டுல பலகிராமங்கள்ல கூட குடிக்க சுகாதாரமான தண்ணி இல்லை. சென்னையில மட்டுமல்ல அதை சுத்தி இருக்கற புறநகர்ல கூட தண்ணியை விலை கொடுத்து வாங்கி குடிக்கிற நிலைமை. பல இடங்கள்ல மருத்துவ மணைகள் இல்லை. பல கிராமங்கள் சாலைவசதி இல்லாம பஸ் வசதி இல்லாம மின் வசதி இல்லாம தவிச்சி கிடக்குது.
   தமிழக அரசு பள்ளிக்கூடங்கள்ல பல இடத்துல ஒழுங்கான கழிப்பிட வசதியும் குடிநீர் வசதியும் இல்லை. விவசாயிகள் விளை நிலத்தை பிளாட் போட ஆரம்பிச்சிட்டாங்க. திருட்டு பசங்க அட்டுழியம் தாங்க முடியலை.
இதுல்லாம பல இடங்கள்ல சாயப் பட்டறை பிரச்சனை,மணல் கொள்ளை இப்படி பல பிரச்சனைகள் இருக்குது.

  ஆனா நீங்க உங்க கவனத்தை கருணாநிதி பக்கமே செலுத்தி அவரு கொண்டு வந்தாருங்கறதுக்காக ஒவ்வொன்னா கலைச்சி வேடிக்கை பார்க்கறீங்க இதுக்கா நாங்க ஆசைப் பட்டோம். நீங்க படிச்சவங்க புத்திசாலி தைரியசாலி நீங்க ஆட்சிக்கு வந்தா நல்லது நடக்கும்னு ஆசைப்பட்டுதானே ஆட்சியில அமர வைச்சோம்.
  போன தடவைக்கு இந்த தடவை உங்க போக்குல கொஞ்சம் மாறுதல பாத்தபோது மகிழ்ந்தோம். ஆனா இந்த நூறு நாட்களை இப்படி வீணடிச்சிட்டிங்களே! கலைஞரை தாக்கும் போது உங்க முகத்தில ஒரு புன்னகையை சட்டசபை நிகழ்ச்சிகளை உங்க டிவியில காட்டுற போது பார்க்கிறேன். ஏதோ பங்காளி சண்டையில ஜெயிச்ச மாதிரி இருக்குது உங்க சிரிப்பு.
   அவங்க குடும்பமா கொள்ளையடிச்சாங்க தான்! அதுக்கு மக்கள் தண்டணை கொடுத்திட்டாங்க! இப்ப உங்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்காங்க இதை வீணடிக்காம இந்த ஏழை பாழைகளையும் மனசுல வைச்சிகிட்டு தமிழகத்துக்கு ஏதாவது உருப்படியா செய்யுங்கம்மா!
                                                இங்கனம்.
இப்பவும் உங்க மேல நம்பிக்கை வச்சிருக்கற அப்பாவி தமிழர்களின் சார்பாக உங்களோட குடிமகன் மண்ணாங்கட்டி.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த உங்கள் கருத்துக்களை பதிந்து செல்லலாமே!.கீழுள்ள நிரலிகளில் வாக்களித்து செல்லலாமே!



Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!