அப்பாவின் சினேகிதன்!


அப்பாவின் சினேகிதன்!
      
சென்னை அண்ணா நகரில் நேர்முகத் தேர்வை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரை கையில் பெற்றுக்கொண்ட களிப்பில் மிதந்தபடி டீ குடிக்கலாம் என்று அந்த டீக்கடைக்குச் சென்றேன். சத்தியமாய் அவரை அந்த டீக்கடையில் அந்த கோலத்தில் காண்பேன் என்று என்னுடய கனவில் கூட நினைத்துப்பார்க்க வில்லை.அவருக்கும் என்னைக்கண்டதும் அதிர்ச்சியாக இருந்திருக்க வேண்டும் முகம் வியர்த்துக்கொட்ட என்னையே பார்த்தார்.அது பொறியில் அகப்பட்ட எலியின் பரிதாபப் பார்வையாக எனக்குத் தோன்றியது.
         அவர் அப்பாவின் சினேகிதர்.நீலகண்ட அய்யர்.. ஊரில் கெத்தாய்ப்பாக கோட் சூட்டில் உலாவரும் அவர் இங்கே காவியுடுத்தி பனியனோடு டீ ஆற்றிக்கொண்டிருந்தார்.அதை நான் பார்த்துவிட்டேன்.அவர்கைகள் உதறுகிறது. ஆற்றும் டீ கீழே சிதறுகிறது.என்ன ஒரு ஏமாற்றுக்காரமனிதர்.இவரிடம்போய் அப்பா சிபாரிசு கேட்டாரே? மனதில் வெறுப்பின் அலைகள்.
      நீலகண்ட அய்யர் அப்பாவின் நீண்ட கால சினேகிதர்.சென்னை செகரிட்டரியேட்டில் வேலை என்று சொல்லிக்கொள்வார்.ஊருக்கு வருவது ஆறுமாதத்திற்கு ஒரு முறைதான். கோட் சூட்டோடு வரும் அவர் தங்கும் நாட்களில் கூட பேண்ட் சட்டையோடுதான் நடமாடுவார். நடையில் ஒரு மிடுக்குதொனிக்கும்.ஆளும்கட்சி,எதிர்கட்சி என்று எல்லாக் கட்சி பிரமுகர்களின் பெயர்களைச் சொல்லி அவனெல்லாம் எனக்கு சுண்டக்காய்டா! என்பார். காரியம் ஆகனும்னா என்கிட்டதான் வந்து நிப்பானுங்க என்று பெருமையாய் சொல்லிக்கொள்வார்.
     அவரைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம்கூடியிருக்கும் அவர் சொல்லும் கதைகளைக் கேட்க.கதை என்றால் எல்லாம் அவரது அனுபவங்கள் தான். அவர் பணி நிமித்தமாக சென்ற இடங்கள்,அங்கு நடந்த சுவையான சம்பவங்கள் பற்றி வெகு அழகாக விவரிப்பார்.அந்த விவரிப்பில் கேலி,கிண்டல், சோகம்,கோபம் என நவரசமும் கலந்து இருக்கும்.அவருடைய இந்த கதையைக்கேட்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நான் அவருடைய ரசிகன்.மிகவும் படாடோபமாக நடந்துகொள்வார் அவர். அதேசமயம் மிகவும் கண்டிப்பானவர். போஸ்ட்மேனொருவன் ஒர் கடிதத்தை ஒருநாள் தாமதமாக தந்தான் என்ற போது அவனைப் பற்றி புகார் எழுதி அவனை ஒரு வழி பண்ணிவிட்டார். அதே போஸ்ட் மேண் மனைவிக்கு உடல் நலமில்லாமல் போன போது தானே முன் வந்து எல்லா உதவிகளையும் செய்தார். இதுதான் அவரது குணம்.
