என் இனிய பொன் நிலாவே! பகுதி 1


என் இனிய பொன் நிலாவே!

“ப்ரியம்வதா”

பகுதி 1

அந்த அதிகாலை வேலையில் குளித்து விட்டு தலையில் துண்டோடு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தவளை அப்பொழுதுதான் படுக்கையில் இருந்து எழுந்த மதுமிதா, அம்மா காபி! என்று குரல் கொடுத்தாள்.
    கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்மணி தலையை நிமிரவிம் கூடச் செய்யாமல் கோலத்தில் மும்முரமாக இருக்க அம்மா! காபி கேட்டேன் என்று இரண்டாவது முறையாக குரல் கொடுத்தாள் மதுமிதா.
    ஏண்டி மணி என்ன இப்ப அஞ்சறை தான் ஆகுது! பல் கூட தேய்க்காம தலைவிரி கோலமா வந்து நின்னு காபி கேக்கறியா?பால் இன்னும் வரலை. வந்தப்புறம் தான் காபி கீபியெல்லாம் முதல்ல போய் பல்லை தேய்! என்றாள் மதுமிதாவின் தாய் அன்ன பூரணி.
  “போம்மா காலம் கார்த்தால பல்ல தேச்சிகிட்டு! முதல்ல காபி அப்புறம் ஹாயா பேப்பர் படிச்சிட்டு நிதானமா குளிக்கிறப்ப பல்லு தேய்க்க கூடாதா?” சும்மா அதிகாரம் பண்ணாதம்மா! போ போய் காபி கலந்துவா இதோ பால் வந்துடுச்சு பார் என்றாள் வாசலில் வந்து நிற்கும் பால்காரணை காட்டிய மதுமிதா.
    “எத்தனை நாளைக்கு நீ இன்னும் இப்படி பல் தேய்க்காத காபி குடிக்க போறேன்னு நானும் தான் பாக்கறேன்” என்று முகத்தை நொடித்தபடி காபி தயாரிக்கச் சென்றாள் அன்ன பூரணி.
   “ என்ன காலம் கார்த்தாலயே தாயும் மகளும் அடிச்சிக்கிறீங்க?” என்ன விஷயம்? என்று பல் விளக்கி முகம் துடைத்தபடி வந்த வினாயகம் வினவினார்.
    ஒண்ணுமில்லேப்பா! வழக்கம்போல பல் விளக்கற பிரச்சணைதான் என்றபடி மதுமிதாவும் குளியலறைக்குள் நுழைந்தாள்.
   மதுமிதா இந்த கதையின் நாயகி, இக்கால இளைஞி, படிப்பு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்,பிடிப்பு என்றால் சங்கீதம் சதா செல் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருப்பாள். டிவி தொடர்களை அறவே வெறுப்பவள். அழகு சொல்லித் தெரியவேண்டியது இல்லை.அவள் தெருவில் நடக்கும் போது மொய்க்கும் கண்களை வைத்தே கணக்கிட்டுவிடலாம். மற்றபடி டிபிகலான தமிழ் பெண்.
   பல் தேய்த்து வந்த மதுமிதாவிடம் காபியை நீட்டிய தாய் என்னம்மா இன்னிக்கு ஏதோ இண்டர்வியுவிற்கு போகணும்னு சொன்னியே  என்று நினைவூட்டினாள்.
   “ஆமாம்மா! இன்னிக்கு ஒரு இண்டர்வியு இருக்கு அண்ணா நகர் வரைக்கும் போகனும். கம்பெனி ஒரு மல்டி நேஷனல் கம்பெனி. அங்க வேலை கிடைச்சா நல்லா இருக்கும். கை நிறைய சம்பளமும் கிடைக்கும்” என்றாள்.
