சென்னை: உடல்நலக் குறைவு காரணமாக சென்னை இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை சீரடைந்து வருவதாகவும் அவர் இப்போதே டிஸ்சார்ஜ் ஆகும் அளவுக்கு தெம்புடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் சாய் கிஷோர் தெரிவித்தார். கடந்த ஏப்ரல் 29-ந் தேதி ராணா படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவுக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்றிருந்தார். அங்கிருந்து வீடு திரும்பிய அவர் ஜீரண கோளாறு காரணமாக வாந்தி எடுத்தார். அதைத் தொடர்ந்து அவர் மைலாப்பூரில் உள்ள இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று அன்று மாலையே ரஜினிகாந்த் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவில் அவருக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டது. கடும் குளிர் ஜூரம், இருமல் ஏற்பட்டது. எனவே மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கிஷோர் கூறியதாவது:
ரஜினிகாந்த் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது இருமல், சளி மற்றும் காய்ச்சல் இருந்தது. எனவே அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்தோம். தற்போது அவரது உடல் நிலை சீரடைந்து விட்டது.
இருமல், சளி மற்றும் காய்ச்சல் உடனடியாக குறைந்து விட்டது. அவர் டிஸ்சார்ஜ் ஆகும் தகுதியுடன் உள்ளார். ஆனால் மேலும் 2 நாட்கள் ஓய்வில் இருக்க ரஜினிகாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே பாதுகாப்பு கருதி தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அவரை வைத்துள்ளோம். நாளை அவர் வீட்டுக்கு செல்வார்," என்றார்.
நன்றி: தட்ஸ் தமிழ்
தங்கள் வருகைக்கு நன்றி! கீழ் உள்ள நிரலிகளில் ஓட்டளித்து செல்லலாமே? உங்கள் கருத்துக்களையும் பதிந்து செல்லலாமே?

0 comments:
Post a Comment