       செக்ரெட்டரியேட்டில் வேலை என்பதோடு அவனைத்தெரியும்,இவனைத் தெரியும் என்றதால் பலரும் அவரிடம் என் பையனுக்கு ஒரு வேலை வாங்கித்தரக்கூடாதா ஐயரே என்பார்கள். மூச் அவர் வாயே திறக்க மாட்டார்.பிறகு அவரிடம் பேசவே மாட்டார்.வேலை கேட்டவர் நொந்து போய் ஐயரே எதுக்கு பேசமாட்டேங்கிறீர் வேலை கேட்டது தப்பா? சிபாரிசு பண்ணனா என்னகுறைஞ்சா போயிடுவீர்? என்று கேட்டதுதான் தாமதம் ஆமாம் வோய் உம்ம பையனுக்கு திறமை இருந்தா வேலை தானா கிடைக்கும். அத வுட்டுட்டு சிபாரிசு அது இதுன்னு இனி எங்கிட்ட வராதீர் என்று கட் அண்ட் ரைட்டாய் சொல்லி விடுவார்.
     சிபாரிசு என்றாலே எரிந்து விழும் அவரிடம் காரியம் ஆகாது என்று உணர்ந்தவர்கள் விலகிப்போனார்கள்.கடைசியில் அப்பா மட்டுமே நிலைத்தார்.அதற்கும் வந்தது சோதனை.நான் வேலையில்லாமல் சுற்றுகிறேனே என்று அப்பா,ஐயரே என் பையனுக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணக்கூடாதா என்றார். ஐயர் பதில் கூறவில்லை.தொடர்ந்து கேட்ட அப்பா அலுத்துப்போனார்.நண்பனுக்கு நண்பன் உதவி செஞ்சா என்ன? கல்லுளி மங்கனா பதில் பேசாம இருக்கானே என்று புலம்பியவர் ஒருநாள் ஐயரிடம் எம் மவனுக்கு வேலை வாங்கித் தரமுடியும்னா வீட்டுக்கு வா இல்லேனா இனி வராதே என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார்.
அன்று போனவர்தான் ஆறுமாதம் ஆகிவிட்டது அவரை ஊரில் பார்த்து.இன்று இந்த நிலைமையில் காண்கிறேன். டீ ஆற்றிக்கொண்டிருக்கும் இவரிடம் எனக்கு வேலை வாங்கித்தரச்சொன்னால் எப்படி முடியும் எனக்கு ஒரே ஆத்திரம். நாராயணா! குரல் கேட்டு நிமிர்ந்தேன். முறைப்போடு மரியாதையா பேசு மேன்! கஸ்டமர பேர் சொல்லித்தான் கூப்பிடுவாயா? என்று பொறிந்தேன்.
    அவர் முகத்தில் அவமானத்தின் ரேகைகள்.நான் வெற்றிக்களிப்பில் இருந்தேன்.அவர் தயங்கி,நா..சார் நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் என்றார். எனக்கு டயமில்ல நான் என்ன உங்கள மாதிரி டீ ஆத்திட்டு இருக்கேனா என்ன?உங்ககூட பேசறதுக்கு?
    இல்லப்பா.. ஆனா நான் சொல்ற விளக்கத்த... என்னப்பெரிய விளக்கம் ஒரு டீமாஸ்டர்னு எனக்கு தெரிஞ்சத ஊர்ல சொல்லாதேன்னு கேக்கப்போறிங்களா? அத இப்பவே கேட்டுட்டு கிளம்புங்க! அவரை கல்லால் அடித்த திருப்தி எனக்கு.அவர் மிகவும் கூனி குறுகிப்போனார் என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு.
   உணர்ச்சி ததும்ப அவர் பேசலானார். சார் நான் டீ ஆத்தறவந்தான் இல்லேங்கல! ஆனா எனக்கும் உணர்ச்சிகள்,குடும்பம் பாசம்,நண்பர்கள் எல்லாம் இருக்கு. அத கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க தம்பி!. என்ன நான் செஞ்ச ஒரே தப்பு நான் செக்ரெட்டரியேட்ல வேலை செய்யறாதா சொன்னதுதான். அது சின்ன வயசுல ஒரு ஆர்வத்தில எல்லோரும் என்ன சுத்தி இருக்கணுமுன்னு நினைச்சு நான் பெரிய வேலயில் இருக்கறதா சொன்னா எல்லாரும் நம்மல சுத்தி வருவான்னு நான் போட்ட தப்பு கணக்கு சார்!. அத எல்லோரும் நம்பவே எனக்கு ரொம்ப வசதியாயிடுச்சு நான் ஒரு சமையற்காரனா செக்ரட்ட்ரியேட் கேண்டின்லதான் இருந்தேன். அதத்தான் சொன்னேன் ஆனா நீங்க எல்லோரும் பெரிய அதிகாரின்னு நினைச்சுகிட்டீங்க அதுல என் தப்பு நான் உண்மைய சொல்லாதுதான்.