   “என்னம்மா நீ வேலைக்கு போய்த்தான் ஆகணுமா?” நான் கை நிறைய சம்பாதிக்கிறேன். நீ வேற எதுக்கு வேலைக்கு போகனும் எப்படியும் இன்னும் ஒரு வருஷத்தில உனக்கு கல்யாணம் பண்ணிடப் போறோம். எதுக்கு இந்த வேண்டாத வேலை?” விநாயகம் கேட்டார்.
   “அப்பா! என்னப்பா நீங்க உலகம் புரியாத ஆளா இருக்கீங்க! இப்ப எந்த மாப்பிள்ளையும் தனக்கு வர பொண்டாட்டியும் சம்பாதிக்கணும் வேலைக்கு போகனும்னு தான் நினைக்கிறான் இரட்டை சம்பாத்தியமே இன்னிக்கு பத்தலை! அதுவுமில்லாம நான் வீட்ல சும்மாதானே இருக்கேன். போரடிக்குது அதான் ஒரு ரெண்டு மூணு கம்பெனிக்கு அப்ளிகேசன் போட்டேன். அதுல ஒரு கம்பெனியில இண்டர்வியுவிற்கு கூப்பிட்டிருக்கான். போனா உடனேவா வேலை கிடைச்சிடப் போகுது?” என்றாள் மதுமிதா.
“சரிம்மா உன் இஷ்டம் போயிட்டு ஜாக்கிரதையா வந்திடு!”
 “அம்மா சாமிகிட்ட நல்லா வேண்டிக்கோ! இந்த வேலை உன் பொண்ணுக்கு கிடைக்கணும்னு” சாமி முன் கும்பிட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு குளிக்கச் சென்றாள் மதுமிதா.
    காலை எட்டரை மணி பீக் அவரில் மாநகர பேருந்துகள் சென்னை நகர சாலைகளில் பயணிகளை அடைத்துக் கொண்டு சென்று கொண்டிருக்க அதில் ஒரு பேருந்தில் ஏறி அண்ணா நகருக்கு டிக்கெட் வாங்கினாள் மதுமிதா.
பஸ்ஸினுள் இடி மன்னர்களிடம் மாட்டாமல் அண்ணா நகர் வந்தபோது மணி 9.00ஆகிவிட்டது.
  அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்து அந்த இண்டர்வியு நடக்கும் ஆபிஸிர்குள் நுழையும் போது மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது.அந்த கட்டிடத்தின் 5வது மாடியில்தான் இண்டர்வியு. மாடிக்குச் செல்ல லிப்டுக்கு சென்றபோது லிப்ட் ரிப்பேர் என்ற போர்டு தொங்கியது.
   ச்சே! இன்னிக்கு 5 மாடி ஏறியே ஆகனும்னு கடவுள் நம்ம தலையில எழுதிட்டான் போல என்று முணுமுணுத்தபடி மாடிப் படிகளில் அவசரமாக ஏற ஆரம்பித்தாள்.
  இண்டர்வியுவிற்கு நேரத்திற்கு போகவேண்டுமென்ற பரபரப்பு அவளுக்கு! அப்பொழுது மாடிப்படிகளில் வேகமாக இறங்கி வந்த இளைஞன் ஒருவன் இவள் மீது மோத கையிலிருந்த ஃபைல் எகிற அதிலிருந்து அவளது பயோடேட்டா காகிதங்கள் காற்றில் பறந்தன.
   ஏய்! என்ன ..? என்று அவள் கேட்குமுன் சாரி சாரி! என்றவாறே அந்த காகிதங்களை பொறுக்க ஆரம்பித்தான் அந்த இளைஞன். அவணை முறைத்தபடி நின்றாள் மதுமிதா.
                          நிலவு வளரும் (1)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த தங்கள் கருத்தினை தெரிவிக்கலாமே! வாக்களித்து இடுகையை பிரபலபடுத்தலாமே!

Comments

  1. சுவாரஸ்யமாக இருக்கின்றது தொடர்ந்து அசத்துங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2