      ஆனா அப்படி சொன்ன பொய் நம்ம ஊருக்கு எவ்வளவு நன்மைய தந்துருக்குன்னு உனக்குதெரிஞ்சிருக்கலாம் ரோடு போடவச்சேன், குடிதண்ணி வசதி, பஸ் வசதி எல்லாத்துக்கும் நான் சொன்ன பொய்தான் உதவுச்சு ஆனா பொய் என்னிக்கும் உண்மை ஆயிடாது. என்னை நான் நியாயப் படுத்தல! நான் செஞ்சது தப்பு தான் ஆனா அது என் அன்பு நண்பனையும் எங்கிட்ட இருந்து பிரிச்சப்பதான் எனக்கு வலிச்சது. ஊர்ல இருந்த ஒரே நண்பன் உங்கப்பாதான் அவனும் பிரிஞ்சப்பதான் நான் தப்பு செய்திட்டேன்னு உறைச்சுது. இப்ப நான் தனிமைப்படுத்தபட்டுட்டேன்.நானும் உங்க்ப்பாவும் சின்னகுழந்தயிலைருந்து 50வருஷமா நண்பர்களா இருந்தோம் ஆனா இப்ப இந்த அற்ப விஷயத்திற்காக பிரிஞ்சிட்டோம்னா அது நன்னா இல்ல !
     ஐயா நான் ஒரு டீக்கடைக்காரன்னு ஒத்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டேன் ஊரே என்னை கேலி பண்ணும். ஆனா என் நட்பு அது உடையக்கூடாதுய்யா! இது நான் ரொம்ப நாளா யோசிச்சு எடுத்த முடிவு!.இத எப்படி சொல்லறதூ உங்கப்பாகிட்டன்னு தவிச்சுகிட்டு இருந்தேன்.நீயே வந்து என்னை பார்த்துட்டே இனி தயங்காம இந்த சமையற்காரன பத்தி உங்கப்பாகிட்ட சொல்லி அவர எங்கூட மறுபடி பேசச்சொல்லுவியாப்பா? அவர் குரல் உடைந்து அழ ஆரம்பித்துவிட்டார். அவர் செய்தது தவறுதான். அதற்கு தண்டணை நட்பு முறிவதுதானா? கூடாது. என்மனதை என்னவோ செய்ய ஓர் உந்துதலில் அவர் கையைப்பிடித்துக்கொண்டேன்.
      கவலைப்படாதீங்க மாமா நீங்க எப்பவும் போல மதிப்பா ஊருக்கு வந்துஅப்பாவ பாருங்க. இப்ப இந்த வேலைய வாங்கி தந்ததே நீங்கதான்! நாராயணா! என்ன சொல்ற எனக்கு ஒண்ணுமே புரியல? ரெண்டு நண்பர்கள சேர்த்துவைக்க ஒரு பொய் சொன்னா தப்பில்ல மாமா!. இப்ப நான் வேலையில் சேர்ந்துட்டேன் அதுக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்தான் இது. இந்த வேலைய நீங்க வாங்கி தந்ததா வீட்ல அப்பாகிட்ட சொல்லப்போறேன். நீங்க பழையபடி வீட்டுக்கு வரணும் உங்க மிடுக்கான நடைய நான் பார்க்கணும் என்றேன்.
     நாராயணா!.. அவர் வார்த்தை வராமல் அழ, அழாதீங்க மாமா! உங்ககிட்ட நான் எப்பவும் ஒரு மிடுக்கான தோரணையைத்தான் பார்த்திருக்கேன் இனியும் பார்க்கவிரும்பறேன் என்றேன்.
   அவர் கண்களை துடைத்தபடி டேய் நீ ரொம்ப பெரிய மனுசன்னு உணர்த்திட்டேடா! என்று என்னை தழுவிக்கொண்டார்.


Comments

Popular posts from this blog

தேவதை குழந்தைகள்!

அழிஞ்சில் மரம் தரும் ஆத்ம தத்துவம்!

வார மாத இதழ்களில் உங்கள் படைப்புகள் வரவேண்டுமா? பகுதி